Sunday, September 15, 2024

எதிர்பாராத தருணங்கள்.

சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். 

கடந்த நான்கைந்து நாட்களாக என்னால் வலைத்தளத்திற்கு வர இயலவில்லை. அதற்கு அனைவரும் மன்னிக்கவும். 

கடந்த புதனன்று எதிர்பாராதபடி எங்களுக்கு ஒரு கோவில் பயணமொன்று அமைந்து விட்டது. திங்கள் மாலை தீடிரென திட்டமிட்டபடி அப்பயணம் புதன் அன்று காலை கிடைத்தது. அது இறைவனின் அற்புத செயல்களில் ஒன்றாகும். அப்பயணம் தந்த அலைச்சல்களில, எனக்கு சிறிது உடல்நலக்குறைவு என்றால், எங்கள் பேத்திக்கு( மகளின் மகள்) வெள்ளி காலையில் இங்கு வந்த பின் நல்ல ஜுரம். பாவம்..! அந்த அலைச்சலில் அவளுக்கும் உடல்நலக் குறைவு வந்து விட்டது. எங்களிடம் கைவசம் இருந்த மருந்துகளை தந்தும், குணம் ஆகாததால், நேற்று மருத்துவரிடம் சென்று காண்பித்து வந்த பின் இன்றுதான் எழுந்து அமர்ந்திருக்கிறாள். அந்தக் கவலைகளிலும் என்னால் எப்போதும் வருவது போல் முறையாக வலைத்தளத்திற்கு வர இயலவில்லை. அனைவரும் மன்னிக்கவும். 

ஒரு சிறு குன்றிருக்கும் இடமெல்லாம் ஆட்சி செய்வதும், அருள் புரிவதும் குமரன் என்பது பழங்கூற்று. ஆயினும், அனேக மலைகளும் "அவன்" வாசஸ்தலங்கள்தாம்.அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சில மலைகளும், அவன் தந்தைக்கும், மாமனுக்கும் பெயர் பெற்றவையாகும் என்பதும் யாவரும் அறிந்ததே..!  மலைகளின் அழகும், அதன் தரிசனங்களும் நம் மனதிற்கு மகிழ்வூட்டுபவை. ரசிக்க வைப்பவை. அப்படி ரசிக்க வைத்த ஓரிடத்திற்கு செல்லும் வாய்ப்பு தீடிரென சற்றும் எதிர்பாராமல் இறைவன் அருளால் கிடைத்தது. அதற்கு இறைவனுக்கு கோடானுகோடி நன்றிகள். 🙏. 



இந்த ஒரு மலை அல்ல.... 

இந்த இருமலைகளும் மட்டுமல்ல... 


ஏழு மலைகளும் ஒன்று சேர்ந்து கூடுமிடமாகிய... 


அந்த ஏழுமலையானின் தரிசனம் அவனருளால் கிடைத்தது. 


அந்த ஏழுமலைகளுக்கும் அதிபதியான ஸ்ரீ வெங்கடேச பெருமாளின் அன்பு கட்டளைக்கு கட்டுப்பட்டு அவனருளால்,அவன் பாதம் பணிந்து வணங்கி அவனை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்று சென்று வந்தோம். 

கடந்த புதன், வியாழனுமாகிய இரு தினங்களும் மனதை எவ்வித கவலைகளுமின்றி, நிச்சலமாக இனிமையாக இருக்க வைத்ததும் அவனருளே.. 

இது அவனே அழைத்த எதிர்பாராத பயணம் என்பதினாலும், அவனருள் இல்லையென்றால் எதுவும் நடக்க சாத்தியமில்லை என்ற சத்தியமான  உண்மையாலும், அன்று அவ்வளவு கூட்டத்திலும் பகல் முழுக்க காத்திருந்ததற்கும், பின் எங்களுக்கென்று  தந்த அந்த நேரமாகிய பொழுதினில் இரவு மூன்று மணி நேரம் இடிபட்டு, காத்திருந்ததற்கும் மெய்சிலிர்க்க வைக்கும் அருமையான தரிசனத்தை தந்தான். 

