Monday, June 2, 2025

நிலையுணர்ந்த நிதர்சனம்.

 பறவைகளின் பரந்த மனது. 

"ஏன் மெளனமாக இருக்கிறாய்? வந்ததிலிருந்து ஏதும் பேசவேயில்லையே..? களைப்பாக இருக்கிறதா?" 

"களைப்பு ஒருபக்கமிருக்கட்டும்.. எனக்கு ஒரே கவலையாக உள்ளது. மனதில் நிம்மதியே இல்லை." 

"ஏன்? உடல்நிலை ஏதும் சரியில்லையா? 

" பச்.. உடல் நிலை சரியில்லை யென்றாலும், யார்தான் நம்மை கவனிக்கப் போகிறார்கள்.? அந்த இயற்கையே நம்மை குணப்படுத்தி விடும். நாமும் எப்போதும் போல் அதுவரை பொறுமை காத்து விடுவோம்." 

"பின் வேறுதான்  என்ன?" 

"உனக்கு நம்மைச் சுற்றிலும் நடப்பது புரியவில்லையா? இல்லை, தெரிந்தும் தெரியாத மாதிரி கேட்கிறாயா.? 

"தெரிகிறது. அப்படியே தெரிந்தும் புரிந்தும் என்ன செய்ய முடியுமென்கிறாய்? இது முழுக்க நம்மை இங்கிருந்து விரட்டுபவர்களின் சுயநலன்கள்.! இதில் நம் நலனைப்பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்?" 

"அதோ அந்த மரத்தில் கட்டிய நம் வீடு இவர்கள் வந்து, இதுவரை இங்கு சுற்றிலும் செழித்து வளர்ந்திருந்த பச்சை பசும் நிலத்தை அவர்களின் வீடுகளை உருவாக்க வேண்டி, கொத்திச்சிதைத்து சமன் செய்த அமர்க்களத்தில், அதைக் கண்ட நம் பயத்தில், என்ன கதியாகி விட்டதென்று தெரியவில்லை அவர்களின் அந்த விரட்டலுக்குப் பயந்து, இப்போதைக்கு இந்தச் சின்ன செடியில் வந்து அடைக்கலமாகி உள்ளோம். விரைவில் இந்தச் செடியையும் களைந்து விடுவார்கள். பின் வேறு எங்கு போவது? "

" வேறு ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டியதுதான். அங்கும் இப்படித்தான் வந்து துரத்துவார்கள். அவர்களின் வீட்டில் இப்படியான துரத்தல்களுக்கு அவர்கள் வீட்டவர்களே பலியாகும் போது நம்மைப்பற்றி அவர்களுக்கு என்ன கவலை..!" 

" என்ன சொல்கிறாய்? " யார் யாரை அவர்கள் வீட்டிலிருந்து துரத்தினார்கள்?"

நமக்காவது இப்படி சேர்ந்து இருந்து பின் நம் வாரிசுகளை பெற்று அரவணைத்து ஊட்டி வளர்த்து அவர்கள் ஒரளவு வளர்ந்ததும் அவரவர்கள் செல்லும் பாதையில் போக விடை தருவது அந்த  கடவுள் தந்த நியதியாக உள்ளது. மேலும் இது நாம் இந்த உலகுக்கு வரும் போதே பெற்று வந்த வரம். ஆனால், இந்த மனிதர்களுக்கு, பெற்ற உறவுகள், பிற உறவுகள் என அன்புடன்  அரவணைத்துச் செல்லும் பண்பை இறைவன் ஊட்டி அவர்களை இங்கு வாழ படைத்திருந்தும், அவர்கள் அதைப்பின் பற்றி வாழ்வதையோ, வாழ வேண்டுமென்பதையோ நினைத்து கவலையுறாமல், அவர்களும், வளர்ந்தபின் நமக்கு இறைவன் வகுத்துத் தந்த பாதையிலேயே பயணிக்கிறார்கள். அதற்காகத்தான், அவர்களின் அந்த சுதந்திர  வசதிகளுக்காக ஏற்படுத்திக் கொள்ளும் தனித்தனி வீடுகளுக்காக, நம்மை, நம் இனத்தை, நம் சுதந்திரத்திற்கு இடையூறாக வந்து குறி வைத்து விரட்டுகிறார்கள். ஆனால், இதன் பலனை இறைவன் தரும் போது மட்டும் நொந்து கொள்வார்கள். என்ன செய்வது? எல்லாம் விதிப்பயன்.. .! 

அதோ பார்..! நம்மைப் போன்ற  ஓரினம் துணையை இழந்தோ, பிரிந்தோ தனிமையில் வாடுகிறது.மின்சார கம்பியில் மின்சாரம் நம் மீது பாயாத வேளை வரை இது மகிழ்ச்சிதான். ஆனால், அன்றொரு நாள் வேறு ஒரு நம்மினம் ...! அதுவும் அது மின்சார கம்பியில் வந்தமர்ந்த சட்டென்ற அந்த நேரம் என் கண்ணெதிரிலேயே...! அதன் முடிவும்..! அதைக்கண்டது முதல் இன்னமும் என் மனம் சரியில்லை. நமக்கென்று இந்த சோதனையை இறைவன் வகுத்தனா? இல்லை, இவையும் உலகில் அனைவருக்குமான விதியின் முடிவா? ஒன்றும் புரியவில்லை போ..! 

"பாவம் பரிதாபந்தான்..! அதைக் கண்டவுடன் உடனே சென்று காப்பாற்ற எந்த உபாயமும் நாம் கற்கவில்லயே.! . நீ சொல்வது போல இந்த  மனிதர்களின் கணக்கையும் ஆராய நாம் யார்? இறைவனின் மனக்கணக்கு அவர்களுக்கும் புரியாது. அப்படியே புரியும் போது, அவர்களின் வேதனை அவர்களுக்குத்தான். அதை மாற்ற அந்த இறைவனாலும் முடியாது. 

சரி... சரி.. வா..! கொஞ்சம் சற்று ஒய்வு எடுத்திருக்கிறோம். இப்போது நாம் பேசியதில், கொஞ்சம் மனதின் கவலையும், உடலின் களைப்பும் குறைந்துள்ளது. இனி வேற்றிடம் செல்ல நமக்கு மனதில் பலமும், உடலில் இறக்கைகள் என்ற ஆயுதத்தையும், நமக்கெனவே ஆதாயமாக தந்திருக்கிறார் அந்த இறைவன். அதைப் பயன்படுத்தி இப்போதைக்கு நல்ல மாற்றிடத்தை தேடிச் செல்வோம் வா..! "

கீழே பார்..! நம்மை அழிக்க காத்திருக்கும் இந்த மனிதர்களின் ஆயுதங்கள். அவை நாம் அமர்ந்திருக்கும் செடியை களைந்து அகற்ற வரும் முன், நம் கவலைகளை களைந்து  இறைவனிடத்தில் தந்து விட்டு இறைவன் நமக்காக  நமக்களிததிருக்கும் புது வாழ்வை ஏற்றுக் கொள்வோம். வா..! 


இப்படித்தான் அவைகள் பேசி இவ்வுலகில் வாழ்வதற்குரிய ஒரு விதமான மனமகிழ்வையும், தன்னம்பிக்கையையும் உருவாக்கி கொண்டிருக்கும் என்ற நம்பிக்கையின் பார்வைகளோடு, இப்புகைப்படங்களை எடுத்த நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.? பதிவை ரசித்த அனைவருக்கும் எனதன்பான நன்றிகள்.

Tuesday, April 15, 2025

வேலும் மயிலும் துணை



      இந்தப்படத்திற்கு உதவிய                கூகுளுக்கு நன்றி.                                                  


முருகா சரணம் 

முத்துக்குமரா சரணம். 

முக்கண் புதல்வா சரணம். 

கந்தா சரணம். 

கடம்பா சரணம். 

கார்த்திகேயா சரணம். 

கார்த்திகை பெண்களின் 

கண்ணானவனே சரணம். 

அறுமுகவா சரணம். 

ஆறு புஷ்பங்களில்

ஆதியில் தோன்றியவனே சரணம். 

பரமனின் குருவே சரணம். 

பார்வதி மைந்தா சரணம். 

மாலவன் மருகா சரணம்

வேலுக்குரியவா சரணம். 

தேவேந்திரன் மருமகனே சரணம். 

தெய்வநாயகி உடனுறையே சரணம். 

நம்பிராஜனின் மருமகனே சரணம். 

வள்ளியம்மை மணாளா சரணம். 

இத்தனை சரணங்களை உன்னிடம்

சமர்பித்தேன். நீ என்னுடன் 

சமர் செய்யும் விதியின் யுத்தத்தை 

சமப்படுத்தி, சமனப்படுத்தவும்

என்"நேரத்தை"பார்த்து சரி செய்யவும்

"நேரம்" காட்டும் கருவியேதும் 

உன்னிடத்தில் இல்லையா? 

நேரம் காலமென்ற ஒன்றை

நோக்காது உன் பக்தர்களுக்காக 

ஷண்முகா என்ற பெயர் உனக்கு 

பொருந்தி போகுமளவிற்கு

ஷணநேரத்தில் என்றும், நீ 

சடுதியில் வருபனாயிற்றே..! 

என் மனதின்  அருகா(ம)யிலும்

என் நினைவின் அண்மை(ம)யிலும்

நீ  எப்போதும் இருப்பதால், உன் 

பிரியத்திற்குகந்தந்த

மயில் வாகனமேறி, நீ

பிரியத்துடன் வருவதில் வேறேதும்

பிணக்குகள் உள்ளனவோ.? 

இல்லையெனில், இயைந்து நீயும்

விரைவினில் வந்திடப்பா.. என் 

வினைகளை போக்கிடப்பா.. உன்

வேலுடன் வந்திங்கே என்னை

வினைகளின் போரினிலின்று

வெற்றிக் கொள்ளச் செய்திடப்பா. 

"யாமிருக்க பயமேன்"என்றவன்

யாதுமறியாதவனாய் நிற்பதேனோ? 

சூதும், வாதும் தெரியாமல், விதியின்

சூழலில் பிணைந்திருக்கிறேன். 

வேலும், மயிலும் துணையென

நாளும், மனதில் துதித்திருக்கிறேன். 

ஆகையால் தவறாது வருவாய்.

 நாட்கடத்தாது வந்தருள்வாய். இந்த

ஆயுளுக்குள் உனைக் காணும் 

ஆனந்தத்தையும் தருவாய்

முருகா.. முருகா.. முருகா.. முருகா.. 

முருகா.. முருகா.. போற்றி. போற்றி. 🙏. 

இது என் பேத்தி (மகள் வயிற்றுப் பேத்தி) வரைந்த ஓவியம்.அவள் வரைந்த இந்த ஓவியமும் என் பதிவுக்கு (கவிதைக்கு) ஒரு மூலதனம். 

மேலும் இன்று "உலக கலை தினமாம்." அவளின் ஓவிய கலைக்கு உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் கூடவே கிடைத்தால் அவள் வளம் பெற்று வளர்வாள் என்பதாலும், அவளின் இந்த ஓவியத்தையும் இணைத்து விட்டேன். 

இந்தப்பதிவு இறைவனின் அயராத முயற்சிகளின், துணையால் உருவான முன்னூறாவது (300) பதிவு. பதிவுலகிற்கு வந்தவுடன் என் முதல் பதிவும் முருகனின் துணையால்தான் அரங்கேறியது. ஆதலால், முன்னூறுக்கும் அவனையே துணையாக அழைத்தேன். சரியென சம்மதித்து துணை வந்த அவனின் கருணைக்கும், அன்பிற்கும் கைமாறாக இன்னமும் அவனைப்பற்றி நிறைய பதிவுகள் எழுத அவன் துணை எப்போதும் வேண்டுமென பிரார்த்தனைகளும் செய்து கொள்கிறேன். 🙏. 

