Tuesday, June 28, 2022

பூக்களுக்கிடையே ஒரு கெண்டி.

ஜானகி படுத்திருந்தாள். முகத்தில் சோர்வு தெரிந்தாலும், என்ன ஒரு களையான முகம். அந்த கால ரவி வர்மா ஓவியப் பெண்களைப் போல்  இயற்கை வண்ணங்களால் வார்த்தெடுத்த அழகான முகம்.....! மனம் மட்டுமென்ன..! அதை விட அழகோவியமாக இறைவனே பார்த்து  பார்த்துக் கொடுத்திருக்கிறார். ரகு கண்களில் உண்டான லேசான நீர் துளிப்புடன் அவளையே பார்த்தபடி அருகில் அமர்ந்திருந்தான்.

சற்று நேரத்தில் கண் விழித்துப் தன்னையே பார்த்தபடி அவன் அமர்ந்திருப்பது கண்டதும் விழிகளாளேயே "என்ன"வென்று கேட்பது போல் புருவத்தை தூக்கினாள்.

அருகில் நெருங்கி அவள் இரு கைகளையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டவனுக்கு வார்த்தைகள் எழும்பவில்லை. தன் கைகளில் அவன் கண்களிலிருந்து சூடான இரு முத்துக்கள் விழுந்ததும், பதறிய அவளின் முக பாவம் ரகுவை இன்னமும் வசீகரித்தது.

" இதை எனக்காக இப்படியே நிறுத்தி விடு  ஜானகி..! என்னால் இதை ஜீரணிக்கவே முடியலே... நாளை விடியாமலே போகக்கூடாதான்னு வேண்டிக்கிறேன்."

மெதுவாக அவனிடமிருந்து கரங்களை விடுவித்தவள், மறுகணம் தன் ஒரு கரம் கொண்டு அவன் வாயை லேசாக மூடினாள்.

உலர்ந்திருந்த உதடுகளை நாவினால் தடவி ஈரமாக்கியபடி, மெல்ல எழுந்து அமர்ந்தவள், "ஏன்...!  இப்படி பேசனும்.. எல்லாம் என்னோட கனவுக்குதானே...! இதற்கு எத்தனை வருடம் காத்திருக்கிறேன். உங்க சம்மதந்தானே என் கனவோட முதல்படி. படிபடியாக ஏறி கனவு பலிக்கிற நேரத்துல இப்படி முடியாதுன்னு சொன்னா  எம்மனசு நொறுங்கி போயிடாதா?" வேகமாக சேர்ந்தாற் போல் பேசியதில் சற்று  மூச்சு வாங்க இளைப்பதை கண்டதும், ரகு பதறி எழுந்து போய் தண்ணீர் கொண்டு வந்து சற்றுக் குடிக்கச் செய்து  ஆசுவாசப் படுத்தினான்.

" சரி..! ஜானு..அதிகம்  பேசாதே.. நான் ஒண்ணும் சொல்லலை...உனக்காக  நான் சம்மதிக்கிறேன்.. " என்றவன் கண்களில் கண்ணீர் பெருக  அதை அவளிடம் மறைக்க முயற்சித்தான்.

"என்ன இது...! குழந்தை மாதிரி.. நா என்ன ஊர்ல உலகத்துல செய்யாததையா செய்றேன். இதுக்குப் போயி இப்படி வருத்தப்பட்டா எப்படி? "அவள் மறுபடி பேச ஆரம்பிக்கும் முன் அவளை அமர்த்தியவன்..
" நீ இப்ப எதுவும் பேசாதே ஜானு.. நான்தான் உன் இஷ்டத்துக்கு ஒத்துண்டாச்சே... மறுபடி இப்ப எதுக்கு அதைப் பத்தி பேச்சு.. வேணாம். .,! நீ கொஞ்ச நேரம் தூங்கு.. என்றபடி அவள் தோளை அணைத்து தன் மேல் சாய்த்துக் கொண்டவாறு அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.

கணவனின் பாசம் கண்டு ஜானகியின் கண்களும் கலங்கியது. அவனறியாமல் கண்களை துடைத்தபடி அவன் பரிவுக்கு கட்டுப்பட்டு கண்களை மூடி தூங்க பிரயத்தனித்தாள்.

"மேகலா, மேகலா, இங்கே வா.! ஜானகியின் பேச்சுக்கு கட்டுப்பட்டு தலை நிறைய பூச்சூடி அழகு தேவதையாய் நடந்து வந்த  மேகலா அவளருகே வந்தமர்ந்தாள்.

" மேகலா.! நீ எனக்கு ஒரு சத்தியம் செய்து தரனும். இத்தனை நாளா உன்கிட்டே  வாய் வார்த்தையா வெறும் உறுதி மொழிதான் கேட்டேன். இப்போ" என்றவளை இடைமறித்த மேகலா, "என்னக்கா,  நீங்க பெரிய வார்த்தையா கேக்கறீங்க.. நீங்க சொன்னது நான் மீறினாதானே இந்த மாதிரி சத்தியம் அது, இதெல்லாம் சொல்லனும். நீங்க சொல்றதை நான் தட்டியிருக்கேனா? ஜானகியின் மெலிந்த கைளை எடுத்து தன் மார்போடு அணைத்தவளாய் பரிவாக சொன்னாள்.

" இன்னைக்கு என்னுயிரை உங்கிட்டே  தந்திருக்கிறேன்... ஏன் தெரியுமா? அந்த உயிருக்கு ஆதரவா ஒரு உயிரை நீ சீக்கிரம் தரணும். அந்த செயலைத்தான் உங்ககிட்டே உறுதியா கேக்கிறேன். "

வெட்கத்தில்  சிவந்த முகத்துடன் மேகலா அவளுக்கு பதில் கூறும் முன் அந்த  அறைக்குள் நுழைந்தான் ரகு.

"மேகலா.! அவளுக்கு மருந்து தந்தியா? இனி நீ போ..! நான் அவளை பார்த்துக்கிறேன்.. என்றபடி, தன் கட்டிலில் அமரப் போனவனை ஜானகி தடுத்தாள்.

"என்னங்க.. ஒரு நிமிஷம்.. இங்கே வாங்க..! அழைப்புக்கு கட்டுண்டு வந்தவனை, "என்ன இது.!  இன்னைக்கு என்னவென்று உங்களுக்கு தெரியாதா? உங்க அறைக்கு போங்க. நா கொஞ்ச நேரத்துல மேகலாவை அனுப்பறேன்.  எனக்கு துணையாக இனி என் அத்தை இங்கே இருந்து பாத்துப்பாங்க.! " என்று முடியாமல் கூறி முடிக்கவும், ஜானகியின் அத்தை வந்து மேகலாவை, "வாம்மா" என்றபடி அழைத்துக் கொண்டு போனாள்.

ஒரு நிமிஷம் நடப்பதை பார்த்து திகைப்புடன் நின்றிருந்த ரகு, ஜானகி அருகே வந்தமர்ந்தபடி,  "என்ன ஜானு. .! உன் விருப்பத்துக்குதான் ஒத்துண்டேன். மறுபடியும் என்னை எல்லாத்துக்குமே ஒத்துக்க வைக்கிறே.... இது நியாயமா சொல்லு? என்றான் அழ மாட்டாத குறையாய்..

ஜானகி அவன் கைகளை எடுத்து தன் கைகளில் பிணைத்து கொண்டபடி வருடிக் கொடுத்தாள்." என் செல்ல ராஜா..!இதுக்குதானே நா என் உயிரை கையிலே வச்சிட்டு காத்திருக்கேன். நம்ப குழந்தையை ஒரு வாட்டி பாத்துட்டு, அதுக்கு நான் நினைச்ச மாதிரி ஆகாரம் கொடுக்காமே நான் போவேனா?  அப்படி போனாதான் என் ஆத்மா சாந்தியடையுமா என்ன?" மேற்கொண்டு அவளை பேச விடாமல், வாய் பொத்தி அவளை லேசாக தன்னுடன் அணைத்துக் கொண்டான் ரகு.

தன் திருமணத்திற்கு தன் தாய் தந்திருந்த வெள்ளி கெண்டியை அடிக்கடி எடுத்து வைத்துக் கொண்டு,"  என்னங்க இதில்தான் என் அம்மா எனக்கு பால் புகட்டி வந்திருக்கிறார்கள். நானும் என் குழந்தைக்கு இதில்தான் பால் புகட்டிப்பார்க்க வேண்டுமென்று ஆசை... என முகம் சிவக்க கூறும் போது, ரகுவின் சீண்டும் பார்வையை தாங்க முடியாமல் வெட்கத்தில் கைகளால் கண்மூடி மௌனித்த வேளைகள் எத்தனை எத்தனை.!

