Thursday, December 31, 2020

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

இன்று புதிதாக சற்று நேரத்தில் பிறக்கப் போகும் புத்தாண்டு நல்ல பலன்களை உலக மக்கள் அனைவருக்கும் தர வேண்டுமாய் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

சென்ற ஆண்டு முழுவதும் கலக்கங்கள், வருந்தங்கள், இழப்புக்கள் என சந்தித்து விட்டோம்.  ஒவ்வொரு நொடிகளும் இனம்புரியாத பயங்கள் வேறு.... இப்போது இந்த ஆண்டு புதிதாக பிறந்துதிக்கும் நொடி அமைதியானதாக இனிய பொழுதாக பிற(பிறந்திரு)க்கும் என நம்புகிறோம். ஆண்டவன் உலக வாழ் மக்களின் அனைத்து உள்ளங்களிலும் அந்த நம்பிக்கை வேரை பரப்பி ஆணிவேராக அவனருளையும் அமையச்செய்து எல்லோர் மனதிலும்  சந்தோஷ கனிகளை மட்டும் காய்க்க விட வேண்டுமென அனைவரும் கூட்டுப் பிரார்த்தனையாக பிரார்த்தித்துக்  கொள்வோம். 🙏🙏🙏🙏🙏. 

இது பழைய பாடல்தான். ஆனால் இதன் வரிகளின் அர்த்தங்கள் எக்காலத்திற்கும் பொருத்தமானது. 

உதாரணமாக.... 

திருமதி வாணி ஜெயராமின் இனிமையான குரலில் வாழ்வின் நிதர்சனத்தை அழகாய் காட்டும் வரிகள்.... 

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க : அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க.: வேளை பிறக்குமென்று நம்பிக்கை கொள்க:  எந்த வேதனையும் மாறும் மேகத்தை போல.... 

இந்த வரிகள் இ(எ)ப்போதைய சூழலுக்கும் உகந்தவை. எனவே நம்புவோம்... நன்றி. 👍. 👍. 👍. 

பி. கு.. இந்தப் பதிவு மிகச் சின்னதாக முடித்து விட்டதால், (புது வருடத்தன்று எவரையும் சிரமபடுத்த வேண்டாமென்று  நல்ல எண்ணம்தான்... :)  ) இதற்கு முந்தைய பதிவை படிக்க தவற விட்டவர்கள் படிக்கலாம்.......  படித்து பார்த்தவர்களும் மறுபடி படிப்பதில் தவறில்லை... :))

இதுவும் இந்த புத்தாண்டில் ஒரு புது விதமான விளம்பரந்தான்..  

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்....:)) உண்மைதானே...! 

நன்றி... 

Monday, December 28, 2020

மார்கழியும், நினைவுகளும்.

  வைகுண்ட ஏகாதசி. 

தெய்வீக மாதமாம் மார்கழியில் அமாவாசை கழிந்ததும் வரும் சுக்லபட்ச ஏகாதசியில் இந்த வைகுண்ட ஏகாதசி  வருகிறது. பொதுவாக  மாதாமாதம் ஏகாதசி  விரதம்  இருப்பது சிறப்புத்தான். அது  இருக்க முடியாதவர்கள் ஒரு வருடத்தில் சிறப்பாக வரும் இந்த நாளன்று இந்த விரதத்தை முறையாக அனுஷ்டித்தால், வருடந்தோறும் மாதத்திற்கு இருமுறையென வரும் ஏகாதசிகள்தோறும் விரதம் இருந்த பலன்கள் கிடைக்கும்.  எங்கள் பாட்டி (அவர்கள் உயிரோடு இருந்தவரை..)  மாதந்தோறும் வரும் ஏகாதசிகளில் அப்போது (எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து) விரதம் இருப்பார். 

ஏகாதசி மரணம் துவாதசி தகனம் சிறப்பென்பார்கள். அது அவர்களுக்கு கிடைத்தது. வைகுண்ட ஏகாதசியை அடுத்த ஏகாதசி திதியன்று கூட அவ்வளவு இயலாமையிலும்,  அன்று குளித்தவுடன்தான் அவர்களின்் அப்போதைய ஆகாரமான சிறிதளவு பாலை அருந்துவேன் என்று பிடிவாதத்துடன் ஏகாதசியை நினைவு கூர்ந்து விரதம் காத்தார். அன்று மதியம் அவரின் இழப்பை நாங்கள் தாங்க முடியாமல் தாங்கினோம். வருடங்கள் உருண்டோடினாலும், இந்த மார்கழியில் அவர் நினைவுகள் என்றும் எங்களோடு. என்னை பாசமுடன் வளர்த்த அவரை நான் என்றுமே நினைவு கூர்ந்தபடி உள்ளேன். 

முன்பு அம்மா வீட்டிலிருந்த போது   (அப்போது எனக்கு ஏழெட்டு வயது இருக்கும். .) இந்த சிறப்பான ஏகாதசி நாளன்று மட்டும் மதிய உணவு சாதமாக  எடுத்துக் கொள்ளாமல். பச்சரிசி தோசை செய்து  ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விட்டு, மாலை பெருமாள் கோவிலுக்கு சென்று சுவர்க்க வாசல் திறப்புக்கு  (அங்கெல்லாம் அப்போது  மாலைதான் சுவர்க்க வாசல் திறப்பு.  இப்போது எப்படியோ தெரியவில்லை. ஆனால்  இங்கு  பெங்களூரில், மற்றும் எல்லாவிடங்களிலும் காலையிலேயே சுவர்க்க வாசல் திறப்பு ஆகி விடுகிறது. ) அருகிலிருக்கும் சுற்றம்,  நட்பு சூழ சென்று வருவோம். அப்போதெல்லாம் சுவர்க்க வாசல் என்றால், ஒரே கூட்டந்தான்.  தள்ளு முள்ளுவுடன் அம்மா கையை இறுக பிடித்தபடி அடித்துப் பிடித்து மூச்சு முட்ட இறைவனுடன்  சுவர்க்க வாசலை அடைவதற்குள், பாதி உயிர் போய் விடும். மீதி உயிர் எப்படியோ வாசலை கடந்ததும் மூர்ச்சை அடையாமல், சிறிது மூச்சை விட்டவுடன், அந்த பாதி உயிரும் ஒருவாறு தட்டுத்தடுமாறி வந்து இந்த மீதியுடன் ஒட்டிக் கொள்ளும்.  

அதன் பின் வந்த காலங்களில் "விரதம் மட்டுந்தான்.... நம் வீட்டில் பெருமாளுக்கு செய்யும்  வழிபாடுகள் போதும்... கோவிலுக்கு சென்று சுவர்க்க வாசல் தரிசனம் வேண்டாம். பிறகு ஒருநாள், நிதானமாக கோவிலுக்குச் சென்று தரிசிக்கலாமென"எங்கள் அம்மா எடுத்த முடிவில்  நாங்கள் மட்டும் எப்போதும் செல்லும் சுற்றங்களுடன் அன்றைய தினம் செல்வதில்லை. எனக்கு மட்டும்  ஒரு மாதிரி வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால், எங்கள் அம்மாவுக்கு கூட்டத்தின் இடிபாடு பிடிக்கவில்லையே. . .... என்ன செய்வது?" "சரி... மற்ற சுற்றங்களுடன் நீங்களாவது சென்றிருக்கலாமே? "என நீங்கள் நினை(கேட்)க்கலாம்......  எங்கள் அம்மா இல்லாமல் நான் எங்கள் வீட்டு வாசல் படியையே தாண்டிய(தாண்டவிட்ட) தில்லை. இதில் சுவர்க்க வாசலை எப்படி சந்தித்து அதன் படிகளை தாண்டுவது?  அப்போதெல்லாம் அந்த நாள் மறுபடியும் அடுத்த வருடம் வருவதை எதிர்பார்த்தபடி மனது ஆவலாக இருக்கும். (அதற்கு காரணம் அன்று எங்கள் பாட்டிக்கு நிகராக நாமும் விரதமிருக்கிறோம்... என்ற பெருமையும், மற்ற சுற்றங்களுடனான  வீட்டு குழந்தைகளுடன் (என் வயதை ஒத்த) வெளியே அன்றைய தினம் ஜாலியாக சேர்ந்து செல்கிறோம் என்ற ஆனந்தமும் மட்டுந்தான் முதலில் நிலைத்து இருந்திருக்கிறது என்பதை  பின் வரும் வயதுகளில் மனது பக்தியில் பக்குவப்பட்டு உணர்ந்திருக்கிறது.)  பின்பு வந்த காலங்கள் எனக்கே கூட்டங்களை சந்திக்க பிடிக்கவில்லை. வீட்டிலிருந்தபடியே இறைவனை தியானித்து, முடிந்த அளவிற்கு விரதங்கள் இருந்தே பழக்கமாகி விட்டது. 

இப்போது இங்கெல்லாம் (பெங்களூரில்) அனைவரும் வரிசையில் நின்று நிதானமாக சென்று வருவதை பார்த்திருக்கிறேன். நானும் காலை சுவர்க்க வாசலுக்கு செல்ல முடியாவிடினும், மாலையாவது சில தடவைகள் பெருமாளை குடும்பத்துடன்  சென்று  அவ்விதமே  வரிசையில் சென்று தரிசித்துமிருக்கிறேன். இந்த தடவை கொரோனா அவ்வாறும்  செய்ய முடியாமல் தடை செய்து விட்டது. 

இந்த முக்கோடி ஏகாதசி மூன்று நாட்கள் முறையாக இருக்க வேண்டிய விரதம். ஏகாதசிக்கு விரதம் இருப்பவர்கள் முதல் நாள் தசமியன்று காலை குளித்து முடித்து, விரதம் எடுப்பதாக உறுதி பூண்டு, அன்று பகல் பொழுதில் ஒரு வேளை உணவு உண்டு, இரவு வெறும் பால் பழம் எடுத்துக் கொண்டு, இரவு முழுவதும் உறங்காமல், நாராயணனை நாவாற பாடித் துதித்து, மறுநாள் விடியற்காலை ஏகாதசியன்று குளித்து வீட்டில் விளக்கேற்றி பூஜைகள் முதலானவை முடித்து பெருமாள் கோவிலுக்குச் சென்று இறை வழிபாடு செய்தபடி அன்றைய தினம் முழுவதும் ஏதும் உணவருந்தாமல் இருக்க வேண்டும். கோவில்களில் தரும் துளசி தீர்த்தத்தை ஒருவேளை உணவென கருதி பருகலாம். பின்பு மாலையும் வீட்டிலும். கோவில்களுக்கும் வழிபாடுகள் முடிந்தவுடன், ஸ்ரீ மன் நாராயணனை துதித்தபடி, இரவு முழுவதும் விழித்திருந்து, இரவு நாலாவது ஜாமத்தில் குளித்து முடித்து, துவாதசி பாரணை உணவுகளை பாயசத்தோடு (இதில் நெல்லிக்காய், அகத்திக்கீரை, சுண்டைக்காய் மூன்றும் முக்கியமானது) சமைக்கவாரம்பித்து, சூரியன் உதித்து வரும் முன் அதிகாலையில் வழக்கப்படி பூஜைகள் முடிந்ததும், சமைத்ததை அன்போடு இறைவனுக்கு படைத்து விட்டு, பிறகு இரண்டு பேருக்கு வயிறார அன்னம் படைத்த பின். பசுவுக்கும் காக்கைக்கும் வேண்டியதை புசிக்க கொடுத்தும், (அகத்தி கீரை கட்டுக்களை வாங்கித் தருவார்கள்) தானும் அமர்ந்து (விரதமிருப்பவர்கள்) சாப்பிடுவார்கள். அன்று  மதியமும் படுக்காமல் விழித்திருந்து மாலை இறைவழிபாடு முடிந்ததும் மறு பாரணையாக ஏதாவது சிறிதளவு சிற்றுண்டி எடுத்துக் கொண்டு இரவுதான் விரதம் முடித்து படுக்கச் செல்ல வேண்டும். இப்படி முறையாக செய்து முடிக்கும் இந்த விரதத்தின் மேன்மையை பற்றி எனக்கு தெரிந்த வரை சொல்லியுள்ளேன். 