எனக்கு அவ்விடம் விட்டு அகன்று வர கிஞ்சித்தும் மனமில்லை. அவனுடனே கலந்து விடும் பேராசை பேய்கள்  மனத்துள் வந்து தாண்வமாடின. ஆயினும், "அவன்" என் பிறப்போடு இடட கடமைகளை  முடிக்காது உயிர் பிரிய இந்த உடலுக்கு விருப்ப (உரிமையுமில்லை) மில்லை என்பதினால், மறுநாள் வியாழன் மதியம் தன் மைத்துனர் காளஹஸ்தி நாதரையும் தரிசிக்க வைத்து இரவு பத்திரமாக வீடு திரும்பச் செய்தான். நாராயணா.... இப்பிறப்பில் மட்டுமல்லாது வரும் எப்பிறப்பிலும் உன்னை என்றும் மறவாத வரம் தா..! உன் கருணையே கருணையப்பா. கோவிந்தா..! கோவிந்தா..! 🙏. 🙏. 



எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத இந்த அன்னமயயா படத்தில் நடிகர் நாகார்ஜுனா அவர்கள் அன்னமைய்யாவாகவே வாழ்ந்திருப்பார். அவரின் மனமுருகிய நடிப்பில் கண்களில் கண்ணீரையும், இறைவனை நெருங்கி அணுகும் நல்ல கருத்தையும் மனத்துள் தோற்றுவிக்கும் திரைப்படம் இது. எனக்கு மிக மிக (இப்படி எத்தனை மிகப் போட்டாலும் தகும்.) பிடித்தமான திரைப்படம். 

இந்த இறுதி காட்சியில் வரும்  அந்த பாக்கியம் நமக்கு கிடைக்க இன்னமும் எத்தனை ஜென்மங்கள் பிறந்திளைக்க வேண்டுமோ ? "விண்டவர் கண்டிலர்.. கண்டவர் விண்டிலர்."என்பது போல இறைவனை கண்ணால் (அகம், புறம்) காண்பதற்கு எத்தனை பிறவிகள்தோறும் எத்தனைமாயிரங்கள் புண்ணியங்கள் செய்ய வேண்டுமோ? இதே நினைப்புடன் நானும் இப்பூவுலகில் காத்திருக்கிறேன். அவனும் அதற்கான நம் நேரம் வரும் போது கண்டிப்பாக அதற்கு ஒரு வழி காட்டுவான். 🙏.

அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள். இன்றைய நன்நாளில் இப்பதிவை எழுதி பகிரச்செய்த அந்த ஸ்ரீமன் நாராயணனின் பாதங்களுக்கு என் சிரம் தாழ்ந்த பணிவான நமஸ்காரங்களும், நன்றியும். 🙏.

இப்பதிவை படிக்கும், படித்து கருததிடும்  என் அன்பான நட்புக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 

Friday, September 6, 2024

விநாயகர் அருள்.

சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். 

சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். 


ஸ்ரீவிநாயகப் பெருமானே சரணமப்பா. சரணம்.
 🙏. 

1) கஜானனம் பூத கணாதி ஸேவிதம்

கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்

உமாசுதம் சோக விநாச காரணம்

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.🙏. 

இதன் பொருள். 

யானை முகத்தை கொண்டவரும், பூத கணங்களால் வணங்கப்படுபவருமான, விளாம்பழம், நாவற்பழங்களின் மீது விருப்பமுடையவருமான, உமை பாலகனும், நமக்கு வரும் இன்னல்களை தீர்க்க வல்லவருமான நம் கணபதி நாதரின் திருவடிகளை வணங்குவோம்.🙏. 

2) மூஷிக-வாகன மோதக-ஹஸ்த

காமர-கர்ண விலம்பித-ஸூத்ரா |

வாமன-ரூப மஹேஸ்வர-புத்ர

விக்ன-விநாயக பாத நமஸ்தே ||🙏. 

இதன் பொருள்:

எலி வாகனத்துடன் கையில் வைத்திருக்கும் மோதகப் பிரியராகவும்,  பெரிய விசிறி போன்ற காதுகளுடனும், மற்றும் நீண்ட புனித நூலை அணிந்திருப்பவரும், வாமனரைப்போல உயரம் குறைவாக இருப்பவரும். மற்றும் ஸ்ரீ மகேஸ்வரரின் மகனுமாகியவரும், தனது பக்தர்களின் தடைகளை உணர்ந்து அதை  நீக்கும் வல்லமையுடையவருமான ஸ்ரீ விக்ன விநாயகரின் பாதங்களை வணங்கிக் கொள்வோம். ஸ்ரீ விக்ன விநாயகருக்கு அனேக கோடி நமஸ்காரம். 🙏. 

3) பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம் செய்துங்க கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா! 🙏. 

இதன் பொருள்.

நாம் அனைவரும் தெய்வமாக வழிபடும் (கோமாதா) பசுவின் பாலும், சுறுசுறுப்புக்கு பெயர் பெற்ற தேனீக்களால் தேர்ந்தெடுப்பட்டு சேர்த்த நல்ல தேனும், சுவையான கரும்புகளின் கனிச்சாற்றைக் கொண்டு நல்ல முறையில் தயாரிக்கப்பட்ட வெல்லத்தை காய்ச்சி எடுத்த பாகும், அதற்கு தோதாக அதனுடன் சேர்க்கப்படும் அரிசி, பருப்பு வகைகளும் கலந்து உனக்குப் பிடித்தமான பல இனிப்புகளை செய்து நான் உனக்குத் தருவேன்.

அழகெல்லாம் ஒரு சேர நிறைந்தவரும், மதிநுட்பம் மிகுந்த யானையின் முகத்தைக் கொண்ட எம்பெருமானே, நீ அதற்குப் பதிலாக மூவகையான சங்கத்தமிழ் எனும் அமிழ்தத்தை எனக்குப் பரிசாக தருவாயா? . 


பிரபல பாடகர் சீர்காழி அவர்களின் பக்திப் பாடல்களை மெய்யுருகி கேட்டால், நம் கண் முன் இறைவனே வந்து நிற்பது போல் உணர்வோம் . அந்த அளவிற்கு  அமைந்தது அவரின் குரல் வளம். 🙏 அது அவருக்கு அந்த ஆண்டவன் தந்த வரப்பிரசாதம். 🙏 இந்தப் பாடலும் இன்றைய நல்ல நாளில், நமக்கு பக்தி பரவசமூட்டும் என்பதில் ஐயமில்லை. நாம் அனைவரும் கேட்டு மகிழ்ந்து விநாயகபெருமான் நம் கண் முன் வருவதை உணர்ந்து  தரிசிப்போம் 🙏

விநாயகர் குறித்து என் அறிவுக்கு எட்டிய விதத்தில் தந்திருக்கும் இப்பதிவை ரசிக்கும் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏.

நன்றி கூகுளுக்கும். 

Thursday, September 5, 2024

காஃபியின் வழி முறைகள்.

 இந்த காஃபி குடிப்பது கெடுதல் என்ற பழக்கம் இப்போதுதான்  வந்ததா? இல்லை, காஃபி குடிப்பது என்ற வழக்கம் வந்த  ஆரம்பத்திலிருந்தே வந்ததா? என்றிலிருந்து வந்தது எனத் தெரியவிலலை. ஆனாலும் காஃபியில் இருக்கும் காஃபின் என்ற பொருள், நமது உடலை சுறுசுறுப்பாக வைக்கும், எண்ணங்களை தோற்றுவிக்கும் நமது மூளைக்கு நல்லதொரு செயல்பாட்டை தருமென்பது ஒரு கருத்து. 

காஃபின் என்றால் என்ன?

இது ஒரு இயற்கை தூண்டுதலாகக் கருதப்படுகிறது. இது உலகளவில் பரவலாக நுகரப்படும் பானங்களில் ஒன்றாகும். இது பொதுவாக தேயிலை, காபி மற்றும் கொக்கோ செடிகளில் காணப்படுகிறது. காஃபின் உட்கொள்வது உடலுக்கு சில வழிகளில் நன்மைகளைத் தருகிறது. சோர்வு ஏற்படும் போது காஃபின் எடுத்துக் கொள்வது சுறுசுறுப்பைத் தருகிறது. இது மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், விழிப்புடன் இருக்க வைக்கவும் உதவுகிறது.

காஃபின் உட்கொண்ட பிறகு, அது குடலில் இருந்து இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்படுகிறது. அதன் பிறகு இது கல்லீரலுக்குச் செல்கிறது. கல்லீரலிலிருந்து இது பல்வேறு கலவைகளாக உடைந்து, பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. காஃபின் முக்கியமாக மூளை செயல்பாட்டில் வேலை செய்கிறது. அதாவது அடினோசினின் விளைவுகள், மூளையைத் தளர்த்தி சோர்வடையச் செய்யும் நரம்பியல் கடத்தியாக அமைகிறது. ஆனால் காஃபின் உட்கொள்ளல் அடினோசின் வேலை செய்வதைத் தடுத்து சோர்வு மற்றும் மந்தத்தன்மையைத் தவிர்க்க உதவுகிறது.

