Friday, December 5, 2014

கார்த்திகை தீபத்திருவிழா...

இந்த உலகம் தோன்றியது முதல் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய சக்திகளும் செயல்பட்டு கொண்டேதான் இருக்கின்றன. முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன் இத்தொழில்களை முறைப்படி இயக்கி மனிதர்களை அவரவர் வினைப்பயன்படி நடத்திச்சென்று அவர்களுக்கு நன்மை தீமைகளை வழங்கி கொண்டிருப்பதாக, இந்துமத நூல்களும், முன்னோர்களும், பெரியோர்களும் சொல்லக்கேட்டு நாம் வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


இதில் அழித்தல் தொழிலை செய்து வரும் சிவபெருமான் சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளாக போற்றப்படுபவர். இவர் பிறப்பும் இறப்பும் இல்லாதவர் எனவும், பிரளய காலத்தில் அனைத்து உயிர்களையும் அழித்துத் தன்னுள் அடக்கும் சக்தியை பெற்றவர் எனவும், சைவசமய இலக்கியங்கள் ௬றுகின்றன. நடனம், யோகம் என பல கலைகளின் அம்சமாகிய இவர் அன்னை உமையை மணந்து கைலாய மலையில் தங்கி, மனிதர்களின் பாப புண்ணியத்திற்கு ஏற்றவாறு, மனிதர்களுக்கு அருள் செய்து வருவதாக, இந்துமத நூல்களை படித்து நாமும் அறிந்து கொண்டிருக்கிறோம்.


ஒரு சமயம் பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும், தம்மில் யார் பெரியவன் என்ற தர்க்கம் எழ, இருவரும் ஒரு முடிவுக்கு வர இயலாது, சிவபெருமானிடம் சென்று முறையிட, இவர்களது வாதத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வர, தான் ஒரு ஜோதிப்பிழம்பாக வானுக்கும் பூமிக்குமாக காட்சியளித்தார். அப்போது அவரின் அடி பாகத்தையும் மேல் பாகத்தையும் உங்கள் இருவரில் யாரொருவர் முதலில் கண்டு வருகிறார்களோ! அவரே பெரியவர்!” என்று அசரீரியாக குரல் வர, பிரம்மன் தனது அன்னப்பறவை வாகனத்தில் ஏறி சிவபொருமானின் முடிவில்லாது தோன்றும் மேல்பாகத்தை கண்டுவர விரைந்தார். விஷ்ணுவும் ௬ர்மாவதார உருவத்தோடு பூமிக்கடியில் சிவனின் அடிபாகத்தை கண்டுவர பூமியை தோண்டியபடி முன்னேறினார்.
    
ஆண்டுகள் பலவாயினும், சிவனின் திருபாதத்தை காணவியலாததால், தம் தோல்வியை ஒப்புக்கொண்டபடி விஷ்ணு தன் ரூபத்தில் வெளிவர, பிரம்மனோ, ஆகாயத்திலிருந்து வந்து கொண்டிருந்த தாழம்பூ மலரின் துணையோடு, அது தான் சிவபெருமானின் தலையிலிருந்து விழுந்து வந்து கொண்டிருப்பதாக சொன்னதை நம்பி,” அதனிடம் தானும் சிவனின் மேல் பாகத்தை கண்டு விட்டதாக பொய் சாட்சி சொல்லி விடுமாறு கேட்டுக்கொண்டு”, கீழிறங்கி வந்து நான் சிவனின் முழு தரிசனத்தையும் கண்டு வந்திருக்கிறேன்என்று பொய்யாக உரைத்தார். அவ்வாறு பொய்யாக உரைத்தனினால், “பூமியில் பிரம்மனுக்கு ஆலய வழிபாடு இல்லாமல் போகவும்”, தாழம்பூவும் பிரம்மனுடன் வந்து பொய்சாட்சி சொன்னதினால், “இன்றிலிருந்து நீ என்றுமே என் பூசைக்குரிய மலராக இல்லாமல் போவாய் எனவும்”, இருவருக்கும் சாபம் தந்தார் அடிமுடி அறிய முடியாத, ஆதிஅந்தம் இல்லாத சிவபெருமான்.