நான் இந்த மாதிரி ஒரு தடவை கூட  இது வரை இருக்க முடியவில்லை. திருமணத்திற்கு பின் சென்னை வந்தும், குடும்பம், சூழல், என விரத ஆசைகள் நிராகரிக்கப்பட்டது. "உன் குழந்தைகளை கவனி.. அதுவே சிறந்த தெய்வ சேவைகள்" என்று  அறிவுறுத்தபட்ட வீட்டுப் பெரியவர்களுக்காக  எந்த விரதங்களும் எடுக்க இயலவில்லை. வீட்டின் சற்று அருகிலேயே இருக்கும் கேசவ மாதவ பெருமாளை (சித்திரக் குளம்) அன்றைய தினம் சென்று தரிசிக்க முடியாமல் போவதும் உண்டு. அவர்கள் (என் குழந்தைகள்) கொஞ்சம் பெரியவர்களானதும், இந்த ஏகாதசியில் ஒரிரு தடவைகள், வீட்டில் செய்து இறைவனுக்கு  நிவேதனம் செய்த கேசரி, பழங்கள் எடுத்துக் கொண்டு அன்று மட்டும் விரதம் இருந்துள்ளேன். ஆனால் இரவு முழுவதும் விழித்திருக்க இயலாது. மறுநாள் அலுவலகம் செல்லும், கணவர், மச்சினருக்கு காலையிலேயே சமையல்  சாப்பாடென வேலைகள் தொடரும் போது அது சிரமபடுத்தும் என்பதால் வழக்கப்படியான உறக்கம் தானாகவே வந்து கண்களை தழுவிக் கொண்டு விடும். ஆனால் குழந்தைகள் சற்று பெரியவரகள் ஆனதிலிருந்து பிறந்த வீட்டு வழக்கப்படி இன்று வரை மதியம் உணவாக சாதம் எடுத்துக் கொள்ளாமல், அன்னத்தை பின்னமாக்கி சாப்பிடும் பழக்கம் உள்ளது. (அரிசி உப்புமா, அரிசி உப்புமா கொழுக்கட்டை, இல்லை பச்சரிசி தோசை என செய்வேன். இல்லை, ஒரிரு சமயத்தில் உப்பில்லாத சப்பாத்தி செய்து விடுவேன். தொட்டுக் கொள்ள வெல்லந்தான் அனைத்திற்கும். இறைவனுக்கு நிவேதனம் செய்யும் கேசரியும் துணையாக வரும். ) 

ஆலயம் தொழுவது  சாலவும் நன்று எனப் படித்துள்ளோம். ஆனால், இயலாதவர்கள் இறைவன் மேலுள்ள பக்தியை தியானம், பூஜை என வீட்டிலிருந்தபடியே நம்மால் இயன்றவரை செய்து "அவனை" வேண்டிக் கொள்ளலாம் என்றுதான் நினைத்து திருப்தியடைந்திருக்கிறேன்.  ஆனால், மார்கழி மாதம் முழுவதும் காலை மூன்று மணிக்கே எழுந்து, தெரு வாசலில் வண்ண கோலங்கள் போட்டு, குளித்து, தினம் ஒரு கோவிலாக சென்று வந்த சந்தர்ப்பம் ஒன்றும் எனக்கு சென்னையிலிருக்கும் (லஸ்ஸில்) போது ஒரு தடவை கிடைத்தது. அப்போது சாட்சாத் அந்த கோதை நாச்சியாராக நாங்கள் குடியிருந்த  வீட்டின் பெண் (உரிமையாளரின் கடைசி பெண்.  என்னை விட நான்கைந்து வயது சிறியவள். அப்போது அவளுக்கு திருமணமாகவில்லை. ) தோழி என்னை அந்த கடமையை செய்ய வைத்து (தினமும் காலை மூன்று மணிக்கே என்னை வந்து எழுப்பி விடுவாள்.) என்னை அந்த வருடம்  மார்கழி மாதம் முழுவதும்  சந்தோஷப்படுத்தினாள். இன்று அவள் எங்கிருக்கிறாளோ? ஒவ்வொரு வருட மார்கழியில் அவள் நினைவும் என்னுள் தவறாது மலரும். 

இந்த விரதம் முறையாக இருக்கும் போது நாம் செய்த பாவங்கள் அகன்று, புண்ணியங்கள் அதிகமாவதால் அனைவருமே நல்லகதி பெற்று சுவர்க்கத்தில் இடம் இல்லாமல் போய் விடும் என்பதை உணர்ந்த மாயை ( இந்த மாயாசக்தியால்தான் பெருமாள் தேவர்களின் தேவைக்காக பூவுலகின் நன்மைகளுக்காக என்று அடிக்கடி எடுக்கும் மோகனி அவதாரமும்.. .. .அவளின் அம்சத்தைக் கொண்டே திருமால் பெண்ணாக உருமாறுவது. . என்பதாக புராணங்கள் கூறுகிறது.) நாராயணனிடம் கேட்கிறாள் 

(பாற்கடலில் அசுரர்கள், தேவர்கள் இருவரும் சேர்ந்து  அமிர்தம் கடையும் போது, வந்த அமிர்த கலசத்தை தேவர்களுக்கு தெரியாமல் அசுரர்கள் அபகரித்து கொண்டு போக அதை அவர்களிடமிருந்து வாங்கி, தேவர்களுக்கு மட்டும் பங்கிட்டு தர நாராயணன் எடுத்த மோகினி அவதாரம். ஒன்று.. 

ஸ்ரீ கிருஷ்ணன் தேவகிக்கு சிறையில் பிறந்தவுடன் அவரை நந்தகோபன் கோகுலத்திற்கு  எடுத்துச் செல்லும் போது, அதே  நந்த கோபரால் கோகுலத்திலிருந்து சிறையில் கொண்டு  விடப்பட்ட பெண் குழந்தையாக மாயை காத்திருக்க, தேவகியின் அண்ணன் கம்சன்  எட்டாவதாக பிறந்த அக்குழந்தையை கொல்ல வரும் போது, அவனை கடுமையாக எச்சரித்து  அவன் கையிலிருந்து தப்பித்து மாயமாகிச் சென்ற மாயா சக்தியும் அவள்தான். )  

"இப்படி புண்ணியம் செய்து மறுபிறப்பெடுக்காமல் மனிதர்கள் இருந்து விட்டால் என் கடமையை எப்படி இந்த பூலோகத்தில் சரிவர செய்வது" என வினவ "கவலைப்படாதே.. முறையாக விரதம்  இருந்து மனிதர்கள் என்னருளை முழுமையாக பெறும் போது, உன் மாயையால், சிறிது அவர்கள் கண்களில் உறக்கத்தை வரவழைத்து மயங்கச் செய்து விடு. அதனால் அவர்களுடைய புண்ணியமும் உனக்கு வரும்.  அதன் பின்பு அவர்களின் பாப புண்ணியபடி நீ உன் கடமைகளையும் பூலோகத்தில் செய்யலாம் எனக் கூறினாராம். அதனால்தான் இந்த விரதம் இருப்பவர்களை மோகினி என்ற மாயை மூன்று நாட்களில் எப்போதேனும் ஒரு முறையாவது சிறிது  உறக்கத்தை தந்து கண் மயங்க வைத்து விடுவாள் என்றும் கூறுவார்கள். ( இதற்கு மாற்றாக உள்ளங்கால்களில் சிறிது நெய்யை தடவிக்கொண்டு சிலர் வைகுண்ட ஏகாதசியன்று மதியம் படுத்து விடுவார்கள். இப்படி செய்தால், மோகினி நம் புண்ணியத்தில் பங்குக்கு வரமாட்டாள் என நம்பிக்கை அந்த மனிதர்களுக்கு. அப்படி கண்மூடி ஒரு மாதிரி மயக்கம் தெளிந்து எழுந்தாலும் பரவாயில்லை. அதுதான் சாக்கென 2,3 மணி நேரங்கள் நன்றாக படுத்துறங்கி எழுபவர்களையும் பார்த்திருக்கிறேன்.  அது என்ன விரதமோ? அனவிரதம்.  .ஹா. ஹா. ஹா.) 

ஒரு கதை... எனக்குப் பிடித்தமான கதை... நான் எழுதிய இந்தக்கதையில் ஏதேனும் குறையிருந்தால் பொறுத்தருளவும். 

ஒரு சமயம் நாரதர் "தான்தான் ஸ்ரீ மன் நாராயணனுக்கு பிடித்தமானவர். நான் ஒருவன்தான் அவர் நாமத்தை நாள்தோறும் பக்தியுடன் கூறிவருகிறோம் " என லேசான கர்வம் கொண்டாராம். அவருள் எழுந்த கர்வத்தை அவர்  வாயிலாகவே  போக்கி விட எண்ணம் கொண்ட எம்பெருமான் நாரதர் தம்மை தரிசிக்க வந்த சமயம் பார்த்து, "நாரதா. .நீதான் திரிலோக சஞ்சாரியாயிற்றே. ! பூலோகத்தில் என் பக்தன் ஒருவன் என்னையே சதாசர்வகாலம் நினைத்தபடி, என் கருணையை வேண்டியபடி உள்ளான். அவன் விருப்பத்தை நிறைவேற்றலாம் என உள்ளேன். அவனை நீயும் அறிந்து வருகிறாயா? என வினவவும், நாரதருக்கு தன் கர்வத்தினால், சட்டென கோபம் வந்தது. "நாராயணா... அவன் என்ன என்னை விட உன்னிடத்தில் பக்தி உடையவனோ? என கேட்கவும்,, பரந்தாமன் புன் சிரிப்புடன்," ஆமாம் என்றுதான் நினைக்கிறேன். நீதான் பார்க்கப் போகிறாயே . ... இதோ அவன் இருப்பிடத்தின் வழியும் இதுதான்" என்றபடி அவன் இருக்குமிடத்தை நாரதருக்கு உணர்த்தினார். 

நாரதர் உடனே கிளம்பி விட்டார். அவரின் கோபத்தைக்கண்டு எம்பெருமான் மனதிற்குள் நகைத்துக் கொண்டார். 

மறுநாள் காலை அந்த பக்தன் வீட்டிற்கு முன்பாக அவன் கண்களுக்கு தெரியாமல் நாரதர் மறைந்திருந்து அவனை கண்காணிக்க ஆரம்பித்தார். அவன் வாசலில் படுத்திருந்த கயிற்று கட்டிலிருந்து கண் விழித்து எழுந்ததும், தன் உள்ளங்கைகளை பார்த்தபடி, நாராயணா..... நாராயணா.. . என இருமுறை உரத்து கூவியபடி, வானத்தை நோக்கி நமஸ்கரித்து விட்டு படுக்கையை சுருட்டியபடி எழுந்து வீட்டினுள்ளே சென்றான். 

"ஓ...... இவர்தான் அந்த பக்தன் போலிருக்கிறது. .கண் விழித்தவுடன் நாராயணனை தொழுகிறானே... ஒருவேளை உண்மையிலேயே பரந்தாமன் கூறியது போல என்னை விட சிறந்த பக்தன்தானோ.? . இன்னும் எத்தனை முறை அவர் நாமாவை சொல்லப் போகிறாரோ.. பார்ப்போம்.... இன்று முழுவதும் பொறுத்திருந்து  பார்ப்போம்." என எண்ணிக் கொண்டார் நாரதர். 

அதன் பின்பு அவன் வேலைகளுடன் அன்று பம்பரமாய் சுழன்றான்.  வயதான தன் தாய், தந்தையரை பல் தேய்க்க வைத்து, குளிப்பாட்டி உடைகள் அணிவித்து, அவர்களுக்கு காலை ஆகாரமாக கஞ்சி புகட்டிய பின், தொழுவத்தில் இருக்கும் நான்கு மாடுகளை சுத்தப்படுத்தி, பால் கறந்து, அவற்றை வாங்க வருபவருக்கு விற்று, தன் மனைவிக்கு அன்றைய சமையலுக்கு வேண்டியவற்றை வெளியில் சென்று வாங்கித்தந்து, தன் குழந்தைகளை அன்போடு கவனித்து, அவர்களுடன் அளவளாவி, மதியம் அவர்களுக்கு உணவளித்து, நடுவில், தாய் தந்தையையும் கவனித்தபடி, தனக்கென வீட்டின் பின்புறமிருந்த சின்ன வயலில் இறங்கி வேலை செய்து, பின் சுத்தமாக குளித்து, சாப்பாடனவுடன், வெளியில் ஏதோ ஒரு கடையில் வேலைக்குச் சென்று அங்கு  கணக்காளராக சிறிது பணியாற்றி வந்ததும், மாலை, மாடு, குழந்தைகள், தாய், தந்தை, மனைவியென அவரவர்கள் தேவைகளுக்கு உதவி, இரவு  அனைவரும் உணவருந்தியதும், குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி, அவர்கள் உறங்கச் சென்றதும், அனைவரும் வீட்டினுள் பத்திரமாக கண்ணயர்ந்து விட்டார்களா எனப் பார்த்து விட்டு, பின் வீட்டிற்கு வெளியே, கயிற்றுக் கட்டிலை எடுத்துப் போட்டபடி படுக்க வந்தவன் மறுபடி வானத்தை நோக்கி. நாராயணா.. . நாராயணா என சத்தமாக கூவி கும்பிட்டபடி படுக்கையில் படுத்தவுடன் தன்னிலை மறந்தவனாய், அவனும் கண்ணயர்ந்தான். 

காலையிலிருந்து அவனை கண்காணித்தபடி இருந்த நாரதருக்கு அவன் இரவு வரை எத்தனை முறை பரந்தாமனின் நாமத்தைச் சொன்னான் என்பதை நினைவில் நிறுத்தி பார்த்தார். எண்ணி நான்கு முறைக்கு மேலாக அவன் நாராயணனை தொழவுமில்லை. சிந்திக்கவுமில்லை என்பது நினைவுக்கு வர, "இவனையா தன் பக்தன் என பரந்தாமன் கூறி மகிழ்நதார். ..  நல்லவேளை..  என்னைப் பார்த்து வரச் சொன்னார். இவனுக்கு குடும்பத்தை பார்த்து பார்த்து கொண்டாடவே நேரம் சரியாக இருக்கிறது. இவனைப் போய் எனக்கு நிகரானவனாக நாராயணன் கூறுகிறாரே... இதோ விரைவில் சென்று இவன் நிலையை தெளிவாக்குகிறேன்.. .. என்றபடி வைகுண்டதிற்கு ஏகினார். 

"என்ன நாரதா. ... என் பக்தனை கண்டு வந்தாயா? எப்படி இருக்கிறான்? பாவம் இல்லையா? அவனுக்கு நான் அருள் கூர்ந்து உதவ வேண்டுமில்லையா? என்ற கேள்வி கணைகளுடன் வரவேற்ற பரந்தாமனை கண்டதும் நாரதருக்கு நகைப்பு வந்தது. 