இதனால் பல தீமைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. 

பொதுவாக காஃபின் உட்கொள்வது உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். காஃபின் ஒரு டையூரிடிக் அமிலமாக இருப்பதால், இவை உடலில் இருந்து அதிக சிறுநீர் உற்பத்தியைத் தூண்டுகிறது. இது உடலில் நீரிழப்புக்கு வழிவகுக்கும். அதே சமயம், சர்க்கரையுடன் கூடிய காபி மற்றொரு மோசமான கலவையாக அமைகிறது. இது கோடை வெப்பத்தில் நீரிழப்பை ஏற்படுத்துவதாக அமைகிறது.

மற்றும், கோடைக்காலங்களில் உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் போது, அது தூக்க முறைகளை சீர்குலைத்து விடலாம். மேலும், கோடையில் அறையின் வெப்பநிலையும் அதிகமாக இருப்பதால் தூங்குவது கடினம். இந்த நேரத்தில், காஃபின் எடுத்துக் கொள்வது அது உடல் வெப்பத்தை மேலும் அதிகரிக்கும். இது தூக்கமின்மையை ஏற்படுத்தும். இதனால், எரிச்சல் மற்றும் சோர்வு ஏற்படும்.

அதிகளவிலான காஃபின் உட்கொள்ளலால் இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் இரண்டும் அதிகரிக்கப்படும். குறிப்பாக, கோடையில் காஃபின் உட்கொள்வது இருதய அமைப்பில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இதனால் இதய பாதிப்பை ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இது உடல் அசௌகரியம் அல்லது பிற உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது  

ன்றி கூகுள்.

காஃபி குடிப்பது கெடுதலா , நன்மையா என்பது ஒரு பக்கமிருக்கட்டும். காஃபி போடுவதே ஒரு கலை என வாதிடுபவர்கள்தான் எனக்குத் தெரிந்த வரை நிறைய பேர்  (உறவுகள்) இருக்கிறார்கள். காஃபி பில்டரில் புது டிகாஷன் இறக்குவதிலிருந்து, பாலை காய்ச்சி, அதற்கு தகுந்த சர்க்கரை சேர்த்து, (அல்லது சர்க்கரை இல்லாமலோ) நல்ல சூட்டில் (கவனிக்கவும். நல்ல சூட்டில்..) கலந்து தருவதை ஒரு அசுவமேத யாகத்தை எவ்வித குறையுமின்றி, தான் பூரணமாக செய்து முடித்த அளவுக்கு திருப்தியடைபவர்கள் நிறைய பேர். சரி..! இவர்கள் எப்போதும் ஒரே மாதிரி இவ்விதம் செய்து அனைவருக்கும்.  (இங்கும் கவனிக்கவும்... தினமும் வீட்டிலிருக்கும் அனைவருக்கும், தவிர எப்போதாவது வெளியிலிருந்து வரும் விருந்தாளிகளுக்கும் இப்படி காலை, மாலை, இடையில் அவர்கள் காஃபி என கேட்கும் போது என்று அவர்களுக்கு கலந்து தரும் அளவுக்கு  பொறுமை உள்ளதா என்றால், அங்கு அதுதான் மிஸ்ஸிங்.)

சிலர் இந்த டிகாஷன் நன்றாக அமைந்தால்தான், காஃபி நன்றாக இருக்குமெனவும், சிலர் பாலின் தரம் சிறப்பாக இருந்தால்தான் காஃபி சுவையாக இருக்குமெனவும், வாதிடுவார்கள். மேலும், காஃபி பில்டரில் உள்ளிருக்கும் காஃபி பொடியில் கொதிக்கும் வென்னீர் மழை விடும் போது அதற்கு குடை வைப்பவர்களும் , குடையை ஒதுக்கி அது நன்றாக மழையில் நனையட்டுமென விடுபவர்களும் உண்டு. இதிலும், குடை தேவையா, இல்லை அவசியமில்லையா என்ற இருவகை கருத்துக்கள் வாதிடுபவர்களுக்குள் எழுவதுண்டு. 