இந்தப் பதிவினையும் எப்போதும் போல் படித்துச் சிறப்பிக்கும் என் பாசமான சகோதர, சகோதரிகளுக்கு என் அன்பான நன்றிகளும்.🙏.

Sunday, March 30, 2025

இட்லிகளின் ராஜ்ஜியம்.

இன்று உலக இட்லி தினமாம்.

(30.3. 25.) 

நம் அன்றாட பாரம்பரிய உணவில் இந்த இட்லி எப்போதும் சிறப்பு மிக்கவைதான்..! ஒரு காலத்தில் அதற்கென்று ஒரு பிரத்தியோகமான தனி மரியாதை இருந்தது. ஒருவருக்கு உடம்புக்கு முடியவில்லையென்றால்,அவரை  குணப்படுத்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, "டாக்டர் மருந்துடன் நோயாளி ஆகாரமாக என்ன சாப்பிடலாம்?" என்ற கேள்விக்கு அக்காலத்திய மருத்துவர்கள் முதலில் இட்லியைத்தான் நல்ல உணவாக பரிந்துரைப்பார்கள். (பிறகு காஃபி, கஞ்சி.) (ஆனால், இட்லியை கண்டாலே முகம் சுளித்து எரிச்சல் அடைபவர்கள் இப்போது நிறைய பேர்.) அதுபோல் இப்போது  மருத்துவர்களும், "என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம்.." எனக் கூறத் தொடங்கி விட்டனர். ஏனெனில் இட்லியை புறந்தள்ளி நிறைய வெரைட்டி உணவுகள் வீட்டிலேயே இப்போது முதலிடத்தை பெறத் துடித்து வெற்றி கண்டு விட்டதால், இட்லி அவர்களுக்காக  கொஞ்சம் பெருந்தன்மையுடன் நகர்ந்து வழி விட ஆரம்பித்து விட்டது. ஆயினும் இன்னமும், பல பெரியவர்களிலிருந்து சில குழந்தைகள் வரை இட்லியை விரும்பி சாப்பிடுவதையும், சில உணவகங்களில் பார்த்திருக்கிறேன்.

இந்த இட்லிக்கு ருசியாக அரைப்பதில் அந்த காலத்தில் கல்லுரலுக்கு பெரும் பங்கு இருந்ததது. அப்போதெல்லாம் சிலர் வீட்டில் தினமும் இட்லிக்கு அரைப்பதை ஒரு வழக்கமாக வைத்திருந்தனர். ஒரு குறிப்பிட்ட மாலை நேரத்தில் கல்லுரலின் "கடமுடா சத்தம்" ஒவ்வொரு வீட்டிலும் முழங்கும். (எங்கள் பிறந்த வீட்டில் எங்கள் அம்மா காலையிலேயே இட்லிக்கென அரிசி அளந்து ஊற வைத்து விடுவார்.) வீட்டில் தினமும் காலை அக்கப்போர்கள் ஏதுமில்லாத, ஆனால், போரடிக்காத இட்லிதான். வாரத்தில் ஒருநாள் அது தோசையாகவோ, பருப்புகள் சேர்த்தரைத்து அடையாகவோ மாறினால், அது அதிசயம். ஏனெனில் இட்லி எளிதில் ஜீரணமாகும் ஒரு உணவு (வஸ்து.) என்பதால், அதுதான் அப்போதைய குழந்தைகள், பெரியவர்களென வீட்டிலிருக்கும் அனைவருக்கும் உகந்ததாக இருந்தது. . 

நாளடைவில், தினமும் இட்லிக்கு அரைத்து செய்வது அனைவருக்கும் பெரும் சோம்பலாக தோன்றியதால், வேறு ஏதாவதை காலை சிற்றுண்டியாக மாறுவதற்கு வாய்ப்புகளை தந்தனர். அதற்கு பிற தானியங்கள் சந்தோஷமாக சம்மதிக்க, அவற்றின் உதவியுடன் உப்புமாக்கள்,  தோசைகள், சப்பாத்தி, பூரியென அவைகள்  பூரிப்புடன் வலம் வந்தன. எனினும் காலை நேரத்தில் இட்லியின் சௌகரியம் பிடித்து போன பிறகு மற்ற உணவுகளை தயாரிக்கும் போது ஏற்படும்  சிரமங்கள் கண்டுணர்ந்ததில் வீட்டில் பெண்கள் அனைவருக்கும் சிறிது முகம் கோண செய்தது. 

பிறகு மாவரைக்கும் பெரிய, கனமான கிரைண்டர்( யந்திரம்) வந்தது. அது வீட்டுக்கு வீடு அவ்வளவாக பரவாத காலத்தில், ஒரு சிறு கைத் தொழிலாக பலருக்கும் வேலை வாய்ப்பைத் தந்தது. வீட்டின் ஒரு இடத்தில் நாலைந்து மெஷின்கள் வாங்கி போட்டுக் கொண்டு மாவரைத்து கொடுப்பதில் மக்கள் வீட்டிலிருந்தபடியே கொஞ்சம் வருமானமும் பார்த்தனர். 

காலை நம் வீட்டில் இட்லிக்கு தேவையான அரிசி, பருப்பு போன்றவற்றை ஊற வைத்து, மதியம் அங்கு கொண்டு தந்தால், அன்று மாலை/ இரவுக்குள் இட்லி மாவு வீட்டில் வந்து சேர்ந்து தயாராகி, மறுநாள் காலை உணவுக்கு அது இட்லியாக வரும் இந்த விந்தை அனைவருக்கும் பிடித்துப் போனதில் மறுபடியும் வெற்றிக் கரத்துடன் இட்லிகள் கொடி பிடிக்க ஆரம்பித்தன. 