அவளுடைய ஆசைகள் அவனறியாததா? அவனின் இருபத்தைந்தாவது வயதில் அவனை நம்பி அவள் அவனுடன் சம்சார பந்தமெனும் கடலில் இறங்கிய போது அவளுக்கு வயது இருபது. நிறைய கனவுகளில்  சிறகடிக்கும் பறவையின் உற்சாக மனதோடுதான் அவனை கைப்பிடித்தாள்.

 நிறைய இடைவெளியில் , தன் கூடப்பிறந்த இரு தம்பிகளையும் தன் உடன்பிறப்பாக நினைத்து அன்புடனே, வளர்த்து,  தன் பெற்றோர்களின்  நம்பிக்கைக்கு பாத்திரமாகி, நல் மதிப்பெண்கள் பெற்று, தம்பிகளின் திருமணங்கள் வரை, உற்சாகமாக ஓடியாடி  வளைய வந்தவள்தான்.!

"இவ்வளவு பொறுப்பா பெரிய மனுஷியாட்டம்  புகுந்த வீட்டை கட்டிக்காத்து  நல்ல முறையிலே நிர்வகிச்சிண்டு வர்றியே... ஜானகி. அந்த ஆண்டவன் உன் விஷயத்திலே கண் திறக்க கூடாதா? உனக்குன்னு ஒரு குழந்தை தங்கி ஒரு குடும்பமா இருந்தாதானே ஒரு சந்தோஸம் நிலையா வரும். "  என்று உறவுகள் தன் தம்பிகளுக்கு பிறந்த குழந்தைகளை அவள் தூக்கி சீராட்டி கொஞ்சம் போது, புகழ்வது போல பேசி, குறையை சுட்டிக் காண்பித்த போது கூட மனம் சற்று வருத்தியதை அவள்  பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

காலம் வேகமாக ஓடி மூச்சு வாங்கிய போது ஜானகியும் மூச்சு விடக் கூட சங்கடப்பட்டு  சோர்ந்திருந்தாள். அவளை பரிசோதித்த பின் குழந்தை பிறக்க இனி சாத்தியமில்லை என மருத்துவர்கள் கூறியதில் நொடித்துப் போன இதயம்..அது.. மறுபடியும் தேறவேயில்லை...!

ஆயிரம் மருத்துவங்கள், பலவித மருந்துகள் என எதுவும் பலனளிக்காமல், அவளை மிகவும் பலவீனபடுத்தியிருந்தன. கடைசியில் தன்னை அருகிலிருந்து கவனித்துக் கொள்ள தூரத்து உறவின் மூலம் வந்திருந்த மேகலாவை எப்படியோ சம்மதிக்க வைத்து, ரகுவிடமும் போராடி  பேசி அவன் அரைகுறை சம்மதத்தையும் பெற்று இருவருக்கும் மணமுடித்து வைத்து விட்டாள். இனி ரகுவின் குழந்தையை கொஞ்சாது தன்னுயிர் பிரியாது என்ற நம்பிக்கையில் தன்னை எதிர்கொள்ள காத்திருக்கும் மரணத்திற்கு சவால் விட்டபடி காத்திருந்தாள்.

கடந்த  ஐந்தாணடு காலமாக ரகுவுக்கும், மேகலாவுக்கும் இடையே அவ்வளவாக பேச்சே கிடையாது. "வெளியுலகத்திற்கு நீயும், நானும் கணவன் மனைவி.. ஆனால் அதை தாண்டி ஒரு பந்தமும் நம்மிடையே என்றுமே கிடையாது" . என ரகு சொல்லியபடி வாழ்ந்து வந்தான்.  அவன் என்றாவது மனது மாறுவான் . தன்னிடம் பழைய மாதிரி சுமூகமாக பேசவாவது செய்வான் என்ற நம்பிக்கையோடு பொறுமையாய் இருந்தாள் மேகலா.

அவனை விட்டு விலகிப் போகவும் முடியவில்லை...அப்படியே போனாலும்அவளைத் தாங்கி அரவணைத்துக்கொள்ள யாரிருக்கிறார்கள்.? பெற்றவர்களும் ஒருவர் பின் ஒருவராக மறைந்து, வறுமையில் யாருமற்ற சூழலுடன் இருக்கையில், உறவில் அத்தை முறையான பார்வதி,  "ஜானகியை கவனமாக பார்த்துக் கொண்டால்,  உனக்கும் ஒரு பாதுகாப்பு கிடைக்கும்"என அழைத்து வந்து இங்கு தங்கச் செய்தாள். ஆரம்பத்தில் சற்று மனம் ஒட்டாமல்  தயங்கினாலும் ஜானகியின் அன்பும், அக்கறையும், அவளின் எந்த பேச்சையும் தட்டாத ஒரு நெருக்கத்தை உண்டாக்கின.

அதன் விளைவுதான் ரகுவை மணந்து கொள்ள அவள் சம்மதித்தாள். சட்டப்படி ஜானகி எடுத்த முயற்சி பலனளித்து விட்டாலும், ரகு திருமணமான அன்றே தன் உறுதியான முடிவை "ஜானகிக்காகத்தான் நான் உன்னை ஏற்றுக் கொண்டேன். மற்றபடி நீயும், நானும் என்றுமே யாரோதான்..! என்று மேகலாவிடம் கூறி விட்டான். ஜானகியின் மேல் அவன் வைத்திருக்கும் அன்பை இரண்டு வருடங்களாக அவள் பார்த்திருந்ததால், இதை மேகலாவும் ஆமோதித்தது புன்னகையால் ஏற்றுக்கொண்டாள்.

"அப்படிப்பட்ட உறவையும், இந்த ஐந்தாண்டு காலம்  மிகவுமே சின்னாபின்னபடுத்தி அழகு பார்க்கிறதே " என எண்ணும் போது, பொறுமையாயிருந்த மேகலாவின் கண்கள் ஆறாகப் பெருகின.  அதன் காரணம் அவள் மனசாட்சிபடி "நீ செய்தது சரிதான்" ! என கூறினாலும், ரகுவை வெறுப்படைய செய்து விட்டதே என நினைக்கும் போது சற்று உறுத்தலாக இருந்தது. அன்றைய நாளின் நினைவுகள் அவளிடமிருந்து சிறிதும் விடைபெற  மறுத்தது மட்டுமின்றி, "நான் என்றுமே உன்னுடன்தான் இருப்பேன்" என்று அழிச்சாட்டியம் செய்தபடி இருந்தது.

" மேகலா.! நீயும் என்னை ஏமாற்ற போகிறாயா? கண்களால் கேள்வி கேட்கும் ஜானகியை எதிர் கொள்ளவே மேகலாவுக்கு தர்ம சங்கடமாக இருந்தது. அவளை பூப்போல அசைத்து, பணிவிடைகள் செய்யும் போதும், ஆகாரத்தை மெல்ல ஊட்டி விடும் போதும் பார்வையின் உரசல்களில் அந்த கேள்வி தொக்கி நிற்கும்.

ரகு வேலையிலிருந்து வரும் வரை ஜானகியை முழுதாக அருகிலிருந்து கவனித்துக் கொள்பவள் ரகு  வந்ததும் ரகுவின் கட்டளைக்கிணங்கி அங்கிருந்து அகன்று விடுவாள். இருவரையும் சேர்ந்து பார்த்தால், மறுபடி "குழந்தையை பற்றி பேச்செடுத்து ஜானகி தன்னை இன்னமும் பலவீனமாக்கிக் கொள்கிறாள்" என்ற எண்ணம் ரகுவை ரொம்பவே பாதித்தது. அதை புரிந்து கொண்டவளாய்  தான் நகர்ந்து விடுவது ரகுவுக்கு பிடிக்கிறது என்ற எண்ணமே மேகலாவுக்கும் திருப்தியளித்தது.