சிலர் அந்தக்காஃபி பொடி சரியில்லை, இதில் காஃபித் தூளில் கலக்கும் சிக்கரி நிறைய வந்து விட்டது எனவும், காஃபி கொட்டையாக கடையில் வாங்கி வீட்டில் அரைத்து நாமே தேவையான அளவு சிக்கரி  கலந்து போட்டால்தான் நன்றாக இருக்குமெனவும், சிலர் சிக்கரி இல்லாமல் காஃபித்தூளை முறையான அளவில் கலந்து உபயோகித்தால் மட்டுமே காஃபியின்  சுவை நன்றாக இருக்குமெனவும், சிலர் பசும்பாலை விட எருமைப்பாலில்  காஃபி திக்காக நன்றாக வருமெனவும், சிலர் பசும்பால்தான் நல்லது எனவும், அவரவர் கருத்துகளை முன்னிறுத்தி, இறுதியில் அதைதான் ஸ்திரமான ஆணித்தரமான உறுதியும் ஆக்குவார்கள்.

காஃபி போடுவதையே விதவிதமாக பழக்கம் வைத்திருப்பவர்களும் உண்டு. சிலர் பில்டர் காஃபியை தவிர்த்து வேறு எந்த முறையிலும் போட முயல கூட  மாட்டார்கள். சிலர் ஒரு பாத்திரத்தில் காஃபித்தூளை போட்டு வென்னீர் கொதிக்க வைத்து அந்த காஃபி பொடியில் ஊற்றி நன்கு கலந்து அதில் சிறிது தண்ணீர் தெளித்த பின் கெட்டியான காடா துணி உதவி கொண்டு மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டி காஃபி தயாரிப்பார்கள், அவர்களுக்கு இந்த பில்டர் தேவையேயில்லை. சிலர் இப்போது ஏராளமாக வந்திருக்கும் "தீடிர் காஃபி" பொடியில் காஃபி கலந்து குடித்து விட்டு, வீட்டுக்கு வருபவர்களுக்கும் தந்து விட்டு எதைப்பற்றியும் கவலைபடாமல் "அக்காடா" என்றிருப்பார்கள். சிலர் காஃபி குடிக்கிறீர்களா என வீட்டுக்கு  வந்தவர்களை ஒரு உபசாரத்திற்கு கூட கேட்க மாட்டார்கள். (கேட்டால்தானே இந்த வம்புபெல்லாம்.?:)) ) சிலர் அந்தப் பழக்கத்தை சிறு வயதிலிருந்தே ஏற்படுத்திக் கொள்ளாமல், அல்லது நடுவில் விட்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு எங்கு சென்றாலும், எந்த பிரச்சனையுமில்லை. (அவர்களால் பிறருக்கும் பிரச்சனைகள் இல்லை.) 

சில பேர்கள் இப்படி திக்காக ஒரே சகதி மாதிரி சிலர் வீட்டில் தருகிறார்கள் எனவும், டிகாஷன் அதிகம் கலக்காமல் பால் நிறைய கலந்து கொடுப்பவர்களை காயத்தால் கால் வீங்கியவர் கால்களை போன்ற மாதிரி வெள்ளையாக அவர்கள் வீட்டில் காஃபி இருக்கிறது எனவும் கிண்டல் செய்வார்கள். 

 (ஆக மொத்தம் நாம் அருந்தும் ஒரு குவளை காஃபியில்தான் எத்தனை வேறுபாடான கருத்துக்கள்? இந்தக் காஃபி அளவுக்கு அதிகமாக அதாவது தினமும் ஓரிரு தடவைகளுக்கு மேலாக குடித்தால் சிலருக்கு தலைச்சுற்றல் வரலாம். சிலருக்கு பழக்கத்தினால் வராமலும்  இருக்கலாம். இது அவரவர் உடல் வாக்கைப் பொறுத்தது. ஆனால், எனக்குத் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் பாணிகளில், இந்த காஃபி போடும் விபரங்களை பல விதங்களில் ஒரு குற்றப் பத்திரிக்கையாக என் முன்னே வைத்து பரிசீலனை செய்யும் போது நிஜமாகவே எனக்கு தலைச் சுற்றத்தான் செய்கிறது.:)) )

நாங்கள் பிறந்து வளர்ந்த  அந்தக்காலத்தில் காஃபியுடன் வேறு பல சத்துள்ள பானங்கள் என வரிசையாக வந்து விட்டாலும், பொருளாதார வசதி காரணமாக, எங்கள் அம்மா வீட்டில் எங்களுக்கு காஃபி குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள். அது இத்தனை ஆண்டுகளாக தொடர்வதால், அதை முற்றிலும் நிறுத்தவும் இயலவில்லை. இன்று வரை ஒரு நாளைக்கு சில சமயம் காலை மட்டுமாவது ஒரு தடவையேனும் இந்தக் காஃபிக்கு அடிமையாகிறேன்.