தான் காலை அவனை பார்த்த நிலையிலிருந்து, அவனின் அன்றாட வேலைகளை அவன் செய்த முறைகளையும், அவன் அவர் நாமத்தை பொழுதத்தனைக்கும், எத்தனை முறை சொன்னான் என்பதையும் விளக்கி விட்டு, "இவனையா எனக்கு சரியாக கூறினாய் ? என கேட்ட நாரதருக்கு சற்று கர்வம் முன்பை விட கூடியிருந்ததை கண்ட பரந்தாமன் மனதுக்குள் சிரித்துக் கொண்டார். 

" சரி நாரதா.... அவன் அவனுக்குண்டான கடமைகளை செய்யும் போது என்னை நினைக்க ஏது நேரம்? முதலில் அதை அவன் சரிவர செய்கிறான் பார்த்தாயா? இடைப்பட்ட நேரத்தில் என்னையும் துதிக்கிறான். அது போதாதா?. ..." என பரந்தாமன் நாதரின் கோபத்தை கிளறி விடவும், "நான் அவன் நிலையில் இருந்தால் உன்னை ஆயிரம் முறை துதித்திருப்பேன்.. . நீ வேண்டுமென்றே அவன் பக்கம் பேசுகிறாய்.  .!  என்றார் படபடப்பாக நாரதர். 

"நீயா? நீயோ கட்டை பிரம்மச்சாரி. அவன் சம்சாரி.. .நீ எப்படி அவன் நிலையில். ?? சரி. உனக்கேற்றபடி நான் ஒரு கடமையை தருகிறேன். இதோ ஒரு கிண்ணம் நிறைய எண்ணெய் தருகிறேன். நீ இதை கையில் வைத்துக் கொண்டு ஒரு துளியேனும் சிந்தாமல் சிதறாமல் மூவுலகமும் சுற்றி வரவேண்டும். எதிர்ப்படும் காரணம் கேட்கும் எவரிடமும் கோபமில்லாமல் சாந்தமாக நின்று உரையாட வேண்டும். நீ என்னிடம் இந்த எண்ணெய்யை கொண்டு சேர்ப்பிக்கும் போது ஒரு துளி குறைந்திருக்கவும் கூடாது. உன் கைகளிலும் எண்ணெய்கறை  சிறிதேனும் பட்டிருகக கூடாது. . செய்வாயா?" என்றதும், சவாலில் வெல்வதற்காக நாரதரும் எண்ணெய் கிண்ணத்துடன் மூவுலகை சுற்றி வர புறப்பட்டார். 

மூவுலகையும் சர்வ ஜாக்கிரதையுடன், எதிர்ப்பட்ட அனைவருக்கும் காரணத்தை விளக்கியபடி, ஒரு வழியாக நாராயணனின் கட்டளைப்படி துளி சிந்தாமல், சிதறாமல் எண்ணெய் கிண்ணத்தை கொண்டு வந்து தந்த நாதரின் முகத்தில் பெருமை சொல்லி மாளாமல் மின்னியதை கண்ட பரந்தாமன் மறுபடி சிரித்தார். 

"நாராயணா.... பார்த்தாயா என் சாமர்த்தியத்தை... ... அந்த பூலோக பக்தனால் இப்படி செய்ய முடியுமா?" நாதரின் முகம் பெருமையில் பளபளத்தது. 

"அது சரி. .  நாரதா... நீ இப்படி கிண்ணத்துடன் சுற்றி வரும் போது எத்தனை முறை என்னை நினைத்தாய்? எத்தனை தடவை என் நாமாவை சொன்னாய் ? என்ற பரந்தாமனை பார்த்து,, "பரந்தாமா  என்ன விளையாடுகிறாயா? இந்த கிண்ணத்திலிருக்கும் எண்ணெய் அசையாமல் நடக்கவே என் கவனம் முழுவதும் இருந்தது. இதில் இடைப்பட்டவர்களுக்கு நீ கூறியபடி பதில் சொல்லவே  சிரமப்பட்டேன். இதில் உன்னை எப்படி நினைப்பது? உன் நாமாவை எப்படி வாயாற பாடி துதிப்பது? அதற்கு எங்கு நேரம்? "

" அப்படி வா வழிக்கு. ...உன்னால் இந்த சிறு பாரத்தை சுமந்து, அதில் கவனம் செலுத்தவே நேரம் சரியாக இருக்கும் போது, அந்த பூலோக பக்தன் தன்னை பெற்ற வயதான தாய், தந்தையையும் கவனித்துக் கொண்டு, தன்னை நம்பி வந்த தன் மனைவியின் முகம் சுளிக்காது அவளின் இல்லற தேவைக்காக உழைத்துக் கொண்டும், தன்னால் உருவான தன் மக்கட் செல்வங்களையும் பாசத்துடன் கவனித்துக் கொண்டு, தனக்காக வாழும் வாயில்லா ஜீவன்களையும் அன்புடன் கவனித்துக் கொண்டு. இடையில் தன் ஆத்மாவுக்கும்  புத்துணர்ச்சி அளித்தபடி, வாழும் கடமை மனிதன். நான் வேறு... கடமை வேறல்ல... என்று உணர்ந்தவன். அத்தகைய பொழுதிலும் அவன் என்னை நாளொன்றுக்கு நான்கு முறை நினைத்தான்.. இப்போது சொல்..... அவன் பக்தி சிறந்ததுதானே. .! " நாராயணனின் விளக்கத்தில் நாதரின் கர்வம் சூரியனை கண்ட பனி போல் விலகியது. " 

"உண்மைதான். ..  பரந்தாமா..  அத்தனை கடமைகளிலும் உன்னை இரு பொழுதாவது நினைக்கும் அவன் பக்தி சிறந்ததுதான் . . .   ஏன் என்னை விடவும் அவன் சிறந்தவன். உண்மையை உணர்ந்து கொண்டேன். உன் விருப்பபடி உன்னருளை அவனுக்கு வாரி வழங்கு. .. .என்னுள் எழுந்த கர்வம் இப்போது போன இடம் தெரியவில்லை.  உன் செயல்களுக்கு என்றுமே நன்மை பயக்கும் அர்த்தங்கள் நிறைய உள்ளது. நாராயணா. ..  உன் அருளின் பெருமையே உணரும் போது என்னுள் எழும் ஆனந்தத்திற்கு அளவில்லை. என்று நாராயணனின் புகழ் பாடி பலவிதமாக அவர் துதிபாடி, நாராயணா. .. நாராயணா. .. என்ற நாமம் தன்னைச் சுற்றிலும் மணம் பரப்ப மனச்சஞ்சலங்கள் அகன்றவராய்  தன்னிருப்பிடத்திற்கு சென்றார் நாரதர். 

எதிலும், நாம் செய்யும் எந்த செயல்களிலும் நம்மையறியாமல், நம் கர்வம் ( அதை பெருமிதம் என பலர் கூறுவதுமுண்டு. அதுவே அளவு கூடி நம்மை ஆளும் போது அது பெயர் மாறி கர்வமென்றாகிறது.  என்பது என் தாழ்வான எண்ணங்களில் ஒன்று.) நம்மை தட்டும் போது இத்தகைய கதைகள் நமக்கு பாடம் புகட்டும் நீதி நூல்கள் ஆகிறது 

அடுத்து வரும் இந்தக்கதை வாட்சப்பில் பகிர்ந்து வந்ததில் படித்தவுடன் பிடித்தது...

"சாதாரண மனிதர்களுக்கு புரிவதில்லை" 

உத்தவர் கண்ணனிடம் கேட்ட விளக்கங்கள்....

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: ''கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார்?''

''நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லாமலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன்'' என்றான் கண்ணன்..

கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ... 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி... முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும்.

விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம்.அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. 'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் துரியோதனன்.

அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. .மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, 'துகில் தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’ என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'' என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்...

உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்:

''துரியோதனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன். அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, 'நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்'' என்று சொல்லியிருக்கலாமே? சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும்.

தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான்.

ஐயோ... விதிவசத்தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான்;என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான்.

யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன். பீமனையும், அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே!

அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை.

அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை! 

நல்லவேளை.. துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம்’ எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போது தான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?'' என்று பதிலளித்தான் கண்ணன்.

''அருமையான விளக்கம்... 

கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?'' என்றார் உத்தவர். ''கேள்'' என்றான் கண்ணன்.

''அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?''

புன்னகைத்தான் கண்ணன்

. ''உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்'' என்றான்.

''நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளை யெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?'' என்றார் உத்தவர்.

''உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச் செய்ய முடியாது.அதை நீங்கள் மறந்து விடும் போது தான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.

பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். 

எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம்.

நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?'' என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.

உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். 

ஆகா... எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்! 

இறைவன் நம் அருகிலேயே தான் இருக்கின்றார்... ஆனால் நம் வினை மறக்கச் செய்துவிடுகிறது.

இதிலும் வைகுந்த வாசியான காக்கும் கடவுள் ஸ்ரீமன்நாராயணன் அதர்மத்தை அளிக்க பூவுலகில் மானிட அவதாரமாக எடுத்து நம்மை நல்வழிப் படுத்துவதற்காக  வந்த ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, நம்முடன் நமக்கு பலமாக, நம் அருகிலேயே தாம் எப்போதும் இருப்பதை  உணர்த்துகிறார். நாம்தான் நம் கர்வம் என்ற பாறை தரை தட்ட நடுக்கடலில் பயணிக்க இயலாமல் தத்தளித்து ஆடும் கப்பலென தவிக்கிறோமோ என எண்ணுகிறேன். 

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் 

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம்

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம்.

இதை வைகுண்ட ஏகாதசியன்றே வெளியிட நினைத்தேன். வழக்கப்படி தாமதந்தான். (எழுதினால் அல்லவா வெளியிட முடியும். அவலை நினைத்து உரலை இடித்த கதையாய்....ஏதோ எழுத ஆரம்பித்து எங்கோ வந்து முடிந்திருக்கிறது. பொறுமையுடன் படிக்கும் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏🙏🙏🙏. 

Friday, December 11, 2020

மஹாகவி பாரதியின் பிறந்த நாள்.

இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாள்.

இன்று மலைகளின் சர்வதேச நாளும் கூட... இயற்கையில் உதித்த இந்த மலைகளின்  அழகு எப்போதுமே கவரக் கூடியவை. மலைகளின் வண்ண மாற்றங்கள் கண்களுக்கு விருந்தளிப்பவை.  மனதிற்கு இதமளிப்பவை. 

சுப்பிரமணிய பாரதியும் சிறு வயதிலேயே இயற்கையாய் அமைந்த தம்முடைய அறிவாற்றலினாலும், பிறவியிலிருந்தே  சட்டென கவிகள் பாடும் திறமையாலும், ஆழ்ந்த தேசப்பற்றினாலும், சாதரண மனிதர்களை விட மலையென உயர்ந்து அனைவரின் மனதிலும் தங்கியவர். / இன்னமும் நிரந்தரமாக தங்கி வாசம் கொண்டிருப்பவர். அவர் புகழ் என்றும் மணக்கும் தேவலோக பாரிஜாத மலர்களுக்கு ஒப்பானது. இன்றைய தினம் பூவோடு சேர்ந்த நாரும்  போல மலைகளின்  தினத்தையும் கொண்டாடுவது சிறப்பிற்குரியது.
 வாழ்க மஹாகவியின் புகழ். 
. வாழ்க சர்வதேச மலைகளின் சிறப்பும். 


மஹாகவியின் பாடல்கள் என்றும் மனதில் நிற்பவை.... 

வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்
வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்

முத்து குளிப்பதொரு தென்கடலிலே
முத்து குளிப்பதொரு தென்கடலிலே
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே
முத்து குளிப்பதொரு தென்கடலிலே
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே
நாட்டி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நாட்டி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவதும் மேர்கரையிலே
முத்து குளிப்பதொரு தென்கடலிலே

வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள் வைப்போம்
ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்

வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
நாங்கள் தோள் கொட்டுவோம்
நாங்கள் தோள் கொட்டுவோம்

அந்நாளைய இப்படத்தின் பாடல்களும் மறக்க முடியாதவை. இதில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களின் நடிப்பும் அருமையானவை. எப்போதுமே கேட்கத் திகட்டாதவை. அனைவருக்கும் நன்றி. 🙏🙏🙏. 

Friday, November 6, 2020

கொலு நினைவுகள்...

வருடாவருடம் தொன்றுதொட்டு வரும் பண்டிகைகளை  நினைவு தெரிந்த நாளிலிருந்து நாமும் அலுக்காமல், சளைக்காமல் சந்தோஷமாக, மிகுந்த உற்சாகமாக கொண்டாடித்தான் வருகிறோம். இதில் ஏதாவது மனக்குறைகள் வந்து விடும் போது  (அதுதான் வராமல் இருக்குமா? இல்லை, அதை வரவழைத்துக் கொள்ளாமல்தான் நாம் விடுவோமா ? அதுதானே மனித மனத்தின் இயல்பு.. .:)) அடுத்த தடவை இன்னமும் சிறப்பாக  அந்த பண்டிகைகளை கொண்டாடி விட வேண்டுமென்ற ஒருவிதமான கற்பனை  எண்ணங்களைை அந்த வருடத்திலிருந்தே வளர்த்துக் கொள்வதும் நம் பழக்கமாயிற்றே.....! இதனாால்  நேர்மறை எண்ணங்களோடு அடுத்த வருட வரையிலான நாட்கள் நம்மோடு ஓடி வரும் என்ற நம்பிக்கையும் நம்முள்...! அது போல், அந்த நம்பிக்கை, நம் பலத்தின் ஆணிவேராக இருந்து, வரும் வருடத்தையும்  கண்மூடி திறப்பதற்குள் விரைவாக அழைத்து வந்து நம்மிடம் ஒப்படைத்து விடும் .

நவராத்திரி கொலு வைபவங்கள் என்றுமே எனக்குப் பிடித்தமானது. வருடாவருடம்  கொலு வைக்கும் பழக்கம் அம்மா வீட்டிலிருந்தே உண்டு. இங்கு புகுந்த வீடு வந்த பின்னும் அம்மா சீதனமாக தந்த பொம்மைகளை கொண்டு கொலு வைக்க மாமியார் தந்த உத்தரவின் பேரில் வைத்து வந்தேன். அவ்வளவாக வருடங்கள்தோறும் பொம்மைகள் வாங்காவிடினும், சில வருடங்களுக்கு ஒருமுறை ஒன்றிரண்டாக வாங்கிச் சேர்த்து தொடர்ந்து வைத்து வந்தேன். கடந்த ஏழெட்டு வருடங்களாக ஏதோ தட்டிப் போய் விட்டது. இந்த தடவை தெய்வாதீனமாக எல்லாப் பண்டிகைகளும் உண்டெனினும் படிகள் அமைத்து கொலு வைக்க இயலவில்லை.  வீட்டில் சின்ன குழந்தைகளாக (பேரன் பேத்திகள்) இருப்பதால், கொலுவை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால் கொஞ்சம் அவர்கள் பெரியவர்கள் ஆனதும் வைக்கலாம் என்ற எண்ணம். அடுத்த வருடம் அதற்கு நேரம் நல்லபடியாக வாய்க்க வேண்டும் என பிரார்த்தித்தபடி. இந்த வருட நவராத்திரி நாட்களை  அம்மன் ஸ்லோகங்கள், தினமும் என்னால் முடிந்த நிவேதனங்களுடன், கொண்டாடி எப்போதும் போல், சரஸ்வதி பூஜை புத்தகம் வைத்து பூஜித்து, விஜயதசமி மாவிளக்கு வைத்து பூஜை செய்து நிறைவாக பண்ணினோம். 

இது எங்கள் அண்ணா வீட்டு கொலு படங்கள். அருகிலிருந்தால் நேரில் சென்று கொலுவை ரசித்து தரிசனம் செய்து ஆசிகள் பெற்று வருவேன். இப்போதுள்ள சூழ்நிலையில் அவ்வளவு தூரம் செல்லவும் முடியாது. எனவே அவர் இந்த தடவை நான் பார்க்க வேண்டுமென்று எடுத்தனுப்பிய படங்களை "எங்கள் வீட்டு"  கொலுவாக, (வழக்கப்படி தாமதமாக . ஆனால் நல்ல வேளை தீபாவளி முன்னர்.. ) பகிர்கிறேன். இதை என்றோ எழுதி வைத்து விட்டேன். அதை வெளியிடவும், "அவன்" நினைக்கும் நேரந்தானே எப்போதும் சரியான நேரமாக அமையும்.....! கொலுவைப் பார்த்து 👌ரென்று  ரசிப்பவர்களுக்கு என் அன்பான நன்றிகள். 🙏. 


கொலுவிருக்கும் பொம்மைகள்... 




















இது அதையே காணொளியாக தொகுத்தது.  சரியாக வந்திருக்குமென்று நம்புகிறேன். 

இதையும் பார்த்து ரசித்தவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள். 🙏. 

Saturday, October 3, 2020

விதியும், கவியும்..

பொதுவாக பிறப்பு எப்படி ஒருவருக்கு மகிழ்வை தருகிறதோ அதற்கு நேரெதிர் இறப்பு. ஒருவர் வருடக் கணக்காக உடல்நிலை சரியில்லாமல், படுத்த படுக்கையாக பிறருக்கு பாரமாக இருந்தால் கூட, அவர் டிக்கெட் எடுத்த இடம் வந்து இறங்க நேர்ந்தாலும், "இன்னும் கொஞ்ச நாள் இருக்கக் கூடாதா? அதற்குள் என்ன அவசரம்.. இப்படி எங்களை விட்டு போகுமளவிற்கு.." என்று ஆற்றாமையோடு, காலம் முழுக்க அவரை, அவர் பிரிவை நினைக்க வைத்து, கண்ணீர் வடிக்க செய்து விடும் அந்த மறைந்த ஒருவரின் பாசம் அனைத்தையும்  முழுமையாக பெற்று வாழ்ந்த  அவரது நெருங்கிய உறவுகளுக்கு....! (ஆனால்  நன்றாக நலமுடன் இருந்தவர் படுத்து நான்கைந்து நாட்களுக்குள் அவரின் இறப்பை அவசரமாக எதிர்பார்க்கும் உறவுகளும் இந்த உலகில் இருக்கிறார்கள். அது வேறு விஷயம்..:) )  

அனைவருக்குமே காதறுந்த ஊசியின் முனை கூட நம்முடன் வாராது என்பது தெரியும். ஆனாலும்  "நான்.. எனது.. என் பொருள்" என்ற எண்ணத்தை, ஒரு ஆழ்ந்த பற்றை இறுதி வரை எவராலும்  விட இயலவில்லை. ஒரு வேளை அது அனைவருக்கான விதியின் சாபமோ? ஒருவருக்கு அவர் வாழ்ந்த காலத்தில் எடுத்த நற்பெயரெனும் புகழ் ஒன்றுதான் அவர்  உடல் மறைந்த பின்னும் சில காலமாவது அவரைச் சுற்றி படர்ந்திருக்கும் ஒரு மாயை. அதுவும் காலப்போக்கில் கரைந்து வேறு பல வடிவங்களுக்கு இடம் கொடுத்து மாறுபட்டு விடும்  இயல்புடையது.  சம்பந்தமில்லாமல் என்ன உளறல் இது? என உங்களை  சிந்திக்க வைப்பதற்கு கொஞ்சம் மன்னிக்கவும். 

இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்பு காலை ஒரு கனவு. ஒரு உறவுக்கு பரிந்து மற்றொரு உறவிடம் பேசுகிறேன். என்ன பேசினேன்.. யார் அந்த உறவுகள்... என்பதெல்லாம் சுத்தமாக மறந்து விட்டது. கனவில் யாருக்கு அனுசரணையாக பேசினேனோ, அவரே  மிகவும் கொஞ்ச நேரத்தில் கோபமாக வெளியிலிருந்து வந்து கையிலிருக்கும் ஒரு இரும்பு  "வாளி" போன்ற கனமான பொருளை என் மேல் வீசுகிறார். முகத்தில் வந்து வேகமாக விழுந்த அதன் பாரம் தாங்காமல் நான் அப்படியே கீழே சுருண்டு விழுகிறேன். கொஞ்ச நேரம் கழித்து என்னுடன் பேசிக் கொண்டிருந்த வேறொருவர் என் பெயரை பல முறை கூவி அழைக்க நான் நனவுலகத்திற்குள் வந்து  விழுந்து அவசரமாக பதற்றத்துடன் எழுந்தேன்.

கனவுகள் பலதும் அர்த்தம் இல்லாமல் சிலசமயம் வருகின்றன. நாம்தான் அதற்கு ஒரு அர்த்தம் உண்டு பண்ணி கலக்கம்/மகிழ்ச்சி என்று அடைகிறோமோ என நான் எப்போதும் நினைப்பதுண்டு. 

எல்லா கனவுகளும் அதன்படியே வாழ்வில் நடப்பதில்லை. சில கனவுகள் நடந்து விடுமோ என்ற பயத்தை  நமக்குள் ஏற்படுத்தி நடத்திக்காட்டி விதியின் அருகில் இருக்கும் தைரியத்தில் நம்மை பார்த்து எக்களிப்புடன் சிரிக்கும் சுபாவம் கொண்டவை. ....சமயத்தில் சில மழையில் நனைந்த தீபாவளி வெடியாய் பிசுபிசுத்து நம்  பயத்தை பற்றிய  அக்கறை கொள்ளாதது போல் ஒதுங்கி விடும் பழக்கங்களை உடையவை.. .. 

அன்றாடம் நாம் பேசும் பேச்சுக்களே, நடந்த விஷயங்களே சில நேரம் கனவாக வருவதுண்டு. பலசமயம் எதற்கும், யாருடனான சம்பந்தமே இல்லாமலும்  கனவுகள் வருவதுண்டு.

 சில கனவுகள் விடியலில் கண் திறந்ததும் மறந்து விடும். ஆனால், இது நான் கண் விழித்ததே இந்த கனவினால்தான் என்பதினால், "இது காலன் என் மீது தன் பாசம் வீசி கொல்லும் கனவாக எனக்கு அன்று காலையிலிருந்து ஒரே கலக்கம்..." ஏற்பட்டது. "அதிகாலை கடந்த அந்தக் காலையில்,  கொஞ்சம் தாமதமான பொழுதில் வந்ததுதான் இந்த கனவு எனவே பலிக்காது என வீட்டிலுள்ளவர்கள் சமாதானபடுத்தினாலும், அன்றைய தினம் முழுதும் கனவின் நிஜப்பார்வைகள் வந்து  என்னை சலனபடுத்தியபடி இருந்தது." அதன் பின் தினசரி வெவ்வேறாக  வந்த கனவுகளில் அது இப்போது மறக்கவும்  தொடங்கி விட்டது. மற்றபடி எப்போதும் நடப்பதை (விதியை) யாரால் தடுக்க முடியும்? 

தான் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் தன் காலிலுள்ள காற்றை நம்பி வாழும்   "இதைப்"  பற்றிய ஒரு சிந்தனையில் எழுந்த ஒரு கவிதை.... பதிவுலகத்தில் எத்தனையோ பேர்களின்  ஆழமான அழகான கவிதைகளை படித்த பின், இதை கவிதை எனச் சொல்வதற்கும் எனக்கு மனமில்லை. . இருப்பினும்.... ஒரு...உரைநடைக் 

கவிதை. . பாராமுகம்...  .

விரும்பிச் சொல்லும்

சிறு விஷயங்களையும், 

விருப்பமின்றி புலம்புவதையும், 

விருப்பத்தோடு ஆமோதித்து, 

வித்தியாசங்கள் ஏதுமின்றி, 

"உச்" கொட்டியுள்ளாய்... 

என் வேதனைகள் தீர்ந்திடவே

வெகு நாட்களுக்கு பின், 

வேலை ஒன்று கிடைத்ததை

வேறெங்கும் சொல்லாமல், 

நான் வீடு தேடி வந்ததும் 

விருப்பமாய் உன்னிடம் பகர்ந்தும், 

உன் முகமும் காட்டவில்லை. 

"உச்" சென்ற  ஒலியும் எழுப்பவில்லை.

இது நாள் வரை என்

பார்வையில் மட்டும் பட்டு, 

என் வெறுமை என்னும்

கனத்த போர்வை விலக்கி, 

பழகிய பாசத்திற்காகவோ ,

இல்லை, நீ இருக்குமிடத்திற்கு

குடக்கூலிகள் என்ற ஏதும்

நிர்பந்திக்காத என்

நியாய உள்ளத்திற்காகவோ, 

பதிலுக்கு உன் விடைகளாய், 

"உச்" சென்ற ஒலியை மட்டும்

பாரபட்சம் ஏதுமின்றி, 

பகிர்ந்து வந்த பல்லியே.. .!

இதற்கெல்லாம் இனியதாய் ஒர்

பதிலேதும் சொல்லாமல்,  

பயங்கர அசட்டையுடன் நான்

பல தடவைக்கும் மேல், 

பாராமுகங்கள் காண்பித்ததில், 

பரிதவித்த ஒரு மனதோடு

இன்று  நீ என் 

பார்வையில் படாமல், உன்

பாதை மாறி போனாயோ...? 

ஒரு வாரத்துக்கு மேலாக இது மேலே பரணின் கதவில் நின்று கொண்டு தினமும் காலையிலிருந்து இரவு வரை பார்வையில் பட்டதோடு மட்டுமில்லாமல்,"எங்கே ஏதாவது உணவு பண்டங்களை சுவைக்கும் ஆசையில் அருகே நெருங்கி வந்து விடுமோ..?" என்ற கவலையில் மேலே ஒரு பார்வையும், கீழே அடுப்பில் ஒரு பார்வையுமாக ஒருவார காலம் தள்ள வைத்தது. பின், என் பார்வையின் சூடு பொறுக்காமல், அது இடம் மாறி அதன் விதித்த விதிப்படி எங்கோ சென்றதில் எழுந்த "கவி" தைதக்கா, தைதக்கா என வந்து குதித்தது. எப்படி உள்ளதென நீங்கள்தான் சொல்ல வேண்டும். 

நான் பதிந்த இரண்டின் இறுதியிலும் விதி என்றதும், விதியின் கணக்கும் ஒரு கவியாக "நானும்" என்றபடி ஆசையோடு வந்துதிக்க, . உங்களுக்கும் ஆட்சேபனைகள் ஏதும் இருக்காதென்ற நம்பிக்கையில் அன்புடன் அதையும் இந்தப் பதிவுக்குள் இறங்க சம்மதித்தேன். 

அந்தக்.. . 

கவிதை..விதியின் கணக்கு... 

பூட்டிய வீடு என்றாலும்,

புழங்கும் வீடாகி போனாலும்,

தினமும், ஒரே மாதிரி 

கூட்டிக் கழித்து, பெருக்கிப்

பார்த்தால், இறுதியில்

குவிவது குப்பைகள்தான்

நம் மனதாகிய மாளிகையிலும், 

அன்றாடம் குவியும் கணக்கற்ற 

குப்பைகளை களைவதும், 

களைந்ததை கழிக்காமல், 

கூட்டிப் பெருக்கி, வகுத்துப் 

பார்த்து பத்திரப்படுத்துவதும்

கடவுள் போடும் நான்கு விதிப்

பயன்களை ஒத்த கணக்குதான். 

அவ்வாறான மனக்கணக்குகளில்

கணக்குகள் பிறழ்ந்தால், 

கணக்கின்றி துயர் பெறும் நாம்

விதி(யின்) விலக்காக வரும் 

விடைகளை மட்டும் விரும்பி, 

நம்முடையதான கணக்கில்

சேர்த்து நம் பயி(முய)ற்சி என்கிறோம். 

இதில் வகைகள் வேறாயினும், 

இறுதி வடிவம் பெறுவது 

விதியின் விருப்பத்தில் விளையும்  

வித்தியாசமற்ற விடைகள்தான்.. 

வலியதாகிய விதியின் கணக்கில்

வரும் விடைகள் அனைத்துமே

அவை ஆரம்பத்திலேயே

வலியுறுத்தி நிர்ணயத்தவைதான்.

விபரங்கள் யாவும் அறிந்தும், 

விபரமில்லாமல், மனம் வருந்தி, 

விதியை சபித்து, நொந்து போவதும்

வாழ்வில் நாம்  பெற்று வந்த 

விதி தந்த  வரங்கள்தான்.. 


இப்பதிவை படித்து  நல்லதொரு கருத்துக்களை தரும் என் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு என் பணிவான நன்றிகள்.... 🙏... 


Tuesday, September 15, 2020

ஸ்ரீகிருஷ்ண பக்தி.

 முன்னுரை 

இக்கதையை அனைவரும் படித்து அறிந்திருப்பீர்கள். நானும் இதை எத்தனையோ எழுத்தாளர்களின் வர்ணிப்பில் ஆழ்ந்து படித்திருக்கிறேன். அன்றிலிருந்தே என் எழுத்தில் இக்கதையை எழுத நான் ஆசைப்பட்டதை உணர்ந்த கண்ணன் இப்போதாவது என்னை எழுத வைத்து விட அவனும் நினைத்தான் போலும்.. .! சரி.. .இதை  ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்திக்கு (கோகுலாஷ்டமி) எழுதலாமென நான்,  நினைக்கும் போது அவனே எங்கள் விட்டில் அவன் வந்த கதையை எழுத வைத்து விட்டான்.  போன வாரமும் வந்து முடிந்த ஸ்ரீ பாஞ்சராத்திர ஜெயந்திக்குள் எழுதி முடித்து விடலாம் என்று ஆரம்பித்த கதை தடைப்பட்டு அவனருளால் இன்றுதான் முடிவுற்றது. 

ஆரம்பமும், முடிவும் அவனேயாகி நிற்கும் அவன் துணையின்றி, ஒரு துரும்பும் அசையாத போது, நம் வாழ்வில் நடக்கும் கதையின் நகர்வும், நாம்  நிர்ணயக்கும்  ஒவ்வொரு செயலும்,  அவனுடையதல்லவா?அப்படியிருக்கும் போது நம்மை இப்படி  எழுத வைத்துப் பார்ப்பதும், ரசிப்பதும் அவன் பொறுப்புத்தானே...! தவிர இந்த நாள் என்றில்லாமல் என்றுமே அவன் நாள்தானே. ..! ஒவ்வொரு நாளுக்குள்ளும் நின்று நம்மை நகர்த்துபவனின் மாய சக்தியை உணர்வது மட்டுமே நம் கடமை. ....!   பிற அனைத்தும் அவனின் செயல்தானே....!

ஸ்ரீ கிருஷ்ணாய வாசுதேவாய தேவகி நந்தனாய ச நந்த கோப குமாராய ஸ்ரீ கோவிந்தாய நமோ நமஃ. 

ஒரு கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலில். இரவுநேரம் ஸ்ரீமத்பாகவத உபன்யாசம் நடைபெற்று கொண்டிருந்தது. அன்றைய தினம் பாகவதத்தில்  ஸ்ரீ கிருஷ்ணரும், பலராமரும், மாடு மேய்க்க அன்னை யசோதாவிடம் அனுமதி பெற்று, அன்புடன் அன்னை கையால், காலை பலகாரங்களை உண்டபின் ஒரு கானகம் வழியாக மாடுகள் சகிதம் சென்று கொண்டிருப்பதை பாகவதர் விளக்கிக் கொண்டிருந்தார். அவர்கள் அணிந்த அணிகலன்கள் அந்த கானகத்தின் இருளையும் போக்கவல்லதாக எப்படி ஜொலிக்கிறது.. . அவர்களுடன் மேனி எழிலுடன் அது எவ்வாறு போட்டியிட்டு ஜெயிக்கப் பார்க்கிறது என்பதை மெய்யுருக தமது பாணியில் சுவாரஸ்யமாக விளக்கிச் சொல்லி கொண்டிருந்தார்.

அப்போது அந்த ஊரில் திருட வந்த ஒரு திருடன் "ஊர்மக்கள் அனைவரும் இங்கு குழுமியுள்ளனர். இப்போதுதான் நான் சென்று திருட முடியும்" என்று  நினைத்தவன். தற்செயலாக அந்த பாலகர்கள் சிறந்த நகை நட்டுக்களுடன் தனியாக கானகத்தில் தினமும்  வருகின்றனர் என்று பாகவதர் வலியுறுத்திக் கூறும்  செய்தியில் கவரப்பட்டு ஒரு நொடி யோசித்தான். 

"இந்த ஊரில் இன்றிரவு முழுவதும் வலை வீசிி தேடும் பொருளை விட அந்த பாலகர்கள் தனியாக வரும் காட்டை இந்த பாகவதர் மூலமாக தெரிந்து கொண்டால், ஒரே நாளில் மிக சிறந்த செல்வந்தனாகி விடலாம்... அடேயப்பா...! எவ்வளவு நகைகளை பட்டியலிட்டு கூறுகிறார். தலையில் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட கீரிடங்கள், காதுகளில் வைர குண்டலங்கள், மார்பில் வைரக்கற்களால் இழைக்கப்பட்ட பொன்னாபரணங்கள், இடுப்பில் ஒட்டியாணம், காலில் பொற்சலங்கைகள், இது போக அந்த சின்னஞ்சிறு பாலகன்  கிருஷ்ணனின் கைகளில் உள்ள தங்கப் புல்லாங்குழல் அத்தனை விலைமதிப்புள்ளதாம்... இத்தனையும் தரித்துக் கொண்டு யாருமில்லாத அத்துவான காடு வழியாக தன்ந்தனியராக"..இது மட்டுமேஅந்த திருடனின் மனதில் மறுபடி மறுபடி ஓடிக் கொண்டேயிருந்தது." அங்கு சென்று அந்த பாலகர்கள் மடக்கி எல்லாவற்றையும் அபகரிக்க எவ்வளவு  நேரமாகப் போகிறது.. . .? அனேகமாக நான் நாளையே பெருஞ் செல்வந்தன் ஆகி விடுவேன்." ஆனந்தமான கற்பனைகளில் அவன் கண்கள் அசர மேற்படி பாகவதர் சொன்னதை அவன் செவி மடுக்கவில்லை. 

ஒரு மட்டும் நள்ளிரவில் அவர் தன் உரை முடித்து, அமர்ந்திருந்த ஊர்மக்கள் கலையத் தொடங்கியதும், தன் வீடு திரும்ப  கோவில் வாசலில் கோவில் நிர்வாகிகள்  அமர்த்தி தந்திருந்த மாட்டு வண்டியில், ஏறுவதற்காக வந்தவரை, "ஐயா. . ஒரு நிமிஷம்.. ஒரு சந்தேகம் கேட்க வேண்டும். இப்படி தனியாக வருகிறீர்களா? என்ற திருடனை பார்த்ததும்,  "சரி..! என் பாகவதத்தில் இவனுக்கு ஏதும் சந்தேகம் வந்துள்ளது போலும்"... என்று நினைத்தபடி அவனுடன் சென்றார். 

கோவில் பின்புறம் யாருமில்லாத இடத்திற்கு வந்ததும், "ஐயா..நான் ஒரு திருடன். இன்று தங்கள் பேச்சில் நிறைய நகைகளுடன் வந்த இருபாலகர்களைப் பற்றி கூறினீர்கள்..! அவர்கள் எங்கு எந்த காட்டில் வருகிறார்கள். எனக்கு அடையாளம் காட்டுங்கள். அவர்கள் அணிந்து வரும் நகைகளை நான் கொள்ளையடிக்க வேண்டும். செல்வந்தனாக வேண்டும். வேண்டுமானால அதில் கொஞ்சம் உங்களுக்கும் தருகிறேன்." என்றான் திருடன். 

பாகவதருக்கு அவன் திருடன் என்றதும் ஒரு நிமிடம் உடம்பு வெலவெலத்தது. இருப்பினும் சமாளித்துக் கொண்டு,  "அப்பா.. அவர்கள் புராணங்களில் வருகிறவர்கள். கதை மாந்தர்களான கடவுள்கள்.. அவர்களை நாம் நேரில் காண முடியாது.. நான் ஏதோ என் வயிற்றுப் பிழைப்புக்காக இப்படி புராண கதைகளை விரிவாகவும், இடையில் என் கற்பனைகளையும்  கலந்து சொல்லி வருகிறேன். இதில் உண்மையாக அவர்களை நான் எப்படி அடையாளம் காட்டுவது? என்று சிறு நகைப்புடன் கூறவும் திருடனுக்கு மிகையான கோபம் எழுந்தது.

"ஐயா. . நான் இப்படி சாந்தமாக கேட்டால் சொல்ல மாட்டீர்கள். அவர்களை காப்பாற்ற நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள். என் கோபத்தை இப்போது செயலிலும் காட்டப் போகிறேன். நீங்கள் அவர்கள் வரும் வழியை சொல்லாவிட்டால் இப்போதே உங்களை கொன்று விடுவேன்." என்றபடி தன் இடுப்பில் உள்ள கத்தியை எடுத்து அவர் கழுத்தில் வைத்தான். 

பாகவதருக்கு கத்தியை கண்டதும் பாதி உயிரே போய் விட்டது." அடேய் இருப்பா..! நான் ஏன் பொய் சொல்ல வேண்டும்? உண்மையிலேயே அவர்கள் கடவுள்கள்.. அவர்களை இந்த மானிடப்பிறவியில் கண்களால் காண முடியாது" என்றெல்லாம் மறுபடியும் அவனுக்கு புத்தி சொல்ல வந்தவர், அவன் கத்தியை தன் கழுத்தில் வைத்து கண்டிப்பாக அழுத்தி விடுவான் என்பதை அவன் விழிகள் சிவந்து கோபமுற்ற பார்வையில் உருளுவதை பார்த்ததும், வாய்க்குள்ளேயே விழுங்கிக் கொண்டார். 

" அப்பா. . என்ன இது? இதற்கெல்லாம் நீ கத்தியை காட்டுவாயா? எனக்கும் அவர்கள் வரும் விபரம் தெரியுமேயன்றி, எந்த காடு என்பது விபரமாக தெரியாது . அது இதோ எதிரில் இருக்கும் இந்த காடாக கூட இருக்கலாம். நீ அங்கு சென்று காத்திரு. ஒரு வேளை அவர்கள் இந்த வழியாக  வந்தாலும் வரலாம்." என்று தட்டுத்தடுமாறி ஒரு சமாளிப்புக்காக சொன்னதும்,  "சரி!.. உன் பேச்சை நம்பி இப்போதே போகிறேன். நாளை காலையில் நீ சொன்ன அந்த கண்ணன் வருவானில்லையா? அப்படி வரவில்லையென்றால், நான் திரும்பவும் இங்குதான் வருவேன். அதற்குள் அவர்கள் எந்த காட்டில் வருவார்கள் என்பதை யாரிடமாவது கேட்டுத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். நான் வந்தவுடன் விபரம் சொல்ல ஏதுவாக இருக்கும். இப்போது நீங்கள் போகலாம்.." என்றபடி அவரை விடுவித்தான் திருடன். 

அவனிடமிருந்து தப்பித்த பாகவதருக்கு உடம்பு கைகால்கள் சில்லிட்டு விட்டது." "சே..! திருடனாக மட்டுமில்லாமல், சரியான பைத்தியகாரனாகவும் இருக்கிறான்.என்ன சொன்னாலும் நம்ப மாட்டேன் என்கிறானே..! கிருஷ்ணரின் நகைகளாம்...! இவன் போய் கொள்ளையடிக்கப் போகிறானாம்...! நாம் வேறு இன்னமும் சில நாட்கள் இங்கு வந்து பாகவதம் செய்ய ஒப்பந்தமாகி உள்ளது. அதை முடித்து விட்டால் அவன் கண்களிலிருந்து தப்பித்து நம் ஊருக்கு சென்று விடலாம். அது வரை இப்படி ஏதாவது சொல்லி தப்பிக்க வேண்டும். கண்ணா.. நீதான் எப்படியாவது என்னை காப்பாற்ற வேண்டும்"என்றெல்லாம் மனதுக்குள் புலம்பிக் கொண்டே தம் இருப்பிடம் போய் சேர்ந்தார். 

அங்கு திருடன் உடனே  அந்த நள்ளிரவிலும் அந்த காட்டிற்குள் பயணித்தான். மறுநாள் விடிந்தவுடன் தனக்கு கிடைக்கப் போகும் செல்வங்களையும், அதற்கு காரணமாக அந்த இரு சிறுவர்களையும் நினைத்தபடி பயமின்றி அந்த காட்டுக்குள் சென்று கொண்டேயிருந்தான் . 

அடர்ந்த காடு.. .. . திருடனுக்கு இருட்டை பற்றி கொஞ்சமும் பயமில்லை.. ஆனால், காட்டு மிருகங்கள் வந்து தாக்கி விடுமென்ற ஒரு சிறு பயத்திற்காக, ஒரு பெரிய மரத்திலேறி உச்சிக்குச் சென்று அமர்ந்து கொண்டான். அங்கிருந்து மிக லேசாக புலரும் அதன் வடிவ அடையாளம் கொண்டு கிழக்கு திசை நோக்கி  பார்த்தபடியிருந்தான். அந்த பாகவதரும் கண்ணன் கிழக்கு திசையிலிருந்து வரும் போது எப்போதும் தினமும் உதிக்கும் ஆதவனை விட ஆயிரம் கோடிப் பிரகாசமாக கண்ணன் நடந்து  வருவதாக குறிப்பிட்டிருந்தது நினைவில் நின்றதால் கிழக்கு திசையைத் தவிர அவன் கண்கள் வேறு திசையை நோக்கவில்லை. 

இடையே விடியலில் நேரத்தில் கண்கள் தூக்கத்தில் சிக்கித் தவிக்கும் போது, விழிகளை அழுத்தி கசக்கியபடி, கண்ணனின் நகைகளையும், அவன் உருவத்தையும் மனக்கண்ணில் கொண்டு வந்து"இதோ அந்த பாலகன் வரும் நேரம் நெருங்கி விட்டது. அவன் வரவை வழிமேல் விழி வைத்திருந்து பார்க்க வேண்டாமா? அதற்குள் நீ அலுப்பில் அசந்தால் எப்படி. .?" என்று தன் விழிகளை வைதபடி தனககுள் கடிந்து கொண்டான். 

அன்றிரவு நீண்ட நேரம் போனது மாதிரியே உணர்ந்தான். மறுபடி மரத்திலிருந்து இறங்கி, ஏறினான். "என்ன இது? இந்த கண்ணன் நேரத்தில் வந்து விடுவானா.. தெரியவில்லையே? " என தனக்குள் பலமுறை சொல்லிக் கொண்டான். பொழுது விடியும் நேரம் நெருங்குவதறகு அறிகுறியாக புள்ளினங்கள் தத்தம் குரல் இனிமையை வெளிக்காட்டி, தம் காலை வணக்கத்தை இயற்கைக்கு சமர்பிக்க ஆரம்பித்தன.  

சூரியன் இரவின் அணைப்பில் சற்று சேர்ந்திருந்த தன் தேகச்சோம்பலை உதறி  விட்டு தான் போர்த்தியிருந்த இரவு போர்வையை சிறிது விலக்கி பார்த்து விட்டு, இவ்வுலகம் ஒவ்வொரு நாளும், தன் வருகையை ஒரே மாதிரி எவ்வளவு ஆவலுடன் எதிர்பார்க்கிறது என்பதை சந்தோஷமாக உணர்ந்தவனாய், தன் இயல்பான ஒளிக் கிரணங்களை மெல்ல தன்னைச் சுற்றிலும் பாய்ச்சியபடி வான வீதியில் உலா வருவதற்கு ஆரம்ப ஆயுத்தமாக  தன் கால்களை பதிக்க ஆரம்பித்தான். 

"இந்தக் கண்ணன் இன்று தாமதிக்கிறானா? இல்லை, இன்று வர வேண்டாமென நினைத்து விட்டானா? சூரியனை தோற்கடிக்கும் ஒளியுடன் அவனுக்கு முன் இந்த கானகத்தில் கால் பதிப்பான என அந்த பாகவதர் கூறினாரே.. ! ஒரு வேளை அவர் இரலென்றும் பாராமல்,, அவன் வீடு சென்று ஏதாவது எச்சரித்து சொல்லித்தான் அவன் இன்று  வராமல் இருக்கிறானோ. ..! விடிந்ததும் அவன் வரவில்லையென்றால் அவர் இருப்பிடம் சென்று விசாரிக்கும் போது, அவர் மட்டும் அப்படி சொல்லியிருப்பது தெரிய வந்தால், அக்ஷணமே அவரை கொல்லாமல் விடக் கூடாது...! " என்றெல்லாம வாய் விட்டு பல்லை கடித்து புலம்பியபடி கிழக்கு திசையையே உற்றுப் பார்த்தவனின் கண்கள் ஆச்சரியத்தில் பளபளத்தன. 

அங்கே பாகவதர் சொன்ன மாதிரி ஆயிரம் கோடி பிரகாசமாய் ஒரு ஒளி பிரகாசித்தது. அதைக்கண்டு தன் கிரணங்களை அதட்டி சுருட்டிய மாதிரி சூரியன் தன் ஒளிப்பாய்ச்சலை சற்று மங்கிப் போகச் செய்தான். மீண்டும் சற்று இருளான அந்த இருளில். கண்ணனும், அவன் சகோதரனும் கை கோர்த்தபடி, வந்து கொண்டிருப்பதை அந்த திருடன் கண்டான்.

அந்த பாகவதர் வர்ணித்த மாதிரி அவர்கள் அணிந்திருந்த நகைகள் வேறு மேலும் இருளை விரட்டி ஒளியூட்டின. அந்த திருடன் விழி அசைக்க மறந்து பார்த்துக் கொண்டிருக்கையில் கண்ணனின் கையிலிருந்த தங்கப் புல்லாங்குழல் என்ற கருவியிருந்து  வந்த இனிய இசை நாதத்தில்  அவன் கண் மூடி மெய் சிலிர்த்து சிறிது நேரம் சமைந்து போனான். "என்ன இது? அவர்கள் வருவதற்குள் மரத்திலிருந்து கீழிறங்கி, பதுங்கியிருந்து தீடிரென அவர்களை வழிமறித்து நகைகளை பறிக்க வேண்டுமென்ற எண்ணமின்றி, முன்பின் தெரியாத, இது வரை கேட்டிராத இந்த இசையில் இப்படி மயங்கி கண்மூடி இருக்கிறோமே" என்று சிறிது நேரத்தில் தன்னிலை உணர்ந்தவனாய் வெட்கி தன் அசட்டுத்தனத்தை புறந்தள்ளி விட்டு மரத்திலிருந்து இறங்க முற்பட்டான். அதற்குள் கண்ணனும், மிக அருகில் வந்து  விடவே, ஆச்சரிமுற்று அவனைப் பார்த்த திருடன் அவனை வழிமறிப்பதை விட்டு விட்டு அவன் அழகிய முகத்தை பார்ப்பதொன்றே தான் வந்த காரியத்தில் ஒன்றென நினைப்புடன் அவனை பார்த்தபடியே நின்றிருந்தான் . 

"என்ன இரவிலிருந்தே எங்களை எதிர்பார்த்தபடி மரத்தில் சிரமமான வாசமோ?" தன்னருகில் வந்தவன் தன்னுருவத்தை கண்டும் சிறிதும் பயமின்றி இப்படி ஒரு கேள்வி கேட்பான் என்று நினைக்காத திருடன்  சற்று பிரமித்தான். 

ஒருவாறு சமாளித்தபடி, "ஆமாம்.  நீங்கள் யார்? இந்த இருட்டுப் பிரியாத நேரத்தில், இத்தனை நகைகளையும் போட்டுக் கொண்டு, தன்னந்தனியராக பெரியவர்களின் துணையில்லாமல், யாரேனும் கள்வர்கள் வருவார்களே என்ற பயம் சிறிதுமின்றி காட்டு வழியே இப்படி வரலாமா? என்று கேட்ட திருடன் தன் குரலிலும், இப்படி ஒரு கனிவு எப்படி வந்தது என ஆச்சரியமடைந்தான். 

"கள்வர்களா ? யார் அவர்கள்? நாங்கள் இதுவரை அவர்களை பார்த்ததேயில்லை. அவர்களும் நம்மைப் போன்று மனிதர்கள்தானா. .? ஐயோ. எனக்கு பயமாக இருக்கிறதே. ...!" சற்று பயந்த மாதிரி கண்ணன் நடிக்கவும், திருடனின் மனதில் அளவற்ற பாசம் அவன் மேல்  பிரவாகமாக எழுந்து ஆர்ப்பரித்து பொங்கியது. 

" குழந்தைகளா.. .! பயந்து விடாதீர்கள்.  இவ்வளவு அழகான குழந்தைகளை இத்தனை நகைகள் இட்டு இந்த இருட்டுப்பிரியாத நேரத்தில் அனுப்ப உங்கள் பெற்றோருக்கு எப்படி மனசு வந்ததோ. .? இதோ பாருங்கள்.. நான் சொல்வதை கேட்டு பயந்து விடாதீர்கள். உங்களைப் பார்த்தவுடன் உண்மையை மட்டும் சொல்ல வேண்டுமென ஏதோ எனக்குள் தோன்றுகிறது. நான் கூட ஒரு கள்வன்தான். அதுவும் அந்த பாகவதரின் பேச்சைக் கேட்டு உங்களையே வழிமறித்து உங்கள் நகைகளை அபகரிக்க வந்தவன்தான் . .! ஆனால்,, உங்கள் முகத்தைப் பார்த்ததும்  எனக்கு அந்த ஆசையே போய் விட்டது. எப்படியென்றும் தெரியவில்லை...." என்றபடி கண்ணனின் மோவாயை தொட்டவனுக்கு உடலெங்கும் மின்சாரம் பாய்ந்த உணர்வில் சிலிர்த்துப் போனான். 

நீ கள்வனா...! அப்படியென்றால் இந்த நகைகளெல்லாம் உனக்கு வேண்டுமா? நாங்கள் தர முடியாது என்றால், வலுவில் எங்களை அதட்டி மிரட்டி அதையெல்லாம் அபகரிப்பாயா? கண்ணன் இன்னமும் பயந்தது போல் நடிக்க, "ஐயோ.. அப்பா. . இதென்ன இப்படி கேட்கிறாய்?உங்களைப் போய்  அதட்டி மிரட்டுவேனா? நான் உங்களை பார்ப்பதற்கு முன்பு வரை களவன்தான். .. இப்போதுதான் எனக்கு அந்த எண்ணமே இல்லையே. ..! என்றான் திருடன் பரிதவித்த குரலில். 

கண்ணன் ஒரு புன்முறுவல் பூத்தபடி,  "அப்பாடி... நான் பயந்து விட்டேன். நீ நல்ல திருடன்தான். ஆனால், நீ ஆசைப்பட்டு இங்கு வந்த காரணப்படி, எங்கள் நகைகளை பரிசாக உனக்குத் தருகிறோம். வாங்கிக் கொள்...! என்றான். 

" இல்லையில்லை. .. எனக்கு வேண்டாம். எனக்கு அந்த ஆசையே முற்றிலுமாக போய் விட்டது. உன்னைப் பார்த்துக் கொண்டே இந்த பிறவி முழுவதும் இப்படியே இருந்து விடலாம் எனத் தோன்றுகிறது. ஆனால், அது சாத்தியமல்லவே ... .! இவ்வளவு அழகான உங்களை கண்ட நொடியிலிருந்து எனக்குள் இத்தனை மாற்றமா? உங்களைப் பெற்றெடுத்த அந்த புண்ணியவான்களுக்கு நீங்கள் குழந்தைகளாக இருக்க வேண்டாமா? பத்திரமாக போய் வாருங்கள். இந்த திருடன் மீது இந்நேரம் உனக்கும் பாசம் வந்திருந்தால் எனக்காக ஒரு உபகாரம் செய்வாயா? "என கண்ணனின் அழகு முகத்தைப் பார்த்தபடி கைக் கூப்பி கெஞ்சினான் அந்த திருடன். 

அவன் கண்களிலிருந்து மாலை மாலையாக கண்ணீர் வழிந்தது. 

" என்ன செய்ய வேண்டுமென்று கூறு.. ! என்னால் முடிந்தால் கண்டிப்பாக அதைச் செய்கிறேன்" கண்ணன் அன்புடன் அவன் கைத் தொடவும், மறுபடி ஒரு மின்சாரம் பாய்ந்தது திருடனின் உடலில். 

ஒரு நொடி பேச மறந்து அந்த தொடுவுணர்வு தந்த இன்பத்தில் திளைத்த திருடன், "அப்பா,  தினமும் நான் இங்கு வந்து விடுகிறேன். நீயும் மறக்காமல், இவ்வழியே வந்து உன் அழகான முகதரிசனத்தை எனக்குத் தருவாயா.  ? அது ஒன்றே எனக்குப் போதும்.. .! உன்னிடம் நான் வேண்டுவதும்  அதுவேதான்..."வேறு எதுவும் எனக்கு வேண்டியதில்லை.. .. எதையும் உன்னிடமிருந்து பெற்றுக் கொள்ளும் ஆசைகளும் இல்லை. ...." மேற்க் கொண்டு பேசவும் முடியாமல், தன்னை கட்டுப்படுத்த தெரியாமல்,  திருடன் உணர்ச்சிவசப்பட்டு குமுறி  குமுறி அழலானான். 

கண்ணன் முகத்தில் மந்தகாசம் இன்னமும், கூடியது. அருகிலிருக்கும் சகோதரனைப் பார்த்து சிறு நகைப்பொன்றை வீசினான். 

" சரி. . உன் விருப்பம் அதுவானால் நானும் உடன்படுகிறேன். ஆனால் தினமும் அல்ல.. உனக்கு வேண்டும் போது, நீ நினைத்தவுடன் வருகிறேன். அதற்கு பிரதி உபகாரமாக நான் தரும் இந்த நகைகளை நீ வாங்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நீ சொல்வதை நான் கேட்பேன்." என கண்ணன் தன் பேச்சால் திருடனை மடக்கவும், திருடனும், அரைகுறை மனதோடு சம்மதித்தான். 