ஒருநாள் இருவரும் சேர்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. ஜானகி காலையிலிருந்தே சற்று கூடுதலாக சோர்வாக இருப்பது கண்டு அவளை விட்டு தானும் நகராதிருந்தாள்.  அன்று மேகலாவுக்கும் காலையிலிருந்தே தலைவலியால், சோர்வாக இருந்த உடல் ஜானகிக்கு இரவு கஞ்சியை புகட்டி கொண்டிருந்த போது, சற்று வெளிக் காட்டி விட்டது. வாய் மூடி பாத்ரூம் சென்று வாந்தி எடுத்து விட்டு வந்தவளை சந்தோஷம் மிக்க கண்களால் விரிய பார்த்தாள் ஜானகி.

அந்தப் பார்வையின் பொருள் உணர்ந்து தன்னிலை உணர்த்துவதற்குள் ஹீனஸ்வரத்தில் "மேகலா நாள் தள்ளிப் போகிறதா? நல்ல செய்தியா? என சந்தோஷம் அடைந்தவளுக்கு முன் எதையும் சொல்ல முடியாமல் மெளனித்தவளை, ரகு முறைத்தான்.

" நான் நினைத்தது நடந்து விட்டது.. கடவுள் என் குறை அறிந்து என வாழ்க்கையில் ஒரு திருப்தி கொடுத்து விட்டார், இது போதும் எனக்கு.." என் வேண்டுதல் பலித்து விட்டது. என மெலிதாக புலம்பிய வண்ணம் இருந்த ஜானகிக்கு அன்று இரவு மிகவும் உடல் பலகீனமாக அடைய, இந்த சந்தோஷம் போதுமென்று மனநிலையில், அதே சிரித்த முகத்துடன் இந்த உலகை வெறுத்து விடை பெற்றாள்.

ஆயிற்று!  நடைபிணமாயிருந்த ரகு பழையபடியாக  மாத கணக்கில் ஆனது.
அன்று சாப்பாடு பறிமாறிய மேகலாவை "இப்போ உனக்கு திருப்தியா? என் உயிரை என்கிட்டே இருந்து பிரிக்க இப்படி எத்தனை நாளா யோசிச்சே? என்று கேட்கவும், மேகலா திகைத்தாள்.

" நானா? ஏன் இப்படி பேசறீங்க? அக்காவை நானும் என உயிராகத்தான் நினைச்சேன். அவங்க இல்லாத ஒவ்வொரு நொடியும் எனக்கு எவ்வளவு வேதனையை தருது தெரியுமா?" கண்ணீர் பீறீட கேவினாள் மேகலா.

"அப்படியென்றால் அன்னைக்கு உண்மையை சொல்ல வேண்டியதுதானே.! "மெளனம் உண்மை.." என்ற மாதிரி அவள் பேச்சுக்கு மறுபேச்சு பேசாது ஏன் அமைதியா இருந்தே? " ஏன்னா உன் எண்ணத்தில் இருந்த ஆசைக்கு அதுவே ஒரு சாட்சி,.! சீ.. நீயெல்லாம் அவளை உயிரா நினைச்சியா? ஏன் பொய் மேலே பொய்யா....இப்படி.. " வார்த்தைகளை உமிழ கூட வெறுப்படைந்தவனாக முகம் சிவந்தான் ரகு.

" நீங்க நம்பலைன்னாலும் நான் சொல்றது உண்மை. அந்த நேரத்திலே நீங்க நினைக்கிற மாதிரி இல்லைன்"னு சொல்லவா? காலையிலிருந்து தலைவலி காரணத்தாலேயே வயிற்றை பிரட்டியதுன்னு சொல்லவான்னு நான் அந்த சமயத்திலே கொஞ்சம் தடுமாறினேன். இத்தனக்கும் அவங்க எத்தனையோ நாள் இந்த மாதிரி பேச்சை ஆரம்பிக்கும் போது, ஒருநாள் கூட நாம ரெண்டு பேரும் இன்னமும் வாழ்க்கையையே துவங்கலைன்னு  சொல்ல நினைச்சிருக்கேனா? இல்லை என்னையும் மீறி சொல்லியிருக்கேனா? ஏன் என்னை நம்பாமே இப்படி அபாண்டமான பேசறீங்க?"
மேகலாவின் வாய் வார்த்தைகளையும் மீறி சற்றே உணர்ச்சி வசப்பட்டதில் நடுங்கியது.

எப்படியோ போ,! அவளை கொன்னுட்டே. ! என்னையும், அவளையும்  பிரிச்சு பாவத்துக்கு இனி உன் முகத்துல முழிக்கிறதே பாவம். ! ஜானகி பேச்சை மதித்து உன்னை கல்யாணம் பண்ணினதுனாலே உன்னை எங்கேயோ போன்னும், சொல்ல முடியலே! ஆனா என் ஜென்மம் முழுக்க உன்கிட்டே பேசாமே இருக்க  என்னாலே முடியும். இனி நம் தெரிஞ்ச உறவுகளுக்குத்தான்  நீயும், நானும் ஜானகி பார்த்து கல்யாணம் செய்து வைத்த  தம்பதிகள். வீட்டுக்குள்ளே நீ யாரோ.! நான் யாரோ.. என்றவன் இன்று வரை அந்த நிலை மாறாது இருக்கிறான்.

மேகலாவுக்கு முதலில் ரணமாக மனது வலித்தது. நாளடைவில் ஜானகியின் அன்பை நினைத்து, அவளுடன் தனிமையில் இருக்கும் போது  "ரகு என்ன சொன்னாலும், ரகுவை என்றுமே உன் ஆயுள் பரியந்தம் புறக்கணித்து மட்டும் விடாதே!!" என்று தன்னிடம்  கண்டிப்பான அன்புடன் கேட்டுக்கொண்ட வார்த்தைகளுக்காகவும்  அவன் கோபங்கள்  தீர இன்னும் எத்தனை வருடங்களானாலும்  பொறுத்துக் கொள்ள தயாராக இருந்தாள்.

காலம்  ஒன்றுதான் யாரிடமும். எதுவும் சொல்லாமல்,  கேட்காமல். தன் வேலையை பார்த்தபடி  செல்லக் கூடியது. மேலும் சில வருடங்களை தன்னுள் விழுங்கிய திருப்தியில், அது ஒருவித அலட்சிய மனப்பான்மையுடன் நகர்ந்து கொண்டிருந்தது.

சமையலறை வாசலில் நிழலாடியது கண்டதும், காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்த மேகலா தலைநிமிர்ந்து பார்த்தாள்.

அறையின் கதவை பிடித்தபடி நின்றிருந்தாள் ரகு.

ஏதாவது முக்கியமாக பேச வேண்டுமென்றால்தான் இப்படி எதிரில் வந்து நிற்பான் என்பதை உணர்ந்தவளாகையால், "என்ன?" என்பது போல அவனை பார்த்து கொண்டபடி இருக்கும் இடத்தை விட்டு ஓரடி முன் வந்து நின்றாள் மேகலா..

"நாளை காலை நாம் ஒரு விஷேடத்திற்குப் போகப் போகிறோம். ஜானகிக்கு நெருங்கிய உறவு. அவளின் மாமா மகனுக்கு  அறுபதாம் கல்யாணம். நம்மை கண்டிப்பாக வரச் சொல்லியிருக்கிறார்கள். அங்கு வந்து நம் விரிசல்கள் எதையும் காட்டாமல் நடந்து கொள்...!!" என்று அவள் விழி பார்க்காமல், ரகு சொன்ன போது  மேகலாவுக்கு கோபத்தை விட சிரிப்புதான் அதிகமாக வந்தது.

" என்றைக்கு இந்த விரிசல்களை வெளியில் காட்டி யார் வந்து "சரி செய்யவா?" என்று கேட்டிக்கிறார்கள். என்னறைக்கு உங்கள் மனம் மாறும்..! விரிசலென்று நீங்கள் நினைப்பது  வெறும் கீறல்தான்... அதுவும் நீங்களாகவே போட்டு கொண்டு ஆற விடாமல், பத்திரமாக ரணத்தை அழகு படுத்தி பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்." என்று சொல்ல வேண்டும்  போலிருந்ததை அடக்கியபடி, "சரி" என்றாள்.

மறுநாள் அந்த விஷேடத்திற்கு தன்னை சாதாரணமாகவே அலங்கரித்து கொண்டவளுக்கு, தீடிரென" ரகு என்ன சொல்வானோ? "என்ற ஐயம் வந்தது. எனவே அவன் அறை வாசலுக்கு வந்தவள்,  "இது போறுமா? இல்லை.. ஏதேனும் பட்டுப் புடவை உடுத்திக் கொள்ள வேண்டுமா? என கேட்க வந்தவள் அவன் என்ன சொல்வானோ என்ற  நினைப்பில் பேசத் தயங்கி நின்றாள்.

அன்றைக்கென்னவோ அவள் நிலை உணர்ந்தவன் மாதிரி அவளை சற்று ஏறெடுத்துப் பார்த்தவன்," இது பழசாக தெரிகிறதே..! ஏதேனும் பட்டுப்புடவையாக கட்டிக் கொள்ளேன். "என்ற அவன் குரலில் இத்தனை வருடங்களாக இல்லாத ஒரு சிறு நெகிழ்ச்சி மேகலாவை வானத்திற்கு மேலாக பறக்க வைத்தது.

தன்னறைக்குள் புகுந்ததும் அவனின் கரிசனம் மிகுந்த சின்னப் பேச்சு அவளைச்சுற்றி தட்டாமாலை ஆட, திருமணமானதிலிருந்து அவனுடன் சேர்ந்து வாழ்ந்த ஒரு சந்தோஷத்தை அடைந்த திருப்தி எழுந்தது.  பரபரவென்று தன் திருமணத்திற்கு ஜானகி வாங்கித் தந்த புடவையை கட்டிக் கண்டதும், ஜானகியின் அன்பான அரவணைப்பு தன்னை சுற்றி வியாபிப்பதை உணர முடிந்தது. கண்கள் கலங்க  மேஜையிருந்த ஜானகியின்  போட்டோவை ஒரு நிமிடம் பார்த்தவள், "என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கள் அக்கா"என்றபடி கீழே விழுந்து நமஸ்கரித்தாள். அப்போது அறை வாசலுக்கு வந்து அகன்ற ரகுவை அவள்  சற்றேனும் கவனிக்கவில்லை.

அறுபதாம் கல்யாணம் வைதீக முறைப்படி ஜாம் ஜாமென்று நடந்து கொண்டிருந்தது. ரகுவிற்கும்,  மேகலாவிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்த சந்தோஷத்திலே ரகுவிடமும் ஒரு முக மலர்ச்சி உண்டானதாக மேகலாவுக்கு தோன்றியது. தன்னுடைய இயல்பான சுபாவத்தில் அவளும் ஜானகியின் உறவினர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்திக்  கொண்டு, கலகலப்பாக அவர்களுக்கு உதவியாக  அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தாள்.

அவ்வப்போது ரகுவின் பார்வையில் இவள் பார்வையும் படும் போது "இதுதான் இவனுடன் திருமணத்திற்கு பின் முதன்முதலாக சேர்ந்து வந்திருக்கும் விஷேசம்" என்ற எண்ணம் மேகலாவுக்கு வரவும் அவளின் உற்சாகமான முகம் இன்னமும் சற்று மலர்ந்து காணப்பட்டது.

"இவன் நம்ப ஜானகியின் புருஷன் ரகு தானே... !  பாவம் ஜானகி! இந்த சின்ன வயசுலே அவள் பட்ட கஸ்டமிருக்கே அப்பப்பா ... ஆனா  அவ ரொம்ப பொறுமைசாலி... அவ பொறுமைக்கு கடவுள் ரொம்பவும் அவளை பாடாபாடு படுத்திட்டான்.. !"

"ஆமாம்... அவனேதான்... !   அந்த கடவுள் மட்டுமா? அவ உயிரோடு இருக்கும் போதே இரண்டாம் கல்யாணம் பண்ணி கிட்டவன்தானே இவன்... ! இவன் ஒருத்தன் போதாதா அவ பொறுமையை சோதிக்கறதுக்கு...?"

" என்னமோ அவளே இவனை நிர்பந்த படுத்திதான் கல்யாணம் பண்ணி வைச்சதா கேள்விப் பட்டேனே? "

ஆமாமாம்...! அப்படித்தான் நானும் கேள்விப் பட்டேன். ஆனா அந்த  மாய்மால காரி இருக்காளே...!  அவ என்ன பொடி போட்டு மயக்கிட்டு ஜானகியை அப்படிச் சொல்ல வைத்தாளோ ? யாரு கண்டா?"

" இப்ப அவளும் வந்திருக்காளா? நா அவளை பார்த்ததே இல்லை...!

" அதோ..! நீலகலர்லே பட்டு புடவை கட்டிண்டு  ஏதோ ஜானகிக்கு உறவு மாதிரி வர்றவங்க எல்லோர்கிட்டேயும்  சகஜமா பேசிக்கிட்டிருக்காளே அவதான்..!" 

இவளுக்காவது ஏதாவது குழந்தை குட்டி பிறந்திருக்கா ? 

" எங்கே. .! அவளுக்கு செஞ்ச  துரோகத்துக்கு இவளுக்கு ஒரு குழந்தை பிறக்குமாக்கும்...! ஜானகியே குழந்தையா வந்து பிறக்கனும்னு கடவுள் ஆஞ்கையிட்டு சொன்னாகூட  ஜானகியே வேண்டாம்னு சொல்லிடுவா.. அந்த அளவுக்கு இவ மேலே அவளுக்கு கோபம் இருக்குமாக்கும்...!" 

ரகு அதற்கு மேல் பொறுக்க மாட்டாதவனாய் சடாரென எழுந்தான். வெறும் வம்பு பேசி அரட்டை அடிப்பதற்காக வந்த அந்த உறவுகள் யாரென்று தெரியவில்லை. தான் ஏதாவது பேசி அசம்பாவிதம் ஆகிவிடக் கூடாதென்பதற்காக அந்த இடத்தை விட்டு நகர்ந்தவனுக்கு அவர்களை பார்க்கவே பிடிக்கவில்லை. வேறு இடம் தேடி வந்து அமர்ந்தவனுக்கு உள்ளூர கோபம் அடங்கவில்லை.

ஜானகியை பற்றி புரிந்து கொள்ளாமல் என்னவெல்லாம் பேசுகிறார்கள்.?  அவள் இஸ்டமில்லாமலா நான் மேகலாவை திருமணம் செய்து கொண்டேன்? அவளா அவனுக்கு குழந்தையாக வந்து பிறப்பதை வேண்டாமென்று மறுக்கப் போகிறவள்.. ! சே..! நாக்கில் நரம்பில்லையென்றால், இப்படி பேச இவர்களுக்கு எப்படி மனசிலும், ஈரங்கள் இல்லாமல் போயிற்று? ஏதேதோ சிந்தனையில் கண்கள் மேகலாவை தேடின.

"ஏன்..! உன் மனதில் மட்டும் ஈரம் இருக்கிறதா?  நீ அவளை என்னவெல்லாம் பேசியிருப்பே..! அத்தனையும் தாங்கிக் கொண்டு நீ என்னைக்காவது மாறுவேன்னு அவ பொறுமையா இல்லையா?  பாவம் அவள்...! இனியும் நீ இப்படி நடந்துக்க கூடாது." 

உண்மைதான் ஜானகி... நான் செய்றது தப்புதான்....! 


ரகுவின்  அருகில் அமர்ந்திருந்த மற்ற இருவர் ஏதேச்சையாக அவர்களுடைய  குடும்பத்தைப் பற்றி பேசியது அவனுடைய கன்னத்தில்  அறைந்த மாதிரியிருந்தது.

இங்கும் தன்னருகில் அமர்ந்திருந்த யாரோ இருவர் தனக்காகவே பேசின மாதிரி தன் சிந்தனைக்கு தக்கபடி பேசியது தன் ஜானகியே வந்து பேசின மாதிரி இருந்தது ரகுவுக்கு. இப்போது அவன் கண்கள் தன்னையறியாமல் மேகலாவை விரைந்து தேடின.

"ஆமாம்.. இவள் எனக்கு என்ன குறை வைத்தாள்? என்னிடமும், ஜானகியிடமும் பாசமாக இருக்கதான் செய்தாள். நான்தான் இவள் அன்பை உதாசீனபடுத்தினேன். இதோ..! இன்று வரை ஜானகியை  துளியேனும் மறக்காது, காலையில் கூட அவளிடம் மானசீகமாக பேசி, ஆசிர்வாதம் வாங்கி அவளை அன்புடன் நன்றியோடு நேசித்துதானே  வருகிறாள். நான்தான் அவளை புரிந்து கொள்ளாமல் வார்த்தையால் கொன்றேன். அப்போதும் அவள் என்னை வெறுக்கவில்லை.  என்னிடம் அவளை ஒப்படைத்துக  சென்றதற்காக ஜானகியையும் ஒரு போதும் குறைச் சொன்னவளுமில்லை.. எல்லா தப்புமே என்னிடமிருந்துதான் ஆரம்பித்தன. "

" நான் "வா" வென்று அதிகாரமாக  அழைத்து வந்த இடத்திலும் எத்தனை முக மலர்ச்சியோடு எதைப் பற்றியும் நினைக்காமல், ஜானகியின் உறவுகளோடு பேசி பழகுகிறாள். இவளை நானே புரிந்து கொள்ளாமல் இருக்கும் போது, பொழுதைப் போக்க இங்கு வந்து வம்படிக்கும் கூட்டம் எப்படி புரிந்து கொள்வார்கள்.? "

சுற்றும், முற்றும் பார்த்து கூட்டத்தில் அவளைத் தேடினான் ரகு.

அதோ..! அந்த சிதறியிருக்கும் மலர்களை  கைகளால் அப்புறப்படுத்திக் கொண்டு மற்றொரு கையில் ஒரு அழகான கெண்டியை வைத்தபடி இருக்கும் மேகலாவைக் கண்டதும், ஜானகியின் வெள்ளி கெண்டியும் அதை சுற்றி படர்ந்திருந்த அவளது கனவுகளும் நினைவுக்கு வந்தன. கூடவே அவளது சுபாவத்தை கேலி செய்து பேசிய  அந்த இரு பெண்மனிகளின் பேச்சுக்களும் காதுகளில் ரீங்காரமிட்டன.

விடு விடுவென எழுந்தவன் மேகலாவின் அருகில் போய் நின்றபடி, "வா..!  மேகலா...! வீட்டிற்குப் போகலாம்...!" என்றான்.

  தீடிரென அங்கு அவனைக் கண்டதும் ஒருநிமிடம் திகைத்துப் போன மேகலா, "என்னங்க. .! நீங்க சாப்பிட்டாச்சா? நானும் இதோ இதை அவர்களிடம் தந்து விட்டு  சாப்பிட்டுட்டு வந்திடுறேன்.. "என்றபடி நகரப் போனவளின் கையை பிடித்தான் ரகு.

அவன் ஸ்பரிசம் தந்த ஆச்சரியத்தில் மறுபடி திகைத்துப் போனவளை "இல்லை...! வேண்டாம். . வா.! நாம் வீட்டுக்கு போகும் வழியிலேயே எங்காவது ஹோட்டலில் சாப்பிடலாம்...! " என்றவன் அந்த கெண்டியை அவளிடமிருந்து வாங்கி அவள்  திரட்டிய மலர்களின் நடுவில் வைத்தவன்  "உன்னை இது நாள் வரை சித்திரவதை படுத்தியதற்கு மன்னித்து விடு. .!  இப்போது இந்த பூக்களுக்கிடையே இருக்கும் அழகிய மணத்துடன் ஒளி வீசும்  கெண்டியாக நான் உன்னை பார்க்கிறேன்...!" என்றான்.

அவள் ஒரு விதமாக விசித்திரத்துடன் தன்னை பார்ப்பதை உணர்ந்தவன், "என்ன இப்படி பார்க்கிறாய்? இன்று என் மனதை மாற்றுவதற்காகவே ஜானகி நம் இருவரையும் இங்கு சேர்த்து அனுப்பி வைத்திருக்கிறாள் என நினைக்கிறேன். "வா..! இவர்களிடம் போய் வருகிறோம்" எனச் சொல்லிக் கொண்டு, வீட்டுக்குப் போனதும் உனக்கு விபரமாக என் மனமாற்றத்தின் காரணத்தை கூறுகிறேன்." என்றபடி அவள் கைப்பற்றி அழைத்துச் சென்றவனை, எதையும் புரிந்து கொள்ளும் ஆற்றலை இறைவன் அளித்திருந்தும், புரியாமல் எதை எதையோ பேசி பிறர் மனதை  துன்புறுத்தும் ஆறரறிவு  படைத்த ஜீவன்களை  போலில்லாமல், தனக்கு ஜீவனில்லாவிடினும், தன்னை நேசித்தவர்களுக்கு பயனாக எந்நாளும், எக்காலமும் உழைத்தபடி இருக்கும் அந்த அழகிய கெண்டி மனமுவந்து , மனம் நிறைந்து வாழ்த்தியது.


கதை நிறைந்தது
.

இது எ. பி யில் நான் எழுதி வெளி வந்த கதை. இதன் கதாநாயகனை, அவனின் மாறுபட்ட  சுபாவங்களுக்காக வாசகர்களுக்கு கொஞ்சம் பிடிக்காமல் போய் விட்டது. ஆனால் அவன் தன் முதல் மனைவி ஜானகி பேரில் வைத்திருந்த அளவுகடந்த அன்பு காரணமாகத்தான், (அதை ஒரு விதமான எல்லைகளுக்கும் அப்பால் உள்ள பாசம் என்றும் சொல்லலாம்.) அவளால் தனக்கென மறுபடியும் வாய்த்த மறு மனைவியான மேகலாவை  ஏறிட்டு நோக்க இயலாமல் செய்து விட்டதாக சித்தரித்திருக்கிறேன். அதை அவளுக்கிழைத்த துரோகம் என நாம் சுலபமாக கூறி விடலாம். ஆனால் அந்த மறு மனைவியே அதை புரிந்து உணர்ந்து கொண்டவளாய் நடந்து கொண்டாள் எனில், அவளுக்கு அந்த முதல் மனைவியான ஜானகியின் பாலிருக்கும் நன்றி உணர்ச்சியை  (இதையும் நமக்குப் பிடித்தமான இறைவனிடம் காட்டும் ஒரு பக்தி நிலை எனக் கொள்ளலாம்.) நமக்கும் வெளிப்படுத்தி காட்டியுள்ளதாக அவளின் கதா பாத்திரத்தை சித்தரித்துள்ளேன். இப்படி மாறுபட்ட கதா பாத்திரங்களின் ஓட்டத்தில் கதை  முடிவை நோக்கி நகர்கிறது. இதை எபியில் படித்து நல்லதொரு கருத்துக்கள் தந்த அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். இங்கும் ஒரு வித்தியாசமாக, இல்லை என் பதிவில் ஒரு சேமிப்பாக இருக்கட்டுமென பகிர்ந்துள்ளேன். இங்கும் படித்து கருத்திடும் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.🙏 

Monday, June 27, 2022

ரங்கனின் கருணை.

 வணக்கம் அனைவருக்கும்

உலகில் நாம் தோன்றியவுடன் நம்முடனே ஒட்டியபடி பிறப்பது இந்த ஆசைதான். ஆசைக்கு என்றும் அழிவில்லை. பிறந்த குழந்தை தன் தாயின் அன்பை, அருகாமையை, அரவணைப்பை நேசிக்க தொடங்குவதிலிருந்து இந்த ஆசை ஆரம்பிக்கிறது ஒரு  உடல் அழிந்த பின் கூட  அதன் ஆசாபாசங்கள் விடாது தொடர்வதாய் நம்பபடுகிறது. அதற்காக மறைந்த அந்த உடலுக்கு  அவர்தம் சந்ததியினர் விருப்பபட்டோ, இல்லை, விருப்பபடாமலோ, அல்லது மறைந்த அவர்களின்  ஆசைகளை நிறைவேற்றி பூர்த்தி செய்யும் முகமாகவோ,  அவர்களின்  வருட நினைவு நாளை நினைவாக திவசம் என்ற பெயரில்  செய்து வருகின்றனர். அது அவரவர்களுக்கு பிடித்தமான  விருப்பங்களை பொறுத்தும். மாறுபட்ட முறையிலும் அமையும்.  எனக்கு தெரிந்து ஒருவர் வேறு எந்த படாடோபமுமின்றி தந்தை, தாயின் நினைவு நாளில் ஒரு வழியற்றவர்களின் இல்லத்திற்கு சென்று அங்கிருப்போர்களுக்கு அன்றைய உணவுக்கு சிறிதேனும் வழி செய்வார். அதுவும் வருடந்தோறும் என்பதில்லை. அவருக்கு எப்போது எந்த வருடம் செளகரியபடுகிறதோ அப்போது. அதற்கே அவரை பாராட்ட வேண்டும். 

இப்படியாக உலகில் ஒவ்வொருவருடைய ஆசைகள் உள்ள போதிலும், மறைந்த பின்பும் பலவிதம். ஆசைகள் அதன் நிலை மாறி பேராசைகள்  ஆவதில்தான் துன்பமே விளைகிறது. அதை எத்தனையோ கதைகள் மூலமாகவும், புராண கதைகள் மூலமாகவும் அறிந்துள்ளோம். ஆனாலும் இந்த பேராசைகள் ஒருவரை அழிக்க வேண்டுமென்று இருந்தால் அதுதான் அவர்களின் மாறுபடும், இல்லை மாற்றமே இல்லாத விதியாகவும் அமைந்து, அவர்களின் சிறப்பற்ற வாழ்க்கைக்கு ஒரு சாட்சியாகவும், ஒரு காரணமாகவும்  ஆகி  விடுகிறது. சிலசமயங்களில் அவர்களே தெய்வாதீனமாக நன்றாக வாழ்ந்து அனுபவித்து விட்ட பின்னர், ஒரு பாவமும் அறியாத அவர் சந்ததியினரை அது வாட்டி வதைக்கிறது. ஆக ஐம்புலன்களின் மூலமாக ஏற்படும் ஆசைகளை அடக்கி எந்த ஒரு மனிதப்பிறவி ஞான மார்க்கத்தில் பயணிக்கிறாரோ அவர் துன்பமற்ற வாழ்வை பெறுவார் என்பது திண்ணம் என்றும் நாம் அந்த கண்ணன் காட்டிய வழியில் படித்து அறிந்துள்ளோம். இருப்பினும்  அது இயல்பாகவே நம்மால் கடைப்பிடிக்க முடிகிறதா? 

"என்னடா.. இந்த ஞானோபதேசம்? நாம் அறிந்த விஷயங்களை மறுபடியும் இப்படி அரைத்த மாவாய் எதற்கு இப்போது.... என நீங்கள் மனதுக்குள் நினைப்பதற்குள் இப்போது விஷயத்துக்கு வருகிறேன்."

எனக்கு ரங்கநாதனை தரிசிக்க ஸ்ரீ ரங்கம் செல்ல வேண்டுமென ரொம்ப நாளாக (நாட்கள் என்றால் ஓரிரு நாட்களில்லை. .ஒரு மாத நாட்களில்லை... . ரொம்ப வருடங்களாக.... ஒரு 365 ஐ 12க்கும் மேலாக பெருக்கினால் எவ்வளவு வருமோ அந்த அளவு நாட்களாக..இல்லை அதற்கும் மேலாகவே. .. என்றும் வைத்துக் கொள்ளலாம். ) ஒரு ஆசை உண்டாகி விட்டது. எப்போதோ எங்கள் குழந்தைகள் சிறுவயதாக இருக்கும் போது, வேறு உறவுகளின் விஷேட நிகழ்ச்சிக்காக  சென்னையிலிருந்து போகும் வழியில் திருச்சியில் இறங்கி ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கும், சமயபுரம் கோவிலுக்கும் எட்டிப் பார்த்து விட்டுச் சென்றோம். நாளடைவில் அது கனவு மாதிரி மறந்தே போய் விட்டது. இத்தனைக்கும் அந்தக் கோவிலைப் பற்றிய, ஸ்ரீராமரிடம்  அளவு கடந்த மிகுந்த பக்தியும் பற்றும்  கொண்ட விபீஷணனின்  (இலங்கை வேந்தன் இராவணனின் தம்பி. ) சற்றே கவனக்குறைவால் உண்டான கோவில் இது என்ற விபரத்தைத் தவிர வேறு ஒரு விபரமும் இன்றுவரை தெரியாது. இந்த ரங்கனை தரிசிக்கும் ஆசை நாளாக, நாளாக எனக்குள் எழுந்தது எப்படி என்று விளக்கமாக சொல்லத் தெரியவில்லை. ஆனால் மனதுக்குள் ஒரு தாபமாய் அந்த எண்ணம் உண்டாகி விட்டது. அதை நான் மட்டும் நினைத்தால் எப்படி?  "அவனும்" நினைத்தால் அல்லவா அது நல்லபடியாக நிறைவாக நடந்தேறும். 

சதா எந்நேரமும் சிவனை நினைத்தபடி இருந்த சிவ பக்தராகிய நந்தனாருக்கே எப்போது சிவ தரிசனம் கிடைக்க வேண்டுமென்று சிவபெருமான் நினைத்தாரோ அப்போதுதான் அவருக்கு அந்த பாக்கியம் கிடைத்தது. அதுவரை அவர் பட்ட அல்லல்கள் ஒரு காவியமாய் இன்றும் அவர் பெயர் சொல்லியபடி புகழ் பெற்று நிற்கிறது. சரி...  எப்போதும் சிவனையே நினைத்தபடி "அவனை" காணும் ஆவலையே தன் மூச்சாக கொண்டபடி இருந்த அந்த புனிதமான சிவ தொண்டரும், பந்த பாசங்களோடு, ஜீவனை வளர்த்தபடி அன்றாடம் குடும்ப கடமைகளின் நடுவே "அவனை"யும்  எப்போதோ நினைத்தபடி, இந்த பாழும் உலகப் பற்றில் மூழ்கி அதிலிருந்த விடுபடவும் தெரியாது / விரும்பாது இருக்கும் நானும் ஒன்றாகி விட முடியுமா? ஏதோ உதாரணத்திற்கு அவரைச் சொன்னேன். அவர் பெயரை நினைத்து உச்சரித்து எழுதிய "இந்த ஒரு நிமிடமேனும் கடல் போன்ற எனது ஏகப்பட்ட பாவங்களில் ஒரு துளியையாவது போக்கி விடப்பா" என பகவானை இப்போது பணிவோடு வேண்டிக் கொள்கிறேன். 🙏.

இந்த ஆசை என் இளைய மகன் திருமணம் நவம்பரில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து நடந்த போது அதிகமாகியது. ஆனால் அப்போது திருமண வேலைகளிலும், அந்த வருடம் பெய்த பயங்கர மழையினால் குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பி போக, வரவே நேரம் சரியாக இருந்தது.  மேலும் கோவிலுக்கு அப்போதைய முதல்வரின் வருகையால் கோவிலுக்குச் செல்ல நிறைய கட்டுப்பாடுகள் இருந்தமையால் மற்றொரு முறை பார்த்துக் கொள்ளலாம் என உறவுகளின் அறிவுறுத்தல்களில் திரும்பி வந்தாகி விட்டது. ஆக அப்போதும் "அவன்" என்னை அவனைப்பார்க்க அனுமதிக்கவில்லை.

அதன் பின்னும் என் ஆசை கடந்த வருடங்களில் பேராசையாக மாற முயற்சித்தபடி இருந்தது. எனினும் என் ஆசையை "அவன்" கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருந்தான். இந்த தடவை என் மகன் மருமகள் வெளிநாட்டிலிருந்து வருவதற்கு முன்பே என் ஆசையை அவர்களிடம் சொல்லி காண்பித்துக் கொண்டேயிருந்தேன்.( ஏனெனில் என் மருமகளின் தாய் வீடு திருச்சிதான்) 

அவர்கள் வந்த நேரம் என் விதி வசத்தால், விடாது கருப்பாக தொடர்ந்த என் உடல் நலக்குறைவுகள் பற்றியும், அதனால் மைசூருக்கு செல்லும் வழியில்  ஸ்ரீ ரங்கபட்டினம் சென்று அங்கேயாவது அந்த ரங்கநாதனை தரிசிக்கும் வாய்ப்பையும் எனக்கு "அவன்" தரவில்லை என்பதையும் என் முன் பதிவில் சொல்லியிருக்கிறேன்.