திருமணமானவுடன், புகுந்த வீட்டில்,எல்லோரும் சேர்ந்திருக்கையில் (கூட்டுக் குடும்பம்) எனக்கு மட்டும் மூன்றாம், நான்காம் தடவையாக பில்டரில் விட்டு இறக்கிய காஃபி காலை, மாலை என முதல் தடவையாக கிடைத்தது. (முதல், இரண்டாவது எல்லாம்  பெரியவர்கள்தான் குடிக்க வேண்டும் என்ற தீர்மானம் அந்த வீட்டில் இருந்ததும், நான் அப்போது அவர்களை விட மிக,மிகச்சிறியவள் என்பதும் அந்தப் 19 ஆவது வயதில் அப்போதுதான் எனக்குப் புரிந்தது. :)) ) அப்போதாவது இந்த மேற்படி பானத்தை ஒரேடியாக வெறுத்து ஒதுக்கி கை கழுவி விட்டிருக்கலாம். (அந்த காஃபியே ஒரு கை கழுவும் தண்ணீராகத்தான் இருந்தது. ஹா ஹா ஹா.) விபரம் தெரிந்த நாளிலிருந்து அம்மா வீட்டில் நல்ல காஃபியை குடித்து விட்டு இங்கு மாறுபடும் போது நாக்கு வித்தியாசத்தை காட்டியது. ஆனால், ஒருவரின் மனது நோக ஒரு சொல் சொல்வதும், ஒரு உணவுப் பொருளை வேண்டாமென்று மறுக்கவும், ஒதுக்கவும் தெரியாத மனது என்னுடையது. இதுவரை அப்படியேதான் இருக்கிறேன். தொட்டில் பழக்கம் கட்டை வேகும் வரை மாறாதது என்பது உண்மைதானே..!

அது என்னவோ காஃபியைப்பற்றி கூறும் போது இந்தப்பாடலும் நினைவுக்குள் வந்து விடுகிறது. 

"காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி. அது கையில் கிடைத்த பின்னும் துடிக்கிது ஆவி." என்ற பாடலை மறக்க முடியுமா? 



(என்னவோ போங்கள்.. இந்த காஃபியைப்பற்றி இப்படி அலச வேண்டுமென ஒரு காஃபி அருந்தும் வேளையில் எனக்கு தோன்றியது பாருங்கள். இது அந்த காஃபிக்கு வந்த சோதனையா? இல்லை பெருமையா?தெரியவில்லை. ஆனால், காஃபி அருந்துபவர்களின் மனதில் வரும் கருத்துக்களுக்கும், இல்லை அருந்தாதவர்களின் உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களுக்கும், இந்தப் பதிவு ஒரு பாலமாக இருக்கும்.:))  ) 

உங்கள் அன்பான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.அதற்கு நான் என்  கைப்பேசியிலேயே பதில் கருத்துக்கள் தருவதால் கொஞ்சம் தாமதமாகிறது. அதற்காக அனைவரும் மன்னிக்கவும் இருப்பினும் அன்புடன் உடனே வந்து கருத்துக்கள் பகிர்வோர்க்கு என் பணிவான நன்றிகள் . 🙏. 

Monday, September 2, 2024

தேங்காய் வறுத்த பொடி.

உலக தேங்காய் தினம். 

அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். இப்போதெல்லாம் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொன்றின் தினமாக அடையாளம் காட்டப்படுகிறது. 

இன்று உலக தேங்காய் தினமாம்.அதாவது 2.9.24 ஆகிய இன்று  தேங்காய்களின் சிறப்பை உணரும் தினமாக சிறப்பித்து குறிப்பிட்டுள்ளனர்.. 

மங்கலகரமான இந்த  தேங்காய்கள்  ஒரு வீட்டிற்கு அன்றாடம் எப்போதும் எப்படி இன்றியமையாதது போலவோ, அது போல், அது தரும் பயன்களும் நமக்கு எண்ணிலடங்காதது அல்லவா. ? வீட்டில் தேங்காய் இல்லாத சமையல் என்றுமே ருசிக்காது என்பதையும் நாமறிவோம். 