பின்பு வீட்டுக்கான அளவுடன்  சின்னதாக, நவீனமான பல மாவரைக்கும் யந்திரங்கள் வந்த பின் அதில் வீட்டிலேயே கொஞ்சமாகவோ, இல்லை இரண்டு, மூன்று நாட்களுக்கெனவோ இட்லி மாவு தயார் செய்து குளிர் சாதன பெட்டியில் பாதுகாத்து, மக்கள் பயனுற ஆரம்பித்தனர். 

அதன் பின் வந்த காலகட்டத்தில், அவ்விதம் அதைச் செய்யவும் நேரமில்லாமல், நேரங்களுடன் போராடுகிறவர்கள், உடல் நிலைகள் முடியாதவர்கள் என பலரும்  பாக்கெட்டுகளில், தயாராகி வரும் மாவு வாங்கி அதில் இட்லி, தோசை என்ற பயன்களை கண்டனர். எப்படியும் இட்லிகளின் ராஜ்ஜியம் தரையிறங்கவில்லை. 

"பட்டனை தட்டினா இரண்டு இட்லியுடன், கெட்டி சட்னி வர வேண்டும்" என்ற அந்தகாலத்தில் கலைவாணர் என். எஸ் கிருஷ்ணன் , அவர் மனைவி டி. ஏ மதுரம் அவர்கள் பாடிய நகைச்சுவை பாடல் இன்று பொய்த்துப் போகாமல், மெய்யாகி வருகிறது. இட்லி அரிசிக்கோ ,அதை அளவுடன் ஊற வைத்து பக்குவமாக அரைக்கும் மாவுக்கோ, என எதற்கும் கவலைபடாமல், பட்டனை தட்டினால் பறந்து வரும் இட்லிகள் வந்து விட்டன. (அது எப்படியிருக்குமோ என நான் இன்னமும் பரிசோதிக்கவில்லை.) சாப்பிட்டவர்களுக்குத்தான் அதன் சுவையும், தரமும் புரிந்திருக்கும். இது மனித சோம்பலின் கடைசி படிக்கட்டை எட்டிய விஞ்ஞான யுக்தியின் முயற்சி என நினைக்கிறேன். விஞ்ஞான வளர்ச்சியை இப்படியெல்லாம் வருமென கற்பனையில் பாடி, பேசி நடித்த அவர்களின் (கலைவாணர், அவர் மனைவி) பேச்சுக்கள் உண்மையாகி விட்டது. 

அனைத்து உணவகங்களிலும், மற்ற உணவுகளோடு, இட்லி, சட்னி, சாம்பார், இட்லிமிளகாய்பொடி தடவிய நெய் இட்லி, நம் விருப்பப்படி சிறு துண்டுகள் செய்த லேசாக வறுத்த ப்ரைடு இட்லி, வெங்காயம், காய்கறிகளுடன் இணக்கமான காய்கறி மசாலா இட்லி, சாம்பாரில் தோய்ந்த மினி நடனமாடும் மினி இட்லிகள் என்ற பல விதங்களோடு இட்லிகள் இன்னமும் பவனி வந்து கொண்டுதான் உள்ளது. 

இட்லி ரவையுடன் உளுந்து மாவை அரைத்து சேர்த்து செய்யும் இட்லிகள் சிலசமயம் ருசியாக அமைவதில்லை. எப்போதும் போல் இட்லி அரிசியை ஊற விட்டு அரைத்துச் செய்யும், இட்லிகள் என்றுமே சோடை போனதுமில்லை. இன்றும் இட்லியின் சிறப்புக்காகவே பிரபலமான உணவகங்கள் உள்ளன. 

இன்னமும் இந்த இட்லிகளின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், இட்லி தினம் என்ற ஒன்று  முடிந்து விடும் என்பதால் நிறுத்திக் கொள்கிறேன்

எப்படியோ உலகில் வந்த நாள் முதல் நம்முடன் இணைபிரியாது அன்று தொட்டு, இன்று வரை இணைந்து வரும் பாரம்பரியமான இட்லிகள் என்றும் வாழ்க...! 

இந்தப்பதிவை ரசித்துப் படிக்கும் சகோதர, சகோதரிகளுக்கு என் அன்பான நன்றிகள். 🙏. 

Wednesday, March 19, 2025

விதி வலியது.

அகோ வாரும் பிள்ளாய்..! அதாகப்பட்டது இந்த விதி ரொம்பவே பலமானது...!வலியது..! வலிமையானது..! உண்மைதானே..! 

அந்தக்காலத்தில் தேவர்கள், இறைவனார்கள், முதற்கொண்டு, செல்வ செழிப்புடன் சிறப்பாக கொடி கட்டி வாழ்ந்த அரசர்கள், பக்குவப்பட்ட மாந்தர்கள், மகான்கள் என அனைவரையுமே "விதி" என்பது தலைகீழாக புரட்டி எடுத்து விட்டு சந்தோஷமடைந்திருப்பதை எத்தனை புராணங்களில், பழங்கால கதைகளில் பார்த்துள்ளோம். "விதி வலியது. அதை வெல்ல இயலாது என்று கூறும் போது சமயங்களில், நம் மதியில்னால்தான் ஒரு செயல் நடந்தது/நடக்கிறது/ நடக்கப் போகிறது என சிலர் பெருமை கொள்கிறார்கள். ..! இது அசட்டுத்தனமல்லவா..! என எனக்கு எப்போதும் தோன்றும்." விதியை, மதியால் வெல்வதற்கு, அந்த விதியும் சற்று  வளைந்து தந்தால்தான் அது (அதாவது நாம் நினைத்த மாதிரி ஒரு செயல் நடப்பதென்பது...! ) நிறைவேறும். இது காலங்காலமாய் செயல்பட்டு வருவதல்லவா..? 

சரி இப்போது இந்த "விதி" புராணம் எதற்கென்றால், தினமும் ஒரு செயல் அது பாட்டுக்கு தேமேன்னு நடந்து கொண்டிருக்கும் போது, அது மாறுபட்டால், அதன் பெயர் "விதி"யின் செயல்தானே...! 