கண்ணனின், மற்றும் பலராமனின் நகைகள் கை மாறின. தன் மேல் பட்டு அங்க வஸ்திரத்தில், கண்ணன் தலையிலிருந்த கீரிடத்திலிருந்து, காலில் அணிந்திருந்த சலங்கை கொலுசு வரை அனைத்தையும் கழற்றி முடிந்து கொடுத்தான். ஒவ்வொன்றாக அவன் களையும் போது. திருடன் தவித்தான். "வேண்டாமப்பா... .அதை மட்டும்  கழற்றாதே.. இது போதும் எனக்கு... . நீ இவ்வளவு பிடிவாதமாக தருவதினால்தான் இதையெல்லாம் வாங்கியேக் கொள்கிறேன். உன் தரிசனம் வேண்டும் போது கிடைப்பதற்காகத்தான் இதற்கு ஒப்புக் கொண்டேன்." என அவன் உணர்ச்சி வசப்பட்டு கூறுவதை புன்னகையுடன் கேட்டபடி, "பரவாயில்லை.. பெற்றுக் கொள். எங்களிடம் இதைப் போன்று நகைகள் ஏராளமாக உள்ளது. தவிர நீ இன்று ஒன்றுமில்லாமல் வெறும் கையை வீசிக் கொண்டு உன் வீட்டிற்கு சென்றால், உன் உறவுகள் கோபித்து தூஷனை செய்யமாட்டாார்களா? அதனால் நான் விருப்பமாாகத் தருவதை பெற்றுக் கொள்் " என சமாதானபடுத்தியபடி அவன் தந்ததை பெற்றுக் கொண்ட திருடன் கண்ணனை  பிரிய மனமின்றி கண்ணனின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு அவர்களை திரும்பித் திரும்பி பார்த்தபடியே அந்த அதிகாலை பொழுதில் அந்த கானகத்தை விட்டு தன் உயிரைப்பிரிந்த ஒரு மனோ பாவத்துடன் வெறும் கூடான தன்னுடலை மட்டும் சுமந்தபடியான உணர்வுடன்  நடந்து சென்றான். 

காலையில் கண் விழித்த பாகவதருக்கு நேற்றிரவு நடந்ததெல்லாம் கனவு மாதிரி இருந்தது. இன்றும் அந்த திருடன் வந்து என்னவெல்லாம் சொல்வானோ? "நேற்று இரவெல்லாம் அந்த கானகத்தில் காத்திருக்க வைத்து விட்டாயே. .! பொய்யா சொல்லுகிறாய்? எங்கே அந்த குழந்தைகள்? அவர்களை நீ எங்கே ஒளித்து வைத்து விட்டாய்?" என்று கையிலிருக்கும் கத்தியை எடுத்து காட்டி எப்படியெல்லாம் சித்தரவதை செய்யப் போகிறானோ. ..! நினைப்பு ஒரு பக்கம் நடுக்கத்தை தந்தாலும், மாலை கோவில் உபன்யாசம் சொல்வதற்கு செல்கிற வரை வேறு எங்காவது சென்று  அவன் பார்வையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாமென தன்னை வெளியில் செல்ல தயார் படுத்திக் கொள்ள ஆரம்பித்தார். 

அப்போது வாயிற்கதவை தட்டும் சப்தம் கேட்கவே. "யார் இந்த நேரத்தில்" என்றவாறு கதவை திறந்தவருக்கு உயிரே போனது மாதிரி இருந்தது. யாரை நினைத்தபடி இவ்வளவு நேரம் விசனமடைந்தாரோ, யார் கண்ணில் படாமல் மாலை வரை எங்காவது சென்று விட விருப்பப்பட்டாரோ, அவனை வாசலில் வந்து நிற்கவும் பாகவதருக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. 

" நீயா"என்ற வார்த்தை அவர் வாயிலிருந்து தட்டுத்தடுமாறி வருவதற்குள், அவன் "ஐயா..! என்றபடி அவர் காலில் வேரறுந்த மரமாய் விழுந்தான். 

" எழுந்திரப்பா. .என்ன இது.. ? என்னவாயிற்று உனக்கு ..ஏன் இப்படியெல்லாம் செய்கிறாய்? "என்றபடி அவர் பதற திருடன் எழுந்து," ஐயா. . உங்களால்தான் நான் அவர்களை காண முடிந்தது. ஆகா.. .என்ன ஒரு அழகு.. .! என்ன ஒரு கனிவு. .! ஆகா..  நான் பெற்ற அந்த சுகானுபவத்தை  எப்படி விவரிப்பேன்..! இந்தப் பிறவியில் நான் செய்த பாவங்கள் எல்லாம் அகன்ற மாதிரி, வேறு ஒரு புதுப் பிறவி எடுத்த மாதிரி, அவர்களை தரிசித்த அந்த ஒரு தொடியில். .உணர்ந்தேன். இதோ என் மேனியெங்கும் இப்போதும் எப்படி சிலிர்க்கிறது பாருங்கள். .! இந்த அனுபவம் உங்களால்தான் கிடைத்தது. அதனால்தான் உடனே உங்களை காண நீங்கள் தங்குமிடம் விசாரித்துக் கொண்டு இங்கு வந்து விட்டேன். "அவனின்  பரிதவிப்பான வார்த்தைகளின் பொருள் பாகவதருக்கு இருந்த மனோ நிலையில், அவருக்கு சற்றும் விளங்கவேயில்லை. .

" இருப்பா. .. யாரைக்கண்டாய்? எங்கே கண்டாய்? உணர்ச்சிவசப்படாமல் மெள்ள விபரமாகச் சொல்லு... .! என அவர் கொஞ்சம் பதற்றத்துடனே அவனை ஆசுவாசபடுத்தியதும், "அதான் ஐயா... நீங்கள் நேற்று கோவிலில் எல்லோருக்கும் சொன்னீர்களே. ..  அந்த தங்கமயமான அற்புத குழந்தைகள் ஏராளமான நகைகளுடன் தெய்வீக ஒளியுடன் கானகத்தில் காலை நேரத்தில் தினமும் தவறாது வருவார்கள் எனக் கூறினீர்களே.. ! அவர்களைத்தான் சந்தித்து விட்டு வருகிறேன்.  . அதைப் பற்றித்தான் கூறியும் கொண்டுள்ளேன்." என அவன் விளக்கவும், பாகவதருக்கு ஒரு நொடியில் மூர்ச்சை வரும் போலிருந்தது. 

என்ன உளறுகிறான் இவன்..? கண்ணனை நேரில் கண்டானா? அதுவும் நான் கதையில் சொன்ன அங்க அடையாளங்களுடன். ..அப்படியே கண்ட மாதிரியல்லவா பிதற்றுகிறான். . ஒரு வேளை இரவெல்லாம் விழித்திருந்ததில், வந்த ஏமாற்றம் அவனை இப்படி பேசும் நிலைக்கு கொண்டு வந்து விட்டதோ? இந்த நிலையில் இவன் மேலும் எனக்கு ஏதாவது துன்பங்கள் தருவானோ?" அவருக்கு இன்னமும் பயம் அதிகரித்தது.

" அப்பா... நீ சாட்சாத் அந்த பகவான் கண்ணனையா கண்டாய்?  கொஞ்சம் தெளிந்து யோசித்துப் பேசப்பா.. அவர்கள் கடவுள்கள்.. அவர்களை நீ எப்படி நேரில் காண முடியும். .?  அவர் பயத்துடன் வார்த்தைகளை உகுக்கவும், "ஐயா.. .நீங்கள் நம்ப மாட்டீர்கள் என எனக்குத் தெரியும். அதனால்தான் அவன் விரும்பி எனக்குத் தந்த அவனுடைய அணிகலன்களை உங்களுக்கு காண்பிக்க, எனக்கு விருப்பமில்லாத போதும் அவனிடமிருந்து பெற்று வந்தேன். அதையெல்லாம் பார்த்தாவது என் கண்களை நம்புங்கள். ." என்றபடி தன் கையில் வைத்திருந்த மூட்டையை அவிழ்த்து, அதில் கண்ணன் தன் பட்டு பீதாம்பரத்தில் கட்டித்தந்திருந்த மூட்டையை அவிழ்த்து அவன் நகைகளை எடுத்து பரப்பி வைத்தான். 

பாகவதருக்கு இப்போது தன் கண்களை நம்ப முடியவில்லை. அவர் தினமும், அவர் வாழ்நாளில் இதுவரை ஆயிரம் முறைக்கும் மேல், எந்த நகைகளை பற்றி விஸ்தாரமாக விவரித்து  பாகவத பிரவசனம் செய்தாரோ அந்த நகைகள் கண்முன்னாடி ஜொலித்தன.  வைரங்கள், ரத்தினங்கள் பதித்த கீரீடம், ஒட்டியாணம் முதற்கொண்டு கண்ணனின் அங்கம் தழுவும் நகைகள், கூடவே கண்ணனின் புல்லாங்குழல், பாதச்சலங்கைகள்.... அவரால் நம்பவே முடியவில்லை. .ஒரு நிமிடத்திற்கு மேலாக அவர் இந்த உலகில் இல்லாமல்  இருந்த அனுபவத்தை உணர்ந்தார்.

 "ஐயா.  .. இப்போதாவது என்னை நம்புகிறீர்களா?" திருடனின் கேள்வியில் மறுபடி இந்த உலகத்துக்குள் வந்தவர், சற்று சுதாரித்து கொண்டு, "நான் இத்தனை வருடமாக அவனையே நினைத்து,, அவனுடனே வாழ்ந்து, அவன் நாமாவையே ஸ்மரித்து, அவனைப் பற்றியே எப்போதும் பேசி, அவன் புகழைப்பாடி வாழ்நாளை கழித்து வருகிறேன். எனக்கு ஒரு வேளையாவது  காட்சியளிக்காதவன் ஒரு இரவில், உனக்கு எப்படி காட்சி தந்து தன் நகைகளையும் கழற்றித் தந்தான்?  என்னால் இன்னமும் உன்னை நம்ப இயலவில்லை. நீ எங்கிருந்து இந்த நகைகளை, நான் அவனைப்பற்றி சொன்ன கதைகளுக்கேற்ப கொண்டு வந்தாய் என எனக்கு மேலும்  சந்தேகம் வருகிறது. ..!"என அவர் முடிக்கவும் திருடனுக்கு சற்று கோபம் வந்தது. 

" ஐயா...! நான் நேற்று வரை பயங்கர திருடன்தான். எந்த ஒரு பொய்ச் சொல்ல அஞ்சியதில்லை. சமயம் வரும் போது பிறரை தாக்கி, காயப்படுத்த சங்கட பட்டதேயில்லை.... அப்போது அவர்கள் துன்பத்தைக் கண்டு பரிதவிக்கவும்,  ஈவு இரக்கம் காட்டி, அவர்களை  விட்டு விடவும் செய்ததில்லை. ஏனென்றால் என் தொழில் திருட்டுத்தான்...அதில் இதெல்லாம் பார்த்தால் எனக்கு லாபமில்லை. எந்த வித பயனுமில்லை..! அதனால்தான் நீங்கள் சொன்னவுடன் அந்த குழந்தைகளைப் பிடித்து, அவர்கள் நகைகளை அபகரித்து பெரும் லாபமடையத்தான் ஆவலுடன் உங்களிடம் வழி விசாரித்துக் சென்றேன். இன்று அதிகாலை வரை எனக்கு அந்த எண்ணம் ஒன்றுதான். ...! ஆனால் அந்த மாயக்குழந்தைகளை பார்த்தவுடன் எல்லாமே தலைகீழாக மாறி விட்டது. என் மனதையே, அதில் இருந்த திருட்டுத்தனத்தையே  அவர்கள் கொள்ளையடித்து விட்டார்கள். இப்போது இன்னதென்று விவரிக்க இயலாத ஒரு அமைதி மட்டுந்தான் என் மனதில் நிறைந்திருக்கிறது. அந்த மனதை உங்களிடம் காட்டிச் செல்லவே நான் இங்கு வந்தேன். 

நாளை மறுபடி அவர்களை சந்தித்து இந்த நகைகளையெல்லாம் அவர்களிடமே தந்து விட்டு, ," நான் எப்போதும் அவர்களுடன் இருக்கும்படி ஒரு உபாயம் சொல்லுங்கள் என வேண்டி கேட்டுக் கொள்ளப் போகிறேன். அதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லையென்றால் அங்கேயே அவர்கள் கண்முன்னால் என் உயிரையும் மாய்த்துக் கொள்ளுவேன். அதைக்கண்டு அவர்கள் மனம் மாறினாலும் சரி..! இலலை. .இதோடு என் இந்தப் பிறவி முடிந்து போனாலும் சரி. .! அவ்வளவுதான்....! நான் போய் வருகிறேன் ஐயா... எனக்குள் இந்த அனுபவம் வந்ததற்கு நீங்களும் ஒரு காரணம்...உங்களுக்கு என் நன்றி.. " என்றபடி அவன் புறப்படலானான்.  

பாகவதர் தான் பிரசங்கம் கேட்டதைக் போன்ற உணர்வையடைந்தார்." அப்பா. ..என்னை மன்னித்து விடு. உன்னை சந்தேகப்பட்டது தப்புதான்.. என்னையும் உன்னுடன் அழைத்துச்செல். நானும் இந்தப்பிறவியில் நான் அன்றாடம் வழிபடும் கண்ணனை தரிசித்த பேறையடைகிறேன். மறுக்காமல் நானும் உன்னுடன் வருவதற்கு சம்மதித்து அழைத்துச் செல்கிறாயா...." என்று அன்புடன் கெஞ்சிக் சொல்லவும் அன்று இரவு அவரையும் அழைத்துப் போவதாக திருடன் வாக்குரைத்தான். 