வீட்டின் எந்த ஒரு சுபமான  விஷேடங்களுக்கும் வெற்றிலை, பாக்கு பழங்களுடன் சபையில் வந்து முன்னிற்பது இந்த காய்கள்தானே..! இறைவனுக்கு நாம் தவறாது பல பழங்களுடன் தேங்காய்களை சமர்ப்பிப்பது என்பது காலங்காலமாய் நம்மிடையே இருந்து வரும் ஒரு சம்பிரதாய பழக்கந்தானே ..! . தவிரவும் நம் துயரங்கள் நீங்க இறைவனிடம் வேண்டிக் கொண்டு நம் துன்பங்கள் அனைத்தும் சிதறிப் போகும் வகையாக சிதறுகாயாக உடைக்கப் பயன்படுவதும் இதுதான் என்பதையும் அனைவரும் அறிவோம். . 

நம் சந்ததிகளை (பிள்ளைகளை) அன்புடன் கவனித்து வளர்த்து போற்றுவது போல இந்த தென்னை மரத்தையும் ஒரு பிள்ளையாக்கி "தென்னம்பிள்ளை" என அவைகளை செல்லத்துடன் அடைமொழியாக விளித்து நாம் ஒவ்வொரு வீட்டிலும் அன்புடன் வளர்க்கிறோம்

சில பெற்றோர்கள் சமயங்களில் தங்கள்  பிள்ளைகளின் மேல்  வரும்,கை,கோப,தாப உணர்ச்சியில், "இந்தப் பிள்ளையை பெற்று வளர்த்ததை விட ஒரு தென்னம் பிள்ளையை வளர்ந்திருந்தாலும் அது எனக்கு கடைசி வரை உபகாரமாக இருந்திருக்கும்" என மனம் வெறுத்து தென்னை மரத்தை  தம் பிள்ளைகளுக்கும் மேலாக உயர்த்திக் சொல்வார்கள். 

இங்கு (பெங்களூரில்) ஒரு திருமணம், கிருஹபிரவேசம் போன்ற சுப காரியங்களுக்கு பச்சை தென்னை ஓலையில் அழகாக பந்தல் பின்னி வாசலில் கட்டி கொண்டாடுகின்றனர். (இது மாநிலத்திற்கு, மாநிலம் வேறுபடுகிறது என்பது வேறு விஷயம்.) எனக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தாலும் இப்போது பழகி விட்டது. 

 இத்தனை சிறப்பு மிக்க தேங்காய் தினத்தை பார்த்ததும், தேங்காயை வைத்துச் செய்யப்படும் இந்த உணவு நினைவு வந்தது. இது ஏற்கனவே நான் திங்கள் பதிவாக எ. பியில் பகிர்ந்துள்ளேன். இருப்பினும் என் பதிவிலும் ஒரு அடையாளமாக இருக்கட்டுமென இடம் பெறுகிறது (நிறைய  பதிவுகள் நேரமின்மையால், பாதி எழுதியும், முடிக்காது பாதியுமாக இருக்கின்றன. அதனால் பழசையே (ஆனால், இங்கு இது புதியதுதான்.) மறுபடி திரும்பி பார்க்கிறேன். (இரண்டாவதாக பதிவுகளின் எண்ணிக்கையும் கூடுமென்ற சுயநல ஆசையும் ஒரு காரணம்.) இதை ஏற்கனவே அனைவரும் படித்திருந்தும், செய்முறைகளை அறிந்திருந்தும் இங்கு வந்த ஊக்கத்துடன் உற்சாகமும் அமையுமாறு கருத்துரை தரும் என் அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் பணிவான நன்றிகள். 🙏. 

இனி எ. பியில் பகிர்ந்த பதிவு. இதை அன்று என் செய்முறையாக எழுதி அனுப்பியதை, அன்புடன் எ. பியில் பகிர்ந்து எனக்கு ஊக்கமளித்த எ. பிக்கும், அதன் நிர்வாக ஆசிரிய பெருமக்களுக்கும் என் பணிவான நன்றிகள் எப்போதும்


இது ஊற வைத்து உலர்த்திய பச்சரிசி


அதை நல்ல நைசான மாவாக மிக்ஸியில் பொடித்து சலித்துக் கொள்ளுங்கள்


நான் ஒரு டம்ளருக்கு ஒரு மூடி தேங்காய் என்ற கணக்கில் எடுத்துக் கொண்டேன். கால்படிக்கு அரிசிக்கு ஒரு நல்ல திண்ணமான பெரிய தேங்காய் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தேங்காய் துருவல் கணிசமாக இருக்கும்


பொடியாக துருவிய தேங்காய் துருவல்


சலித்து வைத்த மாவையும் தேங்காய் துருவலையும் நன்கு கலந்து கொள்ளவும். 


ஒரு கடாயில் இந்த மாவைப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து இரு பாகங்களாக வறுக்கவும். 


நன்றாக கை விடாமல் யார் மேலும் கோபம் இல்லாமல் (கோபம் வைத்தால் கவனம் சிதறி மாவு சரியான பக்குவத்திற்கு வறுபடாமல் போய் விடும்.) மனதில் பொறுமையுடன் வறுக்கவும்.
 

இறுதியில் இந்த கலருடன் மாவு மொறுமொறுவென தயாராகி விடும். 


  இதை நாங்கள் தேங்காய் வறுத்த மாவு என்போம் . முன்பு நான் பிறந்த வீடு (தி. லி) சென்று சென்னை திரும்பும் போதெல்லாம் தாய் வீட்டு சீதனமாக சாம்பார் பொடி, மற்ற இத்யாதி  பொடிகளுடன்  ஏனைய பட்சணங்களுடனும் இந்தப் பொடியும் கண்டிப்பாக இடம் பெறும். இது மாதக்கணக்கில் கெட்டுப் போகாது. 

சாயங்காலம் விடுமுறை நாட்களில் மாலை சிற்றுண்டியாக வெல்லத் தண்ணீர் நன்கு கொதிக்க வைத்து வெல்ல வாசனை போனதும் , வடிகட்டிய ஆறிய  வெல்ல நீருடன் இந்த மாவை கலந்து சாப்பிடுவோம். கூடவே காரமாக ஏதாவது ஸ்நாக்ஸ். இல்லை வீட்டில் போடும் பஜ்ஜி போண்டா.... வகைகள். 

அதுபோல் காலை பசிக்கும் போதும் டிபன் ஏதும் சரியாக அமையாத போதும்.. வழக்கமான  இட்லி, தோசை அல்லாத புளி அரிசி மாவு உப்புமாவோடும் இது ஜோடி சேர பிணக்கு கொள்வதேயில்லை. ஏதாவது பூஜை விரத நாட்களிலும், உப்பு மோருடன் கொஞ்சம்  மாவை கலந்து சாப்பிடுவோம். பூஜையெல்லாம் முடிந்து சாப்பிடும் வரை பசியை அடக்கி தாக்குப் பிடிக்கும். இல்லையெனில் பொழுது போகாமல் இருக்கும் போது, கொஞ்சம் மாவுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வீட்டில் எல்லோரும் ஏதாவது அரட்டை அடித்தபடி, இல்லையென்றால் ஒரு ஸ்வாரஸ்யமான நாவலை படித்தபடி  கொஞ்ச கொஞ்சமாக ஸ்பூனினால் அள்ளி அப்படியே சாப்பிடுவோம். இப்போது இதெல்லாம் எனக்கு கொஞ்சம் கனவாகி விட்டது. ஸ்வீீட் எல்லாவற்றிகும் தடா... (நாவல் படிக்கலாம். ஆனால் எதையும் சாப்பிடாமல்...! இரண்டாவதாக அது உடனே பற்களில் மாட்டிக் கொண்டு நாவலின் சுவாரஸ்யமான கவனத்தை திசை திருப்பி விடுகிறது.) 

 2 மாதம் இங்கு  வந்திருந்த என் மகனின் மலரும் நினைவுகளுக்காக இதை கொஞ்சம் செய்தேன். இதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் இதை, இதன் செய்முறையை அறிந்திருக்கலாம் . இதைதான் திணை மாவு என்பார்களோ. ? அதையும் அறியேன்.  இதன் பெயர் உங்கள் அளவில் என்னவென்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.இது ப. ப. (பழைய பஞ்சாங்கம்) ஆனாலும், படங்களை ரசிப்பதற்கும், பகிர்வை படித்து ரசிப்பதற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.🙏.