இப்படியாக அவர்கள் வந்த பின் நாட்கள் நகர்கையில் ஒரு நாள் என் மகன் "நானும் என் மனைவியுடன் திருச்சிக்கு சென்று விட்டு, பிறகு திருநெல்வேலிக்கும் செல்லப் போகிறேன். இப்போது தொற்றும் அவ்வளவாக குறைந்துள்ளது. எல்லாமே மூன்று நான்கு நாட்களுக்குள் செல்லும் பயணந்தான். ஆங்காங்கே ரயிலிலும், பஸ்ஸிலும், வாடகை காரிலுமாக பயணம் உன்னால் வரமுடியுமா?" எனக்  கேட்டதும் என் ஆசை அதன் சிறகுகளை கன்னாபின்னாவென்று பயங்கரமாக விரித்தபடி, என் உடல்நலக் குறைவையெல்லாம் கவனிக்காது உதாசீனப்படுத்தி "இதை விட்டால் உனக்கு எப்போதும் சமயமே வராது. ஒதுக்காமல், ஒதுங்கி விடாமல், உடல் நலத்தைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் சென்று வா"வென கடுங்கோபம் கொண்டு அவசரமாக விரட்டியது. நானும் உடனே  சரியென சம்மதம் சொல்லவும், எங்களுடன் எங்கள் வீட்டிலிருக்கும் அனைவருக்குமே இந்த புறப்பாடு பிடித்துப் போனதில், ஒவ்வொருவராக எங்களுடன் இணைந்தனர். பிறகென்ன.... அலுவலக விடுமுறையான  அந்த நான்கு நாட்களுக்குள் சென்று திரும்ப  வேண்டுமென்ற ஒரு கட்டாயத்துடன் திருச்சியில் என் மருமகளின் தாய் வீட்டிற்கு  புலர்ந்தும் புலராத ஒரு காலையில் சென்று விழுந்தோம். அங்கு தங்கிய நாட்களில் எங்களை அன்புடன் உபசரித்து நல்லதொரு தெய்வ தரிசனங்களுக்கு வழி வகுத்து தந்த மருமகளுக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் என் நன்றிகள் எப்போதும். எங்களின் தீடிர் வருகையால் அவர்களுக்கு சிரமங்கள் ஏதேனும் ஏற்பட்டிருந்தாலும் மன்னிக்க வேண்டுகிறேன். 🙏. 

அன்று உடனே குளித்து முடித்து, டிபன் சாப்பிட்ட கையோடு ரங்கனின் தரிசனத்திற்காக கிளம்பும் போது என் ஆசை சிறகு இனம் புரியாத ஒரு  சந்தோஷத்தில் படபடவென அடிப்பதையும் என்னால் உணர முடிந்தது.

அன்று வீட்டிலிருந்து கோவிலுக்குச் செல்லும் வழியெங்கும் எனக்கு  நம் சகோதரி கீதா சாம்பசிவம் நினைவு வந்து கொண்டேயிருந்தது. இங்குதான் அவரும் கோவிலுக்கு அருகில் எங்கோ வசித்து வருகிறார் எனக் சொல்லியிருந்தார். ஆனால் அவரின் முகவரி எனக்குத் தெரியாது. நான் முன்பு அவரிடம் ஒருமுறை ஸ்ரீரங்கம் வர ஆசையாக இருக்கிறதென்றும், அப்படியே வரும் போது தங்களையும் சந்திக்கும் ஆவலும் இருப்பதாகவும் வலைத்தள பதிவுகளில் எங்களுக்குள் நடந்த  கருத்துரையாடல்களில் குறிப்பிட்டுள்ளேன். ஆனால் ஒரு முன்னறிவிப்பும் இல்லாது இப்படி தீடிரென கிளம்பிய பயணத்தில், அதுவும் வீட்டின் அத்தனை உறவுகளுடன் வரும் போது அனைவரோடும் சென்று எப்படி அவர்களை சந்திக்க இயலும் என்ற மன சமாதானத்தையும் எனக்குள் சொல்லிக் கொண்டேன்.  "மற்றொரு முறை இதே பாக்கியம் வாய்க்கும் சந்தர்ப்பத்தை "அவன்" தந்தால் அந்த சந்தர்ப்பத்தில்  உங்களை தவறாது வந்து சந்திப்பேன் சகோதரி" என மனதுக்குள் அவரிடம் மன்னிப்பும் கேட்டபடி கோவிலுக்கு விரைந்தோம். மன்னிக்க வேண்டுகிறேன் சகோதரி.... 🙏.

நேரடியாக கோவிலினுள் சென்று  ஆளுக்கு 100 ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு நீண்ட க்யூவில் வளைந்து வளைந்து பயணித்தோம். முதலில் எங்கு செல்ல வேண்டும் எப்படி முறைப்படி செல்ல வேண்டும் எனத் தெரியவில்லை. அரங்கனை அந்த நேரத்துக்குள் தரிசிக்கும் ஆவல் மட்டுமே அப்போது மனதுக்குள். வரிசையில் நின்றபடி  அனந்த சயனத்திலிருந்தபடி அருள் பாலிக்கும் அரங்கனை நெருங்கி விட்டோம். "சற்று ஆறஅமர கண்குளிர நிம்மதியாக தரிசிக்கும் வாய்ப்பு இங்கும் குறைவுதான் போலிருக்கிறது என்ற எண்ணம்தான் வரிசையில் செல்லும் போது எங்களுக்குள் எழுந்தது." "ம்..ம். சீக்கிரம்.. சீக்கரம் போங்க" என்றபடி  விரட்டாத குறையாக தள்ளி விடும் கோவில் காவலர்கள். "எப்படி அவனை முகம் பார்த்து பாதம் வரை மனதில் இருத்தி வைக்கப்போகிறோம்" என்ற கவலை மனதில் தத்தளிக்க இருகரம் கூப்பி வைத்த விழிகளை எங்கும் நகர்த்தாமல் கால்கள் படிகளில் இடறி விடாமல்," இத்தனை நாள் தவத்தை புரிந்து கொள்ளப்பா ரங்கநாதா" என்று மனதோடு அரற்றியபடி கூட்டத்தோடு நகர்ந்தேன். அப்போதுதான் நிகழ்ந்தது அந்த அதிசயம்." அவன்" பாதங்களின் அருகில் நின்று கொண்டிருக்கும் ஒரு பட்டாச்சாரியார் என் கைகளை ரங்கனுக்கருகில் பற்றியிழுத்து  "நீ எங்கே இப்படி" என்று என்னை கேட்டபடி "அவனை" முகம் முதல் பாதம் வரை முழுதுமாக தரிசிக்க வைத்தார். ஒரு நொடி தடுமாறிய பொழுதில் ரங்கனின் விழிகள் என் விழிகளோடு சந்தித்து ஆசிர்வதித்தன . ஆகா.. ஆகா... நாராயணா.. கோவிந்தா.. ரங்கநாதா... என மனது சிலிர்த்து மெய் உருகும் போது அதே பட்டாச்சாரியார் சுதாரித்து கொண்டபடி "நீயா..  போ.. போ.. என்றபடி கூட்டத்தோடு பிடித்து தள்ளி விட்டு விட்டார். அந்த ஒரு நொடி தரிசனத்தை என் உயிருள்ள வரை மறக்க இயலாது. இப்போது இதை உங்களுக்கு தெரிவித்து எழுதும் போதும் எனக்கு மெய்சிலிர்க்கிறது. அந்த ஒரு நொடி அவருள் இருந்தது அந்த ஸ்ரீரங்கன் என்பதை அவர் அப்போது உணர்ந்தாரோ இல்லையோ, நான் இன்று வரை உணர்கிறேன். "வருட கணக்காக என் மனத் தவிப்பை உணர்ந்தவனாக "அவன்" நடத்திய நாடகம் இது... " என தினமும் விழி கசிய வீட்டில் சொல்லிக் கொண்டேயிருக்கிறேன். 

தரிசனம் முடிந்து வெளியில் வந்து அமர்ந்த போதும், என் மனதின் சிலிர்ப்பு குறையவில்லை. தாயாரையும், தன்வந்திரி நாராயணரையும் தரிசித்து விட்டு (மற்ற சன்னதிகள் பெரும்பாலும் மூடியிருந்தன) மறுபடியும் மாலை வேறு ஒரு இடத்திற்கு பயணம் என்பதினால் தாமதிக்காமல் வெளியில் வந்தோம்.   வீட்டுக்கு திரும்பி வரும் சமயம் அனைவரிடமும் "இன்று எனக்கு பிறந்த நாள்.இந்த நாளில் எனக்கு அரங்கனின் அன்பு பார்வை எப்படி மனச்சிலிர்ப்பை ஏற்படுத்தியது" என சொல்லிக் கொண்டே வந்தேன்."உனக்கு வரும் ஏழுதானேம்மா பிறந்த நாள்" என்ற மகன்களிடம் "ஆமாம் ஆனால் இன்று ஜென்ம நட்சத்திரம். முன்பெல்லாம் இந்த நாளில்தான் நாம் பிறந்த தினம் என்போம். இன்றைய இந்த நாளில் தெய்வமே மனமுவந்து என்னை நோக்கி ஆசிர்வதித்ததை மறக்க இயலாத நாள் " என்றேன். அன்றைய தினம் என் ஆயுளில் எனக்கு மறக்க முடியாத பிறந்த நாள்தான். நாராயணா... நாராயணா... 

ஊருக்கெல்லாம் சென்று திரும்பி வந்தவுடன் நம் சகோதரி வல்லிசிம்ஹன் அவர்கள் ஸ்ரீ ரங்கனின் பதிவாக  நிறைய வெளியிட்டார்கள். நானும் அதே மெய்சிலிர்ப்புடன் படித்து வந்தேன். அதில் ஒரு பதிவாக பங்குனி மாதம் ரேவதி நட்சத்திரத்தில்தான் (அன்றுதான் விபீஷ்ணன் ராமர் தனக்களித்த பள்ளி கொண்ட ரங்கநாதனை விமானத்தோடு தான் ஆளும் இலங்கைக்கு எடுத்துச் செல்லும் போது  தன்னுடைய மதிய நியமநிஷ்டைகளை முடித்துக் கொள்ளும் பொழுதினில் கீழே வைத்து விட ஸ்ரீரங்கனின் விருப்பபடி ரங்கன் அங்கு ஸ்தாபிதம் ஆன கதையை விவரித்து கூறியிருந்தார்.)  அந்த ரங்கநாதன் அங்கு பள்ளி கொண்டான் என்ற புராணத்தை சொல்லியிருந்தார்கள். அந்த பங்குனி மாத என்னுடைய பிறந்த நாள் நட்சத்திரமாகிய அந்த நட்சத்திரத்தில்தானே பகவான் தன்னையும் அங்கு ஸ்தாபிதம் ஆக்கிக் கொண்டு என்னையும் அருள் பார்வை பார்த்திருக்கிறார் என எண்ணிய போது அன்றிலிருந்து விவரிக்க இயலாத ஆனந்தம். இன்னமும் என்னுள்ளம் அந்த சம்பவத்தின் சந்தோஷ சிலிர்ப்பில்தான் உள்ளது. 🙏. 

இப்போது என் ஆசை நிச்சயம் மேலும் பேராசையாக மாறி இருக்கிறது. ஆனால் இது துன்பங்கள் இல்லாத பேராசை. மீண்டும் ஸ்ரீரங்கனை கண் குளிர மனம் சிலிர்க்க ஒரு தடவை தரிசிக்க வேண்டும். ஆனால் இந்த தடவை "அவன்" மீண்டும் "பந்த பாசங்களோடு வாழும் வரை போராடு" என என்னைப் பிடித்து தள்ளி விடாமல் "என்னுடனேயே வந்து விடு" என அழைத்துக் கொள்ள வேண்டும். நடக்குமா? அதையும் "அவன்" செய்வானா? அவனின் "கணக்குப்" புத்தகத்தை எனக்காக சிரமம் பாராமல் மாற்றியமைப்பானா என்ற மனத்  தவிப்புடன் அதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். 🙏. நாராயணா. நாராயணா. நாராயணா. ரங்கநாதா. .🙏🙏🙏🙏. 

எங்கள் மகனுடன் அவசரமாக சென்று வந்த இடங்களைப் பற்றி எழுதுகிறேன் என சென்ற பதிவில் கூறியிருந்தேன். ஆனால், இதுவரை என்னை இதுபற்றி எதுவும்  எழுத விடாமல் இருந்தவன் இதை உங்கள் அனைவரோடும் இன்று  பகிர்ந்து கொள்ளும் இந்த வேளையை நினைவுபடுத்தி எழுத வைத்ததும் "அவன்தான்" என மனப்பூர்வமாக  நம்புகிறேன். "அவன்" தானே நம்மை என்றும் ஆட்டுவிப்பவன். பக்தியினால் என் மனம் இன்புற்ற இந்தப்பதிவை பொறுமையாக படித்த என் அன்பு சகோதர சகோதரிகளுக்கு என் பணிவான நன்றிகள். 🙏. 

Sunday, June 19, 2022

அன்னையின் அருள்.

 வணக்கம் அனைவருக்கும். 

காலையிலிருந்து எந்த முடிவும் எடுக்காத நிலையில், ஏன் அந்த நேரம் வரை கோவிலுக்கென்று  எங்கும் செல்லும் எண்ணங்கள் இல்லாத போது, நேற்று மாலை ஆர்.ஆர். நகர் ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு வீட்டிலுள்ள அனைவரும் தீடிரென சென்று வந்தோம். அவ்வாறு வரச்சொல்லி எங்களை அம்பாள் அழைத்தாள். அவளின் உத்தரவுபடிதான் அனைத்தும் தடையின்றி நடக்கிறது/நடந்தது. இனியும் நடக்கும். நேற்று அம்மனின் அருள்மிகும்  அழகு மனதை நிறைத்தது. அனைவரும் நலமாக நோய் நொடிகளின்றி வாழ வேண்டும் என பிரார்த்தித்து வேண்டும் போதே அன்னை "அவ்விதமே" என வாக்கு அருள்வதாக மனதுள் ஒரு பிரமை. அந்த அளவுக்கு அன்னையின் முகமும், கண்களும்  கருணை ததும்பி காட்சியளிப்பதாக  தோற்றமளிக்கும் ஒரு திருவுருவம் நேற்றைய நிறைவான தரிசனமாக கிடைத்தது. இந்த தொற்று காரணமாக இரண்டு வருடங்களாக இக்கோவிலுக்கு செல்லவில்லை. அதற்கு முன் பல தடவைகள் சென்றிருக்கிறோம். இங்கு செல்போன் படங்கள் எடுக்க எப்போதும் அனுமதியில்லை. இப்போது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்த நிலையில் கோபுரங்களை வெளியிலிருந்தபடி கூட புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. எனவே இணையத்திலிருந்து புகைப்படம் எடுத்துப் போட்டுள்ளேன். 



நன்றி கூகுள்... ...  

இன்று தான் எங்காவது கோவிலுக்கு போக வேண்டுமென நினைத்தோம். ஏனெனில் இன்று என் பேத்திக்கு (மகள் வயிற்று பேத்தி) பிறந்த நாள். . இன்று இங்கு மாலை நல்ல மழை. ஆனால் இன்று மழை வந்து விட்டால் குழந்தைகளை அழைத்து கொண்டு  போவது கடினமாகி விடுமேயென நேற்று மாலையே  வந்து  தரிசனம் செய்ய வைத்து விட்டாள் அன்னை. ஆனாலும் நேற்றும் ஒரளவு சிறு மழையோடு பெய்து நின்று விட்டதால், மழை விட்ட பின் சென்று  வந்தோம்.  அன்னையின் அருள் பெற்று என் பேத்தி  பல்லாண்டு காலம் நோய் நொடி இல்லாத ஆரோக்கிய வாழ்வை பெற வேண்டுமென மனதாற தாயிடம் வேண்டிக் கொண்டேன். நீங்களும் அவளை அன்புடன் வாழ்த்துங்கள். வலையுலக சுற்றங்களாகிய உங்கள் அனைவரின் வாழ்த்துகளும் அவளுக்கு கிடைத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

பதிவுகள் எதுவும் எழுதாத நிலையில், இதையாவது சற்று கிடைத்த நேரத்தில். மதியமே எழுதி விட நினைத்தேன். இந்த நினைப்பும் அன்னையின் அருளால்தான் தீடிரென என் மனதுக்குள் தோன்றியது. "அவள்" இல்லையெனில் அகிலமே இல்லை.  எந்த இயக்கமும் இல்லை. சரிதானே..?

 ஆனால், காலை டிபனுக்கு அப்புறம் மதிய உணவுக்கென அனைவருக்கும் சின்ன வெங்காயம் அரைத்து விட்ட சாம்பார், உளுந்து வடை, அக்கார வடிசல் எனும் ச. பொங்கல் என சில பல பிறந்த நாள் வேலைகள் வந்து பதிவை முடிக்கவே காலந்தாழ்த்தி விட்டது. அதனால் இன்றும் நேற்றும்  மற்றவர்களின் பதிவுகளுக்கும் சரிவர வர இயலவில்லை. அனைவரும் என்னை மன்னிக்கவும். 

அனைவரும் இனிப்பு பிரெட் கேக் எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தைக்கு உங்கள் அன்பான வாழ்த்துகளை தரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.