தாங்கள் செய்த பிழை பொறுத்து மன்னிக்க வேண்டிய பின் தாங்கள் கண்ட ஜோதிப்பிழம்பான காட்சியை அகிலத்தில் உள்ளவருக்கும் காட்டியருள வேண்டுமென மூவரும் வேண்ட, கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் முழுநிலவெனும் பவுர்ணமி திதியில் தன் ஜோதிரூபத்தை காட்டியருளினார். அன்றிலிருந்து இன்றுவரை கார்த்திகை மாத திருக்கார்த்திகை விழா, சகல சிவாலயங்களிலும், மற்ற ஆலயங்களிலும் முறைப்படி கொண்டாடப்பட்டு வருகிறது.


சிவனின் பஞ்சபூத தலங்களில், அக்னி தலமான திருவண்ணாமலையில், முறைப்படி இவ்விழா வருடந்தோறும் வெகுச் சிறப்பாக நடந்து வருகிறது. பத்து நாட்கள் முன்பே கொடியேற்றி பத்தாம் நாள் கார்த்திகை நட்சத்திரம், பவுர்ணமி திதியன்று காலை பரணி தீபமேற்றி, மாலை மலையுச்சியில் கார்த்திகை தீபமேற்றி அண்ணாமலை தீபதரிசனமாக, எங்கும் நிறைந்திருக்கும் சிவபெருமானை தீபஜோதியாக காணும் வைபவம் வருடந்தோறும் நடைபெற்று வருகிறது.

சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறியால் உண்டான சிவகுமாரன் முருகப்பெருமானின் கோவில்களில், கார்த்திகை நட்சத்திரத்திலும், விஷ்ணு ஆலயங்களில், ரோகிணி நட்சத்திரத்திலும், சிவாலயங்களில், கார்த்திகை நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் ௬டிவரும் நாளிலும் கொண்டப்படுகிறது. அன்றைய தினங்களில், மக்கள்  தத்தம்  வீடுகளிலும் அகல் விளக்கேற்றி, வாழ்வின் இருள் நீக்கி ஒளி வேண்டி, ஜோதி ரூபமான சிவனை துதிக்கும் விழாவாக இதை மனமகிழ்வுடன் கொண்டாடி வருகிறார்கள்.


இன்று கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரமும், பவுர்ணமி திதியுமாக, அமைந்து வந்திருக்கும் இத்தீபத்திருநாளை, ஆதி அந்தம் காணவியலாத, உலகத்தை காத்து ரட்சிக்கும் சர்வேஸ்வரனை, உமைமணாளனை, “இருள் நீக்கி ஒளி தர வாஎன பக்தியுடன் வேண்டியபடி வீட்டினில் விளக்கேற்றி, நம்மால் இயன்ற பிரசாதங்களை இறைவனுக்கு படைத்து, கொண்டாடுவோமா?

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க - மாணிக்கவாசகர்

ஓம் நமசிவாய; ஓம் நமசிவாய; ஓம் நமசிவாய; ஓம் நமசிவாய; ஓம் நமசிவாய;


9 comments:

  1. ஆஹா சரித்திர நிகழ்வுகளுடன் அழகிய படங்களும் தொகுத்த விதம் அருமை
    இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தங்கள் உடனடி வருகைக்கும்,கருத்துப்பகிர்வுக்கும், என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரரே!

      இன்று சிவனைப்பற்றி எழுத வேண்டுமென்று தோன்றியது. சற்று விரைவாக தயாரித்த பதிவாகையால், ஏதோ எனக்கு தோன்றியதை வைத்து விரிவான விபரங்கள் ஏதுமின்றி, மதியம் ஆரம்பித்து மாலைக்குள் பதிவிட்டு விட்டேன்.அதையும் பாராட்டியமைக்கு என் நன்றிகள்.

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      தங்களுக்கும் இனிய தீபத்திரு நாள் வாழ்த்துக்கள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. அருமை...

    இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      என் பதிவை காண அழைத்தவுடன் வந்த தங்கள் உடனடி வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும்.பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே!


      தீபத்திருநாள் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. அண்ணாமலைக்கு அரோகரா....தீபத்திருநாளில் எல்லேருடைய வாழ்வும் வளமாகட்டும்.

      Delete
    2. வணக்கம் சகோதரி!

      தங்கள் வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி!

      எல்லோரின் வாழ்வும் வளமாக நானும் அண்ணாமலை நாதரை வேண்டிக்கொள்கிறேன்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. சிறப்பு...

    இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே!

      தங்களுக்கும்,என் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete