Sunday, January 31, 2021

பொங்கல் திருநாள்....



இது பொங்கல் மலர் மின்னூலுக்காக தயாரானது என் பதிவிலும் ஒரு சேமிப்பாக இருக்கட்டுமென பகிர்ந்துள்ளேன். இன்று சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவில் ஏகப்பட்ட டிபன் வகையறாவை போட்டு அசத்தி உள்ளார்கள். அதைப்பார்த்ததும் எனக்கும் இதை என் தளத்தில் போட வேண்டுமென்ற ஆசையுடன் ஆவலும் எழுந்தது. 

பொங்கல் மலர் மின்னூலில் அனைவரது படைப்புகளையும் எனக்கு முழுமையாக தடையில்லா நெட்வொர்க் வந்தவுடன் படிக்க வேண்டும். இதில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். மலரை அருமையாக தொகுத்து தயாரித்த சகோதரர் கெளதமன் அவர்கள், மற்றும் எ. பி ஆசிரிய பெருமக்களுக்கு எனது அன்பான நன்றிகள். 

பொங்கல் மின்னூலை என்னைத்தவிர அனைவரும் படித்திருப்பார்கள் என நினைக்கிறேன். இதை இங்கும் பார்வையிட்டு படிப்பவர்களுக்கும் என பணிவான நன்றிகள். 🙏. 

அனைவருக்கும்
  இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த நன்னாள் அனைவருக்கும் நன்மைகளை கொண்டு வரட்டும். "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பது முதுமொழி. அதன்படி உலகத்தை தன்  விருப்பப்படி ஒருவருட காலமாக அசைத்துப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த கொடிய  தொற்று நோய் முற்றிலும் அகன்று, மக்கள் இயல்புடனும், நலமுடனும் வாழ இறைவன் நல்ல வழியை இந்நாளிலிருந்து  தர வேண்டுமாய் அனைவரும் மனமாற பிரார்த்தித்துக் கொள்வோம். 🙏. 

இந் நன்நாளில் கண்களுக்கும், வயிற்றிக்குமாய் ஒரு சிறு விருந்து. இவ்விரண்டும் நிறைந்தால், மனதும் ஆனந்தமான நிறைவடையும் அல்லவா? 

காக்கும் கடவுள் கணேசனை மனமுருக  முதலில் அழைப்போம். . தூக்கிய துதிக்கையே துணை நமக்கு என நம்புவோருக்கு, அவனருள் கண்டிப்பாக என்றும் உண்டு. 🙏.🙏. 


அடுத்து செங்கதிரும்... 

முழுமதியும்...... 

சேர்ந்தணைந்த சுந்தரனின் அருளும் கண்டிப்பாக நம் வாழ்வில் வளம் சேர்க்கும். 🙏.🙏. 

பிறகு மலர்ந்து மணம் வீசி வரும் பொங்கல் திருநாளை,  மங்களகரமான கோலங்கள் இட்டு பசும் மஞ்சளோடு வரவேற்கலாம்.. 




முதலில் இனிப்பான பால் கொழுக்கட்டைகள்.  

பச்சரிசி மாவை வென்னீர் சேர்த்து வேக வைத்துக் கொண்டு, சிறு உருண்டைகளாக செய்து, ஆவியில் வைத்து ஒரளவு வேக வைத்துக் கொண்டு, பால், மற்றும் கொஞ்சம் தேங்காய் பாலுடன், சேர்த்து மீண்டும் கொஞ்சம் கொதிக்க வைத்ததும்,வேண்டிய வெல்லமும் சேர்த்து, அந்த வெல்ல  வாசனை போகுமளவிற்கு (வெல்லம் முழுமையாக கரைந்தால் அதுதான் அடையாளம்)  கொதிக்க வைத்துக் கொண்டு ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கினால், இனிப்பான பால் கொழுக்கட்டைகள் தயார். 


அடுத்து இனிப்பான சேமியா கேசரி, மற்றும் உருளை கிழங்கு போண்டா. 

சேமியாவை தேவைக்கேற்ப எடுத்து வறுத்துக் கொண்டு, அத்துடன் மூன்று மடங்கு தண்ணீர் சேர்த்து, அத்துடன் ஒரிரு சிட்டிகை கேசரி பவுடரையும் சேர்த்து பின், வேக வைத்துக் கொண்டு, சர்க்கரை ஒன்றரை பங்கு அதனுடன் சேர்த்து நெய் விட்டு அடி பிடிக்காமல் கிளறி ஏலக்காயும் சேர்த்த பின்  மு. பருப்பு, உலர்ந்த திராட்சைகளை நெய்யில் வறுத்து போட்டு இறக்கினால், சுவையான சேமியா கேசரி பார்க்கவே அழகாக இருக்கும். 

உ. கி நான்கைந்து வேக வைத்துக் கொண்டு, தோல் நீக்கிய பின், பொடிதாக அரிந்த வெங்காயம், ப. மிளகாய் இவற்றை எண்ணெய்யுடன் வதக்கி, அத்துடன் உதிர்த்த உ. கி சேர்த்து, உப்பு, காரப்பொடி கலந்து நன்கு வதக்கி, ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். 

கடலைமாவையும், அரிசி மாவையும், பஜ்ஜி மாவுபோல கலந்து வைத்துக்கொண்டு, அந்த உ. கி உருண்டைகளை முக்கி எடுத்து எண்ணெய்யில் பொரித்தெடுத்தால், உகி போண்டா தயார். கூடவே தேங்காய் சட்னியும் செய்து சுடசுடப் பரிமாறலாம்... 


அடுத்து இலையில் பரிமாற சேப்பங்கிழங்கு கறி, ரோஸ்டாக வேண்டுமென்றால் இப்படிச் செய்யலாம். 

சேப்பங்கிழங்கு மண் போக நன்றாக அலம்பி குக்கரில் வேக வைத்து எடுத்து நன்கு ஆறியதும், தோல் நீக்கி ஒன்றிரண்டாக நறுக்கிக் கொள்ளவும்..கடலை மாவை, கொஞ்சம் அரிசிமாவுடன் கலந்து உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்துடன் பஜ்ஜி மாவு மாதிரி கரைத்துக் கொண்டு, அதில் சேப்பங்கிழங்கு துண்டுகளை முக்கி எடுத்து அடுப்பில் காயும் எண்ணெய்யில்
பொரித்தெடுத்தால் நன்றாக ரோஸ்டாக கரகரவென்ற சுவையுடன் வரும். எண்ணெய் அதிகம் சேர்க்க விருப்பமில்லாதவர்கள் கடாயில், கொஞ்சம் எண்ணெயில் முக்கி எடுத்த மாவுடன் கிழங்குகளை ஒன்றிரண்டாகப் போட்டு சிறு தீயில் வைத்திருந்து அடிக்கடி திருப்பி கொடுத்து கரகரப்பாக எடுக்கலாம். பொறுமையுடன் இதை அனைத்தையும் முடிக்க கொஞ்சம் நேரமாகும்.




அடுத்தாக இலையில் பரிமாற இரண்டாவது கறியாக புடலங்காய் உசிலி செய்யலாம். 

குருவி புடலங்காய் இரண்டோ, மூன்றோ வாங்கி நன்கு அலம்பிய பின் பொடிதாக நறுக்கி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். து. ப அரை டம்ளர், க. ப இரண்டு, மூன்று பெரிய ஸ்பூனாக சேர்த்து அலம்பி ஊற வைத்தபின், அத்துடன் சிகப்பு மிளகாய், ப. மிளகாய், உப்பு  பெருங்காயம் கறிவேப்பிலை சேர்ந்து மிக்ஸியில் அரைத்துக் கொண்டு அதை இட்லி தட்டுக்களில் வேக வைத்து உதிர்த்த பின், கடாயில், தேங்காய் எண்ணெய் விட்டு, கடுகு. உ. ப தாளித்து உதிர்ந்த பருப்புக் கலவையை  நன்கு உதிர்த்துக் பிரட்டி கொண்டு அத்துடன் வெந்த புடலங்காய்களைப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து பிரட்டி எடுத்தால் அருமையான புடலங்காய் உசிலி தயார். 
 

த்துடன்  வாழைப்பூ வடையும் செய்தால் இரண்டு இனிப்புடன் நான்கு காரம். 

வாழைப்பூவை  கள்ளன் ஆய்ந்து நன்கு அலம்பி வைத்துக் கொள்ளவும். , ஏற்கனவே ஊற வைத்த, அரை கிளாஸ் பச்சரிசியை, உப்பு, மி. வத்தல், ஒன்றிரண்டு பச்சை மிளகாயுடன் கொரகொரப்பாக  அரைத்துக் கொள்ளவும். அத்துடன் ஊற வைத்த ஒரு கிளாஸ்( இது மொத்தமாக கலந்த கலவை) நான்கு பருப்பு வகைகளையும்,(அதாவது உ. ப, து. ப, க. ப, பா. பருப்பு வகைகளையும்) அரைத்துக் கொண்டு பெருங்காயத்தூள் கறிவேப்பிலை சேர்த்து, அத்துடன் அலம்பி வைத்திருக்கும் வாழைப்பூவையும் அரைத்தெடுத்து கொண்டு, அனைத்தையும் கலந்த பின் சிறுவடைகளாக தட்டி எண்ணெய்யில் பொரித்தெடுத்தால் சுவையான வாழைப்பூ வடை தயார்.

பொங்கலன்று,  வழக்கமான இனிப்பான சர்க்கரை பொங்கலுடன், வெண் பொங்கலும் தயாரித்து கொண்டு, அதனுடன் மேற்கூறிய வகைகளையும் செய்து வைத்துக் கொண்டு பொங்கும் மங்கலம் எங்கும்  தங்குக என வேண்டியபடி, இறைவனுக்கு படைத்த பின் அனைவரும் உண்டு மகிழலாம். 

பொங்கலன்று இத்தனை ஐயிட்டங்களா...? எனத் திகைக்க வேண்டாம். சாதரணமாக அன்று மதிய சாப்பாடாக சர்க்கரை பொங்கல், வடை, அப்பளம்,  இரண்டு கறி, கூட்டு, தயிர் பச்சடி, ரசமென சாப்பிடுவது அன்றைய நாள் தொட்டு  இருந்து வரும் ஒரு பாரம்பரிய பழக்கம். ( இப்போது அந்த பழக்க வழக்கங்கள் மங்கி வருகிறது. செய்யவும் நேரமில்லை. சாப்பிடவும் முடியவில்லை.) அதனால்தான் கிராமங்களில், பொங்கலன்று "பால் பொங்கியாச்சா.. வயிறு வீங்கியாச்சா.. " என்று கேட்பதும் ஒரு வழக்கம். இதில் சற்று வித்தியாசமாக காய்கறிகளை வைத்தே இப்படி செய்யலாம் (இந்த ஒவ்வொன்றையும் இப்படி  செய்ய அன்றைய தினம் நேரம் கிடைப்பதும் அரிதுதான்) என இப்படி இத்தனை சமையல் தினுசுகளை பதிவிட்டேன். 

இன்னமும் என் விருப்ப இனிப்பான மைசூர் பாகையும் படங்களுடன் செய்முறையாக இதனுடன் இணைக்க மறந்து விட்டேன். அதையும் இணைக்கலாமென்றால்..... (ஆகா.. இதென்ன எல்லோரும் எங்கே ஓடுகிறீர்கள்...! ஹா.ஹா.ஹா சும்மா ஒரு  பேச்சுக்குத்தான் சொன்னேன்.  இல்லை.. .இல்லை.... இவ்வளவே அதிகம். மேலும் இரு இனிப்புக்களே, அன்றைய விஷேட தின இனிப்பான சர்க்கரைப் பொங்கலுடன் போதுமென்று நினைக்கிறீர்களா..! சரி. சரி.. 👍👍.) 

பி. கு... அன்றைய தினம்  உத்தராயண புண்ணியகாலம் என்பதினால், வடை, போண்டா போன்றவற்றிக்கு  வெங்காயம் தவிர்ப்பவர்கள் அதை தவிர்த்து செய்து கொள்ளலாம். ஏனென்றால், இதில் சில  எண்ணெய்  பலகாரங்கள் எப்போதோ எங்கள் வீட்டில் மாலை நேர சிற்றுண்டிக்காக தயாரித்தது. அந்தப் படங்கள், விவரணைகளுடன்  இந்தப் பொங்கல் சிறப்பு(சிறப்பிதழு)டன் "நானும் வருவேன்" என பிடிவாதமாக வந்து சேர்ந்து கொண்டது. சரி.. போனால் போகிறதென தவிர்க்க முடியாமல், நானும் அவைகளையும் சேர்த்து பகிர்ந்து கொண்டேன்.

 இரண்டாவதாக நாம் வாழும் இந்த மண்ணுக்கு நன்றி சொல்லும் விதமாய் மண்ணுக்கு மேல் விளையும், பயிர்கள்,  செடி, கொடிகள் நமக்குத் தரும் காய்கறிகள், பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் கரும்பு, பூக்கள்  பழம், வெற்றிலைப்பாக்கு, மஞ்சள் இலைகொத்துகள், மாவிலை, வேப்பிலை, வாழையிலை, போன்றவற்றிக்கு முக்கியத்துவம் தருவது போல், மண்ணிற்கு அடியில் விளையும் காய்கறிகளான கிழங்கு வகைகளையும் பிரியத்துடன்  இன்றைய தினம் (பொங்கலன்றும், அதன் மறுநாளும், )  உணவில் சேர்ப்பதை அவசியமாகவும். வழக்கமாகவும் கருதுவோம்.  எனவேதான் இதன் பேச்சுக்களுக்கு மதிப்பளித்தேன்.   ("எங்களை வைத்துதான் இந்தப் பதிவே....அதை மறந்து விடாதே... ரொம்பவும் அலட்டிக் கொள்ளாதே.. ...! போதும்.. போதும்..!! உன் பிர(பரி)தாபம் .. " என்று  அவைகள் கொஞ்சம் மெதுவாக இல்லாமல், சத்தமாகவே  கோபத்துடன் முணுமுணுப்பது என் காதுகளில் மட்டுந்தானா ? இல்லை, உங்களுக்குமா ? ஆனால், உங்களுக்கு அது ஏற்கனவே  கேட்டிருக்கும் எனவும் ஐயமுற நினைக்(நம்பு)கிறேன்.😀😁 😁. )  

 எப்படியிருந்தாலும் இந்தப் பதிவு,  சிறப்பாக 👌உள்ளதாவென உங்களிடமிருந்து அன்புடனான  👏👏 தட்டல் கருத்துக்களை எப்போதும் போல் ஆவலுடனும், ஆர்வத்துடனும் எதிர்பார்க்கும் உங்கள் சகோதரி.... கமலா ஹரிஹரன். 

அனைவருக்கும் மீண்டும் நன்றியுடன் கூடிய என் அன்பான பொங்கல் நல்வாழ்த்துக்கள். 🙏. 🙏. 


Tuesday, January 26, 2021

கடன் வாங்கியாவது..

அப்பாடா.. எப்படியோ  வந்து விட்டேன்..  இந்த நம்பிக்கை பாலம்  ஒன்றுதானே எப்போதும் எந்த காலத்திலும் நம் பலம்... நெட் பிரச்சனை காரணமாகவும்,   (தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி... தை பிறந்தவுடன் எனக்கும், இணைய தொடர்பு வழிகளுக்குமான வழிகள்  மூடிக்கொள்ள வேண்டுமா? அதுதான் கொடுமை. . ) வேறு சில பல சொந்த காரணங்களுக்காகவும் என் வலையுலக பிரவேசத்திற்கு தடை போட்ட விதியும்,  அதன் சதியும்  சற்றே அசந்து போய் இருந்த இடைப்பட்ட நேரத்தில் புகுந்து எப்படியும் வந்துருவோம்ல.....! (இங்குதான் என் பதிவை  படிப்பவர்களின் விதியும், (எனக்காக வந்து படிப்பதைதான்  கூறுகிறேன்.) சரியில்லை என்றுதான் நினைக்கிறேன்.:) ) 

சரி..  எப்படியோ வந்தாச்சு.. ஏதேனும் எழுதி கிழிக்காமல் போவதா? என ஒரு மனம் தேவையில்லாமல்  இடிக்க, பதிலுக்கு "உன் தொல்லையில்லாமல் அனைவரையும் நிம்மதியாக இருக்க கொஞ்ச நாட்கள் சும்மாவேனும் இரேன்" என இன்னொரு மனம் (நமக்குத்தான் இந்த இரண்டு மனங்களை நாம் கேட்காமலேயே இறைவன் தந்திருக்கின்றானே ....) கிண்டலடித்து சந்தோஷம் அடைந்தது.

இதை கேட்டதும் எதாவது இரண்டு வரிகளை எழுதியேத்தான் ஆக வேண்டுமென கை விரல்கள் சும்மாயிராமல் பிடிவாதம் பிடிக்க, சரி... " கடன் வாங்கி கழித்தல்" முறையிலாவது வந்து விடலாமென முயன்றேன். (அதாவது என்னைத் தவிர்த்து கைபேசிக்கு மொபைல் டேட்டா வைத்திருக்கும் என் குழந்தைகளிடம்  நெட் கடன் வாங்குவதன் மூலம்..  )  ஆனால், அதுவும் ஏனோ இத்தனை நாட்களாக சரியாக வரவில்லை. ( இந்த கடன் வாங்கி களித்தல் என்பது எனக்கு மட்டுந்தான் ராசியில்லை போலும்.....! என மன சமாதானமும் என்னால்  அடைய முடியவில்லை. ஆனால், எத்தனையோ பேர் வாழ்க்கையில் ஏற்படும் பணப் பற்றாக்குறையை  சரி செய்ய நிறையவே பிறரிடம் கடன் வாங்கி உடனடியாக அதை கழிக்க மறந்தவர்களாய் தினமும் மனம் போனபடி களித்திருக்கிறார்கள்... களித்து கொண்டுமிருக்கிறார்கள்.....:) அதுவும் உண்மையிலேயே அவரவர்கள் யோகங்களை பொறுத்ததுதான் அமையும் போலும்... :)  ) 

எப்போதும் எங்கள் வீட்டில், Wi-Fi வசதி தடையற இருந்ததினால், என்னுடைய  கைபேசியில் இதுவரை வேறு எந்த பிற வசதிகளையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. இப்போது ஒரு சூழ்நிலைக்காக ஒரு சிறிய இடமாற்றம். இடமாற்றத்தில், ஏகமாக வந்து குவிந்த வேலைகள் வேறு.  ஆனால் இங்கும் எப்போதும் தடையற இருக்கும் இணைய தொடர்பு  கொஞ்சமும் தாட்சண்யமின்றி, காலை வாரி விட்டு விட்டது. அதனால் ஏற்பட்ட சில பிரச்சனைகளில் என்னால் முன்பு மாதிரி  எல்லோரின் வலைத்தளங்களுக்கு சரளமாக வர இயலவில்லை...ஆனாலும், இப்போது எனக்கு வலைத்தளத்திற்கு வந்து உங்கள் அனைவரின் பதிவுகளை பார்த்து மகிழ்ந்து, கருத்துக்கள் இடும் அடக்க முடியாத அபரிமிதமான ஆவலில், என் கைப்பேசிக்கும் சிறிது நெட் இணைப்பு தந்து வருகை தந்துள்ளேன். இதிலும்  மிக தாமதமாகத்தான் எல்லா  இணைய தொடர்புகள்  வருகின்றன. இருந்தாலும், பழையபடி முன்பிருந்த  இணைய தொடர்பு எளிதாக கிடைக்கும் வரை அவ்வப்போது இயன்ற வரையில் வரலாம் இல்லையா? இப்போது இந்த நெட் வகைகள் எவ்வளவோ வந்து விட்டது. எதை. எப்படி எடுப்பது என்பதில்தான் ஏகமான குழப்பங்கள்.. தாமதங்கள்.. தடுமாற்றங்கள்.. எப்படியோ நட்புறவுகள் அனைவருடனும் இன்று மனம் விட்டு பேச வைத்த இந்த மொபைல் டேட்டாவுக்கும் நன்றி. எப்போதும் என்னை மறக்காத  அன்புள்ள சகோதர சகோதரிகளான உங்களனைவருக்கும்  என் நன்றி. 

பின்பு  சும்மாவேனும் வந்து விட்டு போனால். நன்றாக இருக்காது என்பதினால்,  நான்  படித்த சும்மா பதிவு ஒன்றுறையும் பகிர்ந்துள்ளேன். "நாங்களும் சும்மாயிருக்கிற நேரத்தில் இதை படித்துள்ளோம்.. எதற்கு இப்படி சும்மா.. சும்மாவென்று எங்களை சும்மா தொந்தரவு செய்கிறீர்கள்" என கேட்காது சும்மா இதையும் இன்னொரு தடவை படித்து விட்டோம் என  ரசிக்கும் அன்புள்ளங்களுக்கு என் பணிவான. 🙏. 

இதோ அந்த ப (பி) டித்த பதிவு..... 

**சும்மா**... சொல்லுவோம் தமிழின் சிறப்பை,

அது சரி *சும்மா* என்றால் என்ன? 

அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான் இந்த *சும்மா*. 

பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும் தமிழ் மொழியில் உள்வாங்கப்பட்டுள்ள *ஒரு வார்த்தை இது.*

*சும்மா* என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் *15 அர்த்தங்கள் உண்டு* வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை, நாம் அடிக்கடி கூறும் இந்த *சும்மா* எனும் வார்த்தை எடுத்துக்காட்டும்.

1, அமைதியாக - *சும்மா* (அமைதியாக) இருங்கள் – *Quiet*

2. களைப்பாறிக்கொண்டு - கொஞ்ச நேரம் *சும்மா* இருக்கின்றேன் - *Leisurely*

3. உண்மையில் - *சும்மா* சொல்லக்கூடாது அருமை - *in fact*

4. *சும்மா* ( இலவசமாக) கிடைக்காது - *Free of cost*

5. பொய் - *சும்மா* கதை அளக்காதே - *Lie*

6. உபயோகமற்று - *சும்மா* தான் இருக்கின்றது எடுத்துக்கொள் - *Without use*

7. அடிக்கடி - *சும்மா* *சும்மா* சீண்டுகின்றான் இவன் - *Very often*

8. எப்போதும் - இவன் இப்படித்தான் *சும்மா* சொல்லுவான் - *Always*

9. தற்செயலாக - ஒன்றுமில்லை *சும்மா* சொல்கின்றேன் - *Just*

10. காலி - இந்த பெட்டி *சும்மா* தான் இருக்கின்றது - *Empty*

11. மறுபடியும் - சொன்னதையே *சும்மா* சொல்லாதே - *Repeat*

12. ஒன்றுமில்லாமல் - *சும்மா* ( வெறும்கையோடு) போகக் கூடாது - *Bare*

13. சோம்பேறித்தனமாக - *சும்மா* தான் இருக்கின்றோம் - *Lazily*

14. நான் வெட்டியாக (*சும்மா*) ஏதாவது உளறுவேன் - *idle*

15. விளையாட்டிற்கு - எல்லாமே *சும்மா* தான் சொன்னேன் - *Just for fun*

நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த *சும்மா* என்கிற ஒரு சொல். நாம் பயன்படுத்தும் இடத்தின்படியும்…. தொடரும் சொற்களின்படியும்.. பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது என்றால் அது *சும்மா* இல்லை

*சும்மா* வாவது சிந்தித்தீர்களா இதனை..?

உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றன, 

ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்.

இந்த *சும்மா* என்கிற வார்த்தையும் அதன் அர்த்தமும் உங்களுக்கு *சும்மா* பிடித்து இருந்தால் *சும்மா* ஒரு Forward பண்ணுங்கள்..

எதற்கும் *சும்மா* பற்றி உங்கள் நண்பர்கள் குடுப்பத்தார் உறவினர்கள் தெரிந்து கொள்ள.. நன்றி... 

இந்த பதிவை படித்து விட்டீர்களா? எப்படியோ என் இணைய பிரச்சனை நடுவிலும் ஒரு பதிவை தேற்றி வந்து விட்டேன். கடவுளுக்கு நன்றி. பதிவைப் படித்து எப்படி  உள்ளதென  கூறும் உங்கள் அனைவரின் கருத்துரைகளுக்கும்  நன்றி. 🙏..