சென்ற புதனன்று காலை உணவு முடிந்ததும், மதிய சாப்பாட்டிற்கு சுத்தம் செய்து பாலக் கீரையை அரிந்து கொண்டிருந்த போது,  இயற்கை அழைப்பிற்கு கட்டுப்பட்டு குளியலறைக்கு சென்றவள், கால் அலம்பி வெளியேறும் போது, அந்த ஈர கால்களோடு, என்  (விதியின்) செயல்பாடும் உடன்பிறப்பாக வந்து சேர்ந்து கொள்ளுவோமென்று சற்றாவது அந்த "விதி" எச்சரித்திருக்க கூடாதா? (அதற்குதான் பேச தெரியாதே..! செயல்பாட்டில் மட்டும் தன் வேகத்தை காட்டி விட்டு சந்தோஷபட்டுக் கொள்ளும்.) விளைவு, படி தாண்டி கால் வைத்து, ஈரக்கால் வழுக்கியதில், கீழே கோணலும் மாணலுமாக விழுந்ததில் பல இடங்களில் நல்ல அடி எனக்கு மட்டுந்தான். (அப்போது குளியலறை  வாசலில் இருக்கும் மிதியடியில் கால் வைத்து நான் கால்களின் ஈரம் ஆற்றக்கூடாதா என உங்களுக்குத் தோன்றும். ஆனால், அந்த மிதியடியும் அப்போது விதியின் பக்கம் பலமாக சாய்ந்து அப்புறப்படுத்தபட்டிருந்தது...) எனக்கு காதில் விழாது என்ற சந்தோஷத்தோடு, அந்த "விதி" கைகொட்டி சிரித்திருக்கும் 

அத்தோடு "அப்போது வீட்டில் யாருமில்லை.. அனைவரும் அவரவர் வேலையாக வெளியில் சென்றுள்ளனர் என்ற தைரியமும் அதன் (விதியின்) கூடுதல் சந்தோஷம்." ஆங்காங்கே பட்ட அடிகள்... அடிகளுக்கு கிடைத்த வேதனை என்ற பரிசுகளோடு நான் எழவே சிறிது நேரம் பிடித்தது. மெள்ள தைரியத்தை வரவழைத்துக் கொண்டு (உனக்கு மட்டும்தான் தைரியமா? எனக்கும் சிறிதளவு இருக்கக் கூடாதா..? என்று கண்ணுக்கு மறைவாக இருக்கும் விதியுடன் பேசியபடி சிரமத்துடன் எழுந்தேன்.) அப்படியே சிறிது நேரம் சமையலை புறக்கணித்து அவர்களுடனே வெளியில் சென்றிருந்தாலும், விதி வெளியிலேயே ரோடில் வழக்கப்படி விழவைத்து, வேறென்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்குமோ. .? என அத்தனை வலியிலும் நினைத்துக் கொண்டேன். 

ஹாலுக்கு வந்தவுடன், உடனே கைவசம் இருக்கும் அயோடக்ஸ், நீலகிரி தைலம் என மருந்துகளை தேடி எடுத்து எனக்கு கிடைத்த வெகுமதிக்கு கூலியாக்கினேன். கால் மணி நேரம் வலிகளை,எங்கெங்கு என நிர்மாணித்து / தீர்மானித்து உபயோகிக்கும் போது,  "நல்லவேளை..! ரத்த காயங்களை தராமல், பிசகு, குளியலறை படியில் இடுப்பு, மூட்டு என அடிபட்ட கடுமையான வலியை மட்டும் தந்தமைக்கு, இறைவனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டேன்." 

மேலும், ஒரு கால் மணி நேரம் அமர்ந்திருத்து விட்டு பின், கைகளை சுத்தம் செய்து கொண்டு பாக்கி நறுக்காமல் இருந்த "பாலக்கை" பொடிதாக அரிந்து கடாயில் கொதிக்க வைத்து, ஏற்கனவே வெந்திருந்த பாசிப்பருப்புடன் கூட்டு செய்ய ஒரு தேங்காயையும் உடைத்து துருவி மிக்ஸியில் அரைத்து சேர்த்து கூட்டாக்கி விட்டு. குக்கரில் சாதத்தையும் வைத்து விட்டு நிமிர்ந்தால், நிமிரவோ, குனியவோ முடியாமல், பின் இடுப்பு வலி (முதுகு தண்டின் அடிபாக எலும்பு.) அதிகமாக தெரிந்தது. கூடவே, வலது கால் மூட்டு, வலது கால் பெருவிரலோடு சேர்ந்து கால் பாதம் என அனைத்து இடங்களும், சுளுக்கு வீக்கம், வலி என போட்டிப் போட்டுக் கொண்டு "விதி"தன் வெற்றியை கொண்டாட ஆரம்பித்தது. 

ஆகா..! வெளியில் சென்றிருந்தவர்கள் வந்தால், "கவனமாக இருக்க வேண்டாமா." என்ற திட்டு வேறு கிடைக்குமே என்ற படபடப்பில், நேரங்கள் நகர்ந்து அவர்கள் வரவும் ஆயிற்று. 

வெளியிலிருந்து வந்தவர்களிடம், விதியின் விளையாட்டை விவரித்தப்பின், வலிகளின் கோர முகங்களும் மூன்று நாட்களுக்கும் மேலாகவே கடுமையுடன் தொடர்ந்தன. நீ.கி,தைலம், அயோடக்ஸ் போன்ற தொடர்ந்த மருந்தோடு, வெந்நீர், ஐஸ்பாக்ஸ் ஒத்தடங்களோடு எனக்கு தினமும்  பெரும்பாலும் மன  ஆறுதலை தந்தது உங்கள் அனைவரின் பதிவுகள்தாம்...! அனைவரின் பதிவையும், படித்து கருத்திட்டு என் வலிகளை தாங்கினேன் என்றால்  அது மிகையல்ல..! நிஜமான உண்மை. 

எப்போதும் போல் ஐந்தாறு  நாட்கள் நொண்டியடி நடந்து என் கடமைகளை செய்து கொண்டேதான் இருக்கிறேன்.  பழைய வலி இல்லாத நாட்களை மீண்டும் எதிர்பார்த்தபடி...!  

வந்து விடும் அந்த வலியில்லாத நாட்கள்.. ஏனெனில், நம் உடலை, நம் உடலே சரி செய்து கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு இறைவன் தந்த ஒரு வரம். அந்த வரம் என் வாழ்வின் இறுதி வரை தொடர வேண்டுமெனவும் இறைவனை அன்போடு பிரார்த்திக்கிறேன். 

பதிவின் முதல் வரிகள் எத்தனை உண்மையானதென இப்போது கூறுங்கள்

இப்போது சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவை படித்துப் பார்த்ததும், அவர்களுக்கு ஏற்பட்ட விதியின் உபத்திரவங்களை எண்ணி மனம் மிகவும் வருத்தப்பட்டது. தீடிரென எதிர்பாராமல் விளைந்த அவரின் கால் வலியும், வேதனையும் விரைவில் சரியாக வேண்டுமென இறைவனிடம்  பிரார்த்தனைகள் செய்து கொண்டேன். 

ஒருவரின் பிரார்த்தனைகள் கண்டிப்பாக  அவரின், மற்றும், மற்றையவர்களின் உடல், மன நலன்களை குணப்படுத்தும் என்ற நம்பிக்கை (இன்று எ. பியிலும் கேள்வி பதிலில் இது இடம் பெற்றுள்ளதை படித்தேன்.) எனக்கு நிச்சயம் உண்டு. 

இன்றோடு எட்டு நாட்களும் கடந்து கொண்டிருக்கிறது. ஏனோ உங்களிடமும் இதை சொல்ல வேண்டுமென தோன்றியதால், இரண்டு நாட்களுக்கு முன்பு எழுதியதை இப்போது நிறைவு செய்து  இங்கு பகிர்கிறேன்.

படிக்கும் நட்புறவுகள் அனைவருக்கும் அன்பான நன்றிகள் .🙏

Tuesday, February 18, 2025

கேள்வி பதில்கள் தொடர் பதிவு.

இதை அப்போது எழுதிய நாள். வருடம். ஜுலை. 6, 2014. 

வெளியூர் பயணங்களில் என் எழுத்துப்பயணம் தடைப்பட்டிருந்த இரு வாரங்களில், இந்த "என் கேள்விக்கென்ன பதில்" தொடர் பதிவில், என்னையும் பத்தோடு ஒன்றாக, பதிந்திருந்ததை (பெயர் பட்டியலில்) சகோதரர் கில்லர்ஜியின் பதிவை பார்த்தறிந்தும் சற்று சந்தோசம் கலந்த திகைப்புக்குள்ளானேன்.

சந்தோஷம்…. என்னையும் மதித்து நட்பு வட்டத்தில் சேர்த்திருப்பது.!!!

திகைப்பு…. இந்த கேள்விகெல்லாம், தகுந்தாற் போல் என்னால் பதில் அளிக்க  இயலுமா?

பதில் எழுத அழைத்த அவரது அழைப்பை தட்ட இயலாமலும், காலம் கட(மற)ந்த ஒரு கதையை எப்படி மீண்டும் தொடர்வது என்று குழப்பமாகவும், இருந்தாலும், ஒருவாறு மனதை தேற்றிக்கொண்டு கேள்விகளுக்கேற்ற பதில்களை உருவாக்கி,  (நன்றாகத்தான் சமாளிக்கிறாய..! வேறு ஒரு பதிவை திரட்ட முடியாததை, எப்படியெல்லாம் பூசி மெழுகுகிறாய்? உன்னை……! என்று மனசாட்சி பல்லை நறநறவென்று கடிக்க..!) சரி! இதுவும் ஒரு பதிவாகத்தான் இருக்கட்டுமே! என்ற எண்ணத்தில், எழுதி வெளியிட்டு விட்டேன்.

வலையுலகில் அறியாத பல நல்லதோர் விலாசங்களையும், இந்த தொடர் பதிவின் மூலம் அறிந்து கொள்ளும் வாய்ப்பை உண்டாக்கிய சகோதர, சகோதரிகளுக்கு என் பரிபூரணமான, நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாக என் வலைப்பூவிற்கு வந்து கருத்து கூறியவர்கள் / கூறுபவர்கள்  மிகவும் குறைவு! நானும் நிறைய வலைத்தளத்திற்கு சென்றதில்லை, என்பதையும் பணிவுடன் இங்கு கூறிக் கொள்கிறேன். இருப்பினும், இது ஒரு சந்தர்ப்பமாக (என்னையும் சேர்த்து, அனைவருக்குமே) அமையாதா? என்ற நப்பாசையும் என்னை எழுத தூண்டியது!

    இதோ! கேள்விகளுக்கான, என் பதில்களை, விமர்சிக்கும் உள்ளங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

உங்களுடைய 100 ஆவது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

முதலில் 100 ஆவது வயதை தொட விருப்பமில்லை! இந்த நிமிடமே ஆனாலும், நல்லபடியாக ஒருவருக்கும் தொந்தரவு தராமல், (என் உடலுக்கும்) என்னுயிர் பிரிய வேண்டுமென ஆசைபடுகிறேன். ஆயினும் விதியின் சதியால் அந்நிகழ்வு (100 ஆவது வயதை தொடுவது) நடந்தால், பிறந்த நாளுக்கு முன் தினம், இதை வழக்கப்படி தினசரி நாளை போலவே கழித்து விடலாமா? அல்லது வித்தியாசமாக சிறப்பாக கொண்டாடலாமா? என்று வீட்டிலிருக்கும் அனைவருடனும் கலந்து ஆலோசிப்பேன். அதற்கு முதலில் என் வீட்டின் அத்தனை உறவுகளும் நலமாவும், புத்துணர்ச்சியோடும், இருக்க வேண்டும். என் யோசிக்கும் திறனும், நானும், நல்ல நிலையில் இருக்க வேண்டும். பிறகு….,,, (அட! இத்தனை ஆசையா உனக்கு? ஒரு பேச்சுக்கு எழுத சொன்னதற்கே, இப்படி நீட்டி முழக்கிறேயே!! உன்னையெல்லாம் விட்டு வச்சா இந்த உலகம் தாங்காது. சட்டுபுட்டுனு சுருட்டிகிட்டு போக வேண்டியதுதான்! )என்று காதருகே சிறு முணுமுணுப்பு கேட்கவும் எழுதுவதை நிறுத்தி சடாரென்று திரும்பினேன்! யாருமேயில்லை! (அதன் பின்தான் புத்தியில் உதித்தது! காதருகே பேசி சென்றது என் விதியென்று!!.) இனி 100 ஆவது எல்லாம் சான்ஸே இல்லீங்க! பின்னே எங்கேயிருந்து கொண்டாட்டம்!!!!. 

     என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?

ஒவ்வொருவரும் தத்தம் அனுபவங்களிடமிருந்துதான், ஒவ்வொரு பாடமாக கற்றுக் கொள்கிறோம். நானும்அப்படித்தான்! ஆனால், கனிணியின் மூலம் இணையத்தின் வாயிலாக எழுத்துலகில் பிரவேசித்த பின் இதில் நிறைய கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன். சந்தர்ப்பங்கள் சுலபமாக என்னுடன் இணைந்து வர அந்த இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

சிரிப்பு என்பது ஒரு வரப்பிரசாதம். “சிரிப்பும் புளிப்பும் சிறிதுள” என்று என் பாட்டி அடிக்கடி கூறுவார்கள். “என்ன அர்த்தம்”? என்று நான் கேட்க “புளிப்பு ஒரு வயதுக்கு மேல் நம் உடம்புக்கும், பற்களுக்கும், ஒத்து வராது. அதுபோல் வாய் விட்டு சிரித்தலும், ஒரு வயதின் வரம்பு வரைதான். அதன்பின் அனாவசியமாக எதற்கெடுத்தாலும் சிரிக்காது, அடக்கி, புன்னகைக்க மனம் பக்குவபட்டு விடும்.” என்று கூறுவார்கள். பாட்டி சொன்னது அந்த காலத்தில், எனினும், அது என்னை பொறுத்த மட்டில் உண்மைகளாக போய் விட்டன. ஆனாலும், சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு, அனைவரிடம் சிரித்து பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். இதில் கடைசி என்பதேது?

24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

முன்பெல்லாம், மாதம் ஒரு முறை அந்த நிலையை சந்தித்திருக்கிறேன். இப்போது தங்கியிருக்கும் இடத்தில் அந்த நிலை கடவுள் புண்ணியத்தில் இல்லை! அப்படியாகும் பட்சத்தில், காலையிலிருந்து மதியம் வரை வீட்டு வேலைகளே பொழுதை போக்கி விடும். மதியம் புத்தகங்கள் படிப்பது, பழைய நினைவுகளை கண்மூடி அசை போடுவது, நடுவில் ஒரு குட்டித் தூக்கம், (அப்படி கண்மூடினால் அது“தானே”வரும்.) (“சமைப்பது, துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது, போன்ற வீட்டு வேலைகளை செய்து முடித்து விட்டு, எனக்குள்ளேயே, “இந்த வேலைகளை செய்யவே 24 மணி நேரமே போதாது! சே! என்ன வேலைகளோ”!!! என்று புலம்பும் போது, புலம்பல் தாங்காது கரண்டே வந்து விடுமே!!!:)) )

உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?

திருமணத்தன்று எவ்வளவு மகிழ்ச்சியோடு இருந்தீர்களோ! அதே மகிழ்ச்சியை, தினமும் தக்க வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரனையோடு நடந்து கொண்டால் அந்த சந்தோஷம் தினமும் உங்களை வந்தடையும்!” என்று மனதாறச் சொல்லி அவர்களை வாழ்த்துவேன்.

உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால், எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புவீர்கள்?

ஒவ்வொரு வீட்டிலிருந்து ஆரம்பித்து, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு, தேசம் என்று அனைத்துவிடங்களிலும், மனிதரை, மனிதர் நேசிக்கும் மனிதாபிமானம், உறவுகளை நேசித்தல், ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு, அன்பு பரிமாற்றம், மரியாதையுடன் பழகுதல், போன்ற நற்பண்புகளை நாம் வளர்த்துக் கொண்டால், உலகத்துக்கென்று எந்த பிரச்சனை வரப் போகிறது? இயற்கையின் பிரச்சனைகள் என்றால், மனிதரின் இந்த இயற்கையான குணங்கள் அதை ஒரளவு சரி செய்தும் விடுமென நினைக்கிறேன்.  

நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டு, அதில் எது சிறப்பாக இருக்கிறதோ! அதன்படி செயலாற்ற முனைவேன். மற்றபடி நடப்பதுதான் நடக்கும்.! நம் மனதின் முடிவின்படியோ, இல்லை மற்றவர்களின் யோசனைபடியோ செயலாற்றினாலும், செயலாற்ற முனைந்தாலும், விதி, நம் யாருடைய அட்வைஸையும் கேட்டு நடக்காது என்பது என் ஆணித்தரமான நம்பிக்கை. (பொதுவாக அட்வைஸ் என்பதை, பிறரிடம் பெறுவதே அனைவருக்கும் பிடிக்காத ஒன்று. அதற்கு யாரும் “விதி” (யும்) விலக்கல்ல! )

உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால், என்ன செய்வீர்கள்?

தவறான தகவலை காலம் ஒரு நாள் திருத்தி காட்டும் என்ற நம்பிக்கையில், பொறுமையுடன் இருப்பேன். வேறு வழி! தவறான தகவலென்று கத்திக் கதறிச் சொன்னாலும், கேட்பவர் அதை காது கொடுத்து கேட்காத வரை, (நம் காலம் கனியாத வரை) நம் மனதும் உடம்புந்தான், மேற்கொண்டு புண்ணாகும். ( நான் மிகவும் நல்லவள் என்பதற்கு இதை விட வேறு அத்தாட்சி வேண்டுமா?)

உங்கள் நண்பரின் மனைவி இறந்தால், அவரிடம் என்ன சொல்வீர்கள்?

"உண்மையாக நேசித்து வாழ்ந்து வரும் ஒரு தம்பதியரை விதி தன் கூரிய வாள் கொண்டு இரு கூறாக பிரித்து சந்தோசபட்டுக் கொள்கிறது. ஏனென்றால் அதன் பொழுது போக்கே அதுதான்.! “ஆற்றின் அக்கரையில் பிரசவ வேதனையில், துன்புறும் தன் மகளை காக்க, ஆற்றில் கரை புரண்ட வெள்ளத்தின் காரணமாக, விரைந்து செல்ல இயலா தன் நிலை குறித்து கலங்கி கதறும், ஒரு தாய்மைக்காக, “தானே” ஒரு பெண்ணாக உருமாறி, அதுவும் அந்த தாயின் வடிவிலேயே மாறி, அவள் மகளுக்கு உதவி செய்து காத்து, “தாயுமானவன்” என்ற பெயருடன் பூமியில் நிலை கொண்டார் அந்த பரமேஸ்வரன்.” இனி உங்கள் குழந்தைகளுக்கு அவரைப்போல் தந்தையோடு மட்டுமல்லாது, “தாயுமானவனாய்” இருந்து உங்கள் கடமைகளை அவர்களுக்கு செய்து வாருங்கள்!” என்று எனக்கு தெரிந்த வரை ஆறுதல் கூறுவேன்.

குழந்தைகளற்ற நண்பரென்றால் வேறு விதமாக ஆறுதல் அளிக்க வேண்டியதுதான்.! ஆனால், “ஆறுதல்” என்பது மனப்புண்ணின் எரிச்சல் அகற்றும் சிறு காற்றுதான். மற்றபடி உருண்டோடும் காலங்கள்தாம், முடிந்தால் அவரை தேற்ற முயற்சிக்கும்.  

உங்கள் வீட்டில் தனியாக இருந்தால், என்ன செய்வீர்கள்?

எனக்கு வீட்டின் வேலைகளே பெரும்பாலும் சரியாகவிருக்கும்.! அதுவும் முடிந்து விட்டால், ஏதாவது புத்தகம் படிப்பது, கைவேலைகள் (சுவரில், நிலைப்படியில்,சம்கி வைத்து ஏதாவது தைப்பது, ஒட்டுவது,  என்று தனிமையை போக்க செய்து, “வீட்டை அலங்கோலமாக்குகிறாயே!” என்று அனைவரிடமும் திட்டுகள் வேறு வாங்கி, தனிமையை சமாளித்திருக்கிறேன்.) செய்வது, என்று தனிமையை விரட்டிய காலம் போய் இன்று எதையாவது எழுதிக் கொண்டும், நடுவில் டி.வி யுமாக, தனிமையை போக்குகிறேன்.

இதற்குள் இந்த தொடர் பதிவில் வலைத்தளத்தின் உறவுகள் அனைவரும் இணைந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்

######################################

வணக்கம் அனைவருக்கும்.

இன்று சகோதரி கோமதி அரசு அவர்களின் வானொலி பதிவை கண்டதும், அவர் கூறிய அந்த கேள்வி பதில், சுற்றுத் தொடரில் நானும் கலந்து கொண்டது நினைவுக்கு வந்தது. ஆனால் அதை எடுத்து படிக்கும் போது, அவர் அளவுக்கு அருமையான பதில்களை நான் தந்திருக்கவில்லை என்பதை புரிந்து கொண்டேன். அப்போது அவரின் அறிமுகமும் எனக்கில்லை. ஆனாலும் அன்று என்னையும் பெருமைபடுத்திய நட்புள்ளங்களுக்கு எப்படி நன்றி சொல்லப் போகிறேன் எனத் தெரியவில்லை.

அன்று ஏதோ சமாளித்து எழுதியது இன்று கோமதி அரசு சகோதரியின்  பதிவை படிக்கும் போது நினைவுககு வர இது மீள் பதிவாக மீண்டும் இன்று என் வலைப்பூவில் உருப்பெறுகிறது. "உனக்கு இது ஒரு பதிவை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் என புரிகிறதென " என் மனது உறுதியுடன் சொல்கிறது. இப்படியான  நிர்பந்தங்களினால், சகோதரி கோமதி அரசு அவர்களின் பதிவோடு, பதிவாக, பத்தோடு பதினொன்றாக இதுவும் இங்கே அரங்கேறுகிறது. 

அன்று மனதில் எழுந்த எண்ணங்களை மட்டும் அப்போதுதான் கற்றுக் கொண்ட டேபிள் டாபில் எப்படியோ தொகுத்து தந்த நான் இன்று  கைப்பேசியில், வண்ணங்களையும்  இணைத்து தந்துள்ளேன்.  இது ஒன்றுதான், பத்து வருடத்தில் நான் பெற்ற முன்னேற்றம்.இதை நவிலும் போது  சற்று நாணமாகத்தான் உள்ளது. எனினும், இப்போது உங்கள் அனைவரின் ஊக்கம் நிறைந்த அன்புகளை பெற்ற பெருமிதத்தில் மகிழ்வெய்தியிருக்கிறேன். 

அன்று பதிவுக்கு வந்து பதில் தந்து வாழ்த்தியவர்களுக்கும், இன்று பதில் தந்து வாழ்த்தப் போகிறவர்களுக்கும் என் பணிவான நன்றிகள்🙏.