Pages

Monday, June 2, 2025

நிலையுணர்ந்த நிதர்சனம்.

 பறவைகளின் பரந்த மனது. 

"ஏன் மெளனமாக இருக்கிறாய்? வந்ததிலிருந்து ஏதும் பேசவேயில்லையே..? களைப்பாக இருக்கிறதா?" 

"களைப்பு ஒருபக்கமிருக்கட்டும்.. எனக்கு ஒரே கவலையாக உள்ளது. மனதில் நிம்மதியே இல்லை." 

"ஏன்? உடல்நிலை ஏதும் சரியில்லையா? 

" பச்.. உடல் நிலை சரியில்லை யென்றாலும், யார்தான் நம்மை கவனிக்கப் போகிறார்கள்.? அந்த இயற்கையே நம்மை குணப்படுத்தி விடும். நாமும் எப்போதும் போல் அதுவரை பொறுமை காத்து விடுவோம்." 

"பின் வேறுதான்  என்ன?" 

"உனக்கு நம்மைச் சுற்றிலும் நடப்பது புரியவில்லையா? இல்லை, தெரிந்தும் தெரியாத மாதிரி கேட்கிறாயா.? 

"தெரிகிறது. அப்படியே தெரிந்தும் புரிந்தும் என்ன செய்ய முடியுமென்கிறாய்? இது முழுக்க நம்மை இங்கிருந்து விரட்டுபவர்களின் சுயநலன்கள்.! இதில் நம் நலனைப்பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்?" 

"அதோ அந்த மரத்தில் கட்டிய நம் வீடு இவர்கள் வந்து, இதுவரை இங்கு சுற்றிலும் செழித்து வளர்ந்திருந்த பச்சை பசும் நிலத்தை அவர்களின் வீடுகளை உருவாக்க வேண்டி, கொத்திச்சிதைத்து சமன் செய்த அமர்க்களத்தில், அதைக் கண்ட நம் பயத்தில், என்ன கதியாகி விட்டதென்று தெரியவில்லை அவர்களின் அந்த விரட்டலுக்குப் பயந்து, இப்போதைக்கு இந்தச் சின்ன செடியில் வந்து அடைக்கலமாகி உள்ளோம். விரைவில் இந்தச் செடியையும் களைந்து விடுவார்கள். பின் வேறு எங்கு போவது? "

" வேறு ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டியதுதான். அங்கும் இப்படித்தான் வந்து துரத்துவார்கள். அவர்களின் வீட்டில் இப்படியான துரத்தல்களுக்கு அவர்கள் வீட்டவர்களே பலியாகும் போது நம்மைப்பற்றி அவர்களுக்கு என்ன கவலை..!" 

" என்ன சொல்கிறாய்? " யார் யாரை அவர்கள் வீட்டிலிருந்து துரத்தினார்கள்?"

நமக்காவது இப்படி சேர்ந்து இருந்து பின் நம் வாரிசுகளை பெற்று அரவணைத்து ஊட்டி வளர்த்து அவர்கள் ஒரளவு வளர்ந்ததும் அவரவர்கள் செல்லும் பாதையில் போக விடை தருவது அந்த  கடவுள் தந்த நியதியாக உள்ளது. மேலும் இது நாம் இந்த உலகுக்கு வரும் போதே பெற்று வந்த வரம். ஆனால், இந்த மனிதர்களுக்கு, பெற்ற உறவுகள், பிற உறவுகள் என அன்புடன்  அரவணைத்துச் செல்லும் பண்பை இறைவன் ஊட்டி அவர்களை இங்கு வாழ படைத்திருந்தும், அவர்கள் அதைப்பின் பற்றி வாழ்வதையோ, வாழ வேண்டுமென்பதையோ நினைத்து கவலையுறாமல், அவர்களும், வளர்ந்தபின் நமக்கு இறைவன் வகுத்துத் தந்த பாதையிலேயே பயணிக்கிறார்கள். அதற்காகத்தான், அவர்களின் அந்த சுதந்திர  வசதிகளுக்காக ஏற்படுத்திக் கொள்ளும் தனித்தனி வீடுகளுக்காக, நம்மை, நம் இனத்தை, நம் சுதந்திரத்திற்கு இடையூறாக வந்து குறி வைத்து விரட்டுகிறார்கள். ஆனால், இதன் பலனை இறைவன் தரும் போது மட்டும் நொந்து கொள்வார்கள். என்ன செய்வது? எல்லாம் விதிப்பயன்.. .! 

அதோ பார்..! நம்மைப் போன்ற  ஓரினம் துணையை இழந்தோ, பிரிந்தோ தனிமையில் வாடுகிறது.மின்சார கம்பியில் மின்சாரம் நம் மீது பாயாத வேளை வரை இது மகிழ்ச்சிதான். ஆனால், அன்றொரு நாள் வேறு ஒரு நம்மினம் ...! அதுவும் அது மின்சார கம்பியில் வந்தமர்ந்த சட்டென்ற அந்த நேரம் என் கண்ணெதிரிலேயே...! அதன் முடிவும்..! அதைக்கண்டது முதல் இன்னமும் என் மனம் சரியில்லை. நமக்கென்று இந்த சோதனையை இறைவன் வகுத்தனா? இல்லை, இவையும் உலகில் அனைவருக்குமான விதியின் முடிவா? ஒன்றும் புரியவில்லை போ..! 

"பாவம் பரிதாபந்தான்..! அதைக் கண்டவுடன் உடனே சென்று காப்பாற்ற எந்த உபாயமும் நாம் கற்கவில்லயே.! . நீ சொல்வது போல இந்த  மனிதர்களின் கணக்கையும் ஆராய நாம் யார்? இறைவனின் மனக்கணக்கு அவர்களுக்கும் புரியாது. அப்படியே புரியும் போது, அவர்களின் வேதனை அவர்களுக்குத்தான். அதை மாற்ற அந்த இறைவனாலும் முடியாது. 

சரி... சரி.. வா..! கொஞ்சம் சற்று ஒய்வு எடுத்திருக்கிறோம். இப்போது நாம் பேசியதில், கொஞ்சம் மனதின் கவலையும், உடலின் களைப்பும் குறைந்துள்ளது. இனி வேற்றிடம் செல்ல நமக்கு மனதில் பலமும், உடலில் இறக்கைகள் என்ற ஆயுதத்தையும், நமக்கெனவே ஆதாயமாக தந்திருக்கிறார் அந்த இறைவன். அதைப் பயன்படுத்தி இப்போதைக்கு நல்ல மாற்றிடத்தை தேடிச் செல்வோம் வா..! "

கீழே பார்..! நம்மை அழிக்க காத்திருக்கும் இந்த மனிதர்களின் ஆயுதங்கள். அவை நாம் அமர்ந்திருக்கும் செடியை களைந்து அகற்ற வரும் முன், நம் கவலைகளை களைந்து  இறைவனிடத்தில் தந்து விட்டு இறைவன் நமக்காக  நமக்களிததிருக்கும் புது வாழ்வை ஏற்றுக் கொள்வோம். வா..! 


இப்படித்தான் அவைகள் பேசி இவ்வுலகில் வாழ்வதற்குரிய ஒரு விதமான மனமகிழ்வையும், தன்னம்பிக்கையையும் உருவாக்கி கொண்டிருக்கும் என்ற நம்பிக்கையின் பார்வைகளோடு, இப்புகைப்படங்களை எடுத்த நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.? பதிவை ரசித்த அனைவருக்கும் எனதன்பான நன்றிகள்.