மறுநாள் வெள்ளி முளைக்கும் நேரம். கானகத்தில் அதே இடத்தில் திருடனுடன் பாகவதரும் காத்திருக்க, திருடனின் மனமெல்லாம் " குழந்தைகளா. . நேற்று சொன்னது போல் இன்று நீங்கள் எனக்கு தரிசனம் தர விரைவில் வந்து விடுங்கள். உங்களை பார்க்காத ஒவ்வொரு நொடியும்  நான் அனலில் இட்ட புழுவாக துடிக்கிறேன். இந்த பாகவதர் வேறு இன்று காலை நான் எத்தனை முறைச் சொல்லியும், என்னை நம்பவில்லை.  இப்போதும் என்னை சோதனை செய்வதற்காகத்தான் என்னுடன் வந்திருக்கிறாரா என்றும்  தெரியவில்லை... ஆனாலும், எனக்கு உங்களைக் காணும் ஆவல் அதிகரிக்கிறது. இதோ. .! உங்கள் நகைகளை உங்களிடம் தரவே வந்திருக்கிறேன். எனக்கு இந்த நகைகள் வேண்டாம். என் குடும்பம் வேண்டாம். உங்களின் அருகாமை மட்டும் எப்போதும் வேண்டும். அதுவே நான் உங்களிடம் வேண்டுவது...  அதை மட்டும் இன்று வந்து எனக்கு எப்படியாவது தந்து விடுங்கள்.. . " என்று கண்ணனை நினைத்தவாறு இருந்தது. 

பாகவதரின் மனமோ," இவன் சொல்வதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் புறக்கணிக்கவும் இயலவில்லை. நேற்று மாதிரியே கண்ணன் இன்றும் நான் நினைத்தவுடன் இங்கு வருவான் எனறு இவன் கூறுகிறான். இவனிடம் உள்ள நகைகளெல்லாம் கண்ணனின் நகைகளாக நாம் வர்ணனையில் படித்தது போல் இருக்கிறது. ஆனால், கடவுள் அவதாரமாகிய கண்ணன், நான் நித்தமும் துதித்து வணங்கி வரும் எம்பெருமான், இப்போது இந்த திருடனுக்கு ஒரே இரவில் காட்சி தந்திருக்கிறான் என்பதை நம்பவும் கஸ்டமாக இருக்கிறது. ம்.  . ம்.  பார்க்கலாம். இன்னமும் கொஞ்ச நேரத்தில் இவன் சாயம் வெளுத்து விடுமே.. .! " என்று மனதுக்குள்  புலம்பியபடி இருந்தது. 

பறவைகளின் சலசலப்பில் கதிரவன் கண் விழித்து விட்டான் கிழக்கு திசை இருளை தன்னிடமிருந்து அன்றைய இரவு வரை பிரித்து வைக்க ஆசைப்படுவதாய், இருட்டுடன் பேசி வாக்கு வாதம் செய்வதைக் கண்டதும், சமாதானபடுத்த பகலவன் தான் வருவதாக பறவைகள் மூலம் தூது அனுப்பினான். 

திருடனின் கண்கள் கண்ணனை காண ஆவலாய் பரபரத்துக் கொண்டிருந்த வேளையில், கிழக்கிலிருந்து ஜோதி ரூபத்திற்கிடையே அழகே ஒர் வடிவம் எடுத்தது போல், அண்ணனும் தம்பியுமாக பேசிக் கொண்டே  கைக்கோர்த்தபடி வந்து  கொண்டிருப்பதை திருடன் கண்டான்..திருடனுக்கு மறுபடி நேற்று போல், உடம்பெல்லாம் சிலிர்த்தது. கண்ணன் தன் புல்லாங்குழலில் இனிய நாதத்தைப்  பரப்ப அந்த ஓசைகேட்ட புள்ளினங்கள், ஆதவன் தமக்கிட்ட  தூதை மறந்து அவன் கானத்திற்கேற்ப தம் இறகுகளை அசைத்தபடி வான வீதியில், வலம் வந்தன. 

கண்ணன் இசைத்த இசையில் கள்ளுண்டவனை போல் திருடனும் மெய் மறந்தான். சட்டென அருகிலிருக்கும் பாகவதரின் நினைவு வர, "ஐயா. .! .இதோ நான் வேண்டியபடி குழந்தைகள் வந்து விட்டனர். எத்தனை அழகு..! இவர்களை பார்ப்பதை விடவா இந்த உலகில் வேறு இன்பம்.. ? என்னை நம்ப மாட்டேன் என்றீர்களே...! இதோ நீங்களும் அவர்கள் வரும் அழகை ஆசைதீர பார்த்து மகிழுங்கள். அவன் இசையென்ற கானம் பாடி உலகை மயக்கியவாறு வரும அழகை கண் குளிர கண்டு களியுங்கள். அருகில் வந்ததும் குழந்தைகளின் அழகையும், அவர்களின் அமிர்தம் போன்ற பேச்சையும் கண்டு, கேட்டு பருகுங்கள்... " திருடன் உற்சாக மிகுதியில் துள்ளிக் குதித்தவாறு கூறினான். 

பாகவதருக்கு ஒன்றும் புரியவில்லை. எங்கு கண்ணன் வருகிறான்? எப்போதும் போல் பொழுது புலர்வதற்கு கிழக்கு திசை ஆயததமாகிக் கொண்டிருப்பதை தவிர்த்து அவர் கண்களுக்கு அவன் காட்டிய அத்திசையில் ஒன்றும் புலப்படவில்லை. பறவையினங்கள் அன்றாடம்  வழக்கப்படி, தம்  இசைத் திறமையை உலகிற்கு பறைச்சாற்றியபடி சுற்றி வருவதை தவிர்த்து வேறு எந்த கானமும்  அவர் காதை தழுவவில்லை. 

அதற்குள் கண்ணன் அவர்கள் அருகில் வந்து விட்டான்." என்னப்பா.. ..! இன்று மறுபடியும் உடனே வந்து எனக்காக காத்திருக்கிறாய் ? நேற்று தந்த நகைகள் போதாதா? இந்தா. . .! இன்று நீ அழைத்தவுடன், உனக்காக இன்னமும் நிறைய நகைகளோடு வந்திருக்கிறோம். வேண்டியதைப் பெற்றுக்கொள்..  ."  கண்ணனின் குறும்புடன் பேசியதைக்  கேட்டதும் திருடன் மனம் பதறினான். 

"குழந்தைகளே... ! உங்களை காணவே இன்று  அழைத்தேன். நீங்கள் இல்லாமல் என்னால் இனி வாழ்வே முடியாது. இந்த நகைகள் யாருக்கு வேண்டும்.? நேற்று உங்களை பார்த்த நொடியிலேயே அந்த ஆசைகள் போய் விட்டதே. .!  நேற்றே உன் விருப்பத்தினால்தான் நகைகளை எடுத்துச் சென்றேன். அதுவும் உன்னை அடையாளம் காண்பித்த இந்த பாகவதருக்கு அதை காண்பித்து அவருக்கு நன்றி கூறத்தான்.எடுத்துச் சென்றேன்.  இதோ. . ..! அந்த நகைகளையும் திருப்பி கொண்டு வந்திருக்கிறேன். வாங்கிக் கொள். எனக்கு இந்த பிறவி முழுக்க உன்னழகை பார்த்துக் கொண்டிருக்கும் பாக்கியத்தை மட்டும் தந்து விடு. . அது போதும்..!" கண்ணின் சின்னக்கைப்பற்றி அவன் உணர்ச்சி மிகுதியில் கண்ணீர் விட்டு அழுதான்..

யாருடனோ பேசுவது போல், தனக்குத் தானே அவன் பேசிக் கொள்வதையும், அழுவதையும் கண்ட பாகவதருக்கு ஒன்றும் புரியவில்லை. இவன் மனம் பேதலித்து விட்டதா? என தாம் சந்தேகப்பட்டது சரியோவென தோன்றியது.

உடனே பாகவதர் திருடனை நோக்கி, "என்னப்பா யாருடன் பேசுகிறாய்? அப்போது குழந்தைகளின் அழகைப் பருகச் சொன்னாய்.  .! இப்போது பித்துப் பிடித்தவன் போல் தானாகவே பேசிக் கொண்டிருக்கிறாயே.. .! இங்கு உன்னையும், என்னையும் தவிர வேறு யாரும் இல்லையே. ..! என்று வினவவும், கண்ணனும்  பலராமனும் கலகலவென சிரித்தனர். 

"ஐயா. .. இதோ கண்ணெதிரே நிற்கும் இந்த அழகு தெய்வங்களை உங்களால் காண முடியவில்லையோ ?. என் கண்ணன் என்று வார்த்தைக்கு வார்த்தை சொன்னீர்களே ... உங்கள் கண்ணன் உங்களெதிரே நின்று பேசுவதை உங்களால் பார்க்க முடியவில்லையா... ? ஆச்சரியமாக உள்ளதே...! என்ற திருடன் கண்ணனைப் பார்த்து, "குழந்தைகளே....! எதற்காக உங்களுக்கு இந்த நாடகம்.? என் பார்வைக்கு  தெரியும் நீங்கள் தினமும் உங்களைப் பாடி, பூஜித்து வரும் இவர் பார்வைக்கு தென்படாமல், இருப்பது ஏன்? நேற்று உங்களை கண்டதை நம்பாத இவரை இன்று உங்களை காணச் செய்வதாக கூறி அழைத்து வந்திருக்கிறேன். அவரை பாவம் ஏமாற்றலாமா.?  அவரால்தானே எனக்கு இந்த மாற்றம் கிடைத்தது. நீ அவர் கண்களுக்கும்  கண்டிப்பாக தெரிய வேண்டும்.. "  திருடனின் கனிவான பேச்சு கண்ணனை புன்னகையுடன் பேச வைத்தது. 

அவர் தினமும் என்னை நினைப்பவர்தான். ஆனால் உன் ஒருநாள்  நம்பிக்கைதான் அதை விட சிறந்ததாக என்னை இங்கு அழைத்து வந்து உன்னால் என்னைக் காண வைத்தது. என்னைப்பற்றி சிறிதும் அறியாத  நீ  நான் இருப்பதை நம்பி என்னையே அன்று முழுவதும் நினைத்து, நான் இங்கு வருவேன் என்ற நம்பிக்கையோடு இருந்தாய்....! அந்த நம்பிக்கைதான் உனது ஆன்ம பலம்... அவரை அதே நம்பும் உணர்வோடு உன் கரங்களை பிடித்துக் கொள்ளச் சொல். ...!நீயும் என் கரத்தைப் பிடித்துக் கொள். அப்போது அவர் கண்களுக்கும் நான் தெரிவேன்.." என்றதும்," ஐயா.. இதோ நம் அருகில் நிற்கும் குழந்தைகளை காண முடியவில்லையா?  என் கையைப்பிடித்து கொள்ளுங்கள்..."என்று சொன்னவுடன் பாகவதர் அவன் கையைப் பிடிக்க, திருடன் மெய் சிலிர்க்க கண்ணனைத் தொட, பாகவதருக்கு கண்ணனின் திவ்ய ரூபம்  புலப்பட்டது. அவனின் அழகிய வதனத்தில் மதிமயங்கிய அவரும் திக்குமுக்காடினார். கூடவே" கண்ணா, இத்தனை நாள் நான் உன்னை வணங்கி வந்ததின் முழுப்பலன் கிடைத்து விட்டது. ஆனால் ஒரே ஒரு வருத்தம். உன் மகிமையை உணராத இந்த திருடனுக்கு ஒரே நாளில் தரிசனம் தந்த நீ எனக்கு மட்டும்  இத்தனை சோதனைக்களுக்குப் பிறகு  அதுவும் இவன் கைகளைப் பிடித்ததால்தான் காட்சி என வைத்திருக்கிறாய்...! அது மட்டும் ஏன் என  விளக்குவாயா ? என பக்தியுடன் கண்ணீர் மல்க கேட்டார். 

"பாகவதரே.  உம்மையும் நானறிவேன். உமது பக்தியின் பெருக்கையும் நான் உணர்வேன். நீங்கள் நாள்தோறும் என்னைத் துதித்து, பூஜைகள் செய்து. என்னைக்குறித்து மக்களுக்கு உபன்யாசங்கள் செய்து வழிபட்டு வருவதையும் அறிவேன். ஆனால் என்றேனும், ஒரு நாள் நான் உம்மெதிரே வருவேன் என என் மீது நம்பிக்கை வைத்தீரா?நீங்கள் தந்த வர்ணிப்பில் அந்த நம்பிக்கை அவனுக்கு வந்தது. அந்த நம்பிக்கையின் சக்திக்கு நான் கட்டுப்பட்டேன். அவ்வளவுதான். .! இதுதான் அவனின் ஆன்ம பூஜை. .என் மீது அன்பு செலுத்திய உங்கள் இருவருக்கும் நிச்சயமாக நற்கதி இப்போதே நான் தந்தேன். அவரவர்கள் வினைப்பயன் முடிந்ததும் என்னை வந்தடையுங்கள்... அதுவரை இந்த மானிடப்பிறவியின் கடமைகளை முடித்து, பிறவி முடியும் வரை என்னை கண நேரமும் மறவாதபடி நினைத்துக் கொண்டேயிருக்கும் வரத்தை அருள்கிறேன் .. " என்றபடி புன்னகையுடன் கூறிய மாயக் கண்ணன்  நொடியில் மறைந்தான். கண்ணனின் விளக்கத்தில், பக்தியின் இரு வேறு பிரிவுகள் பாகவதருக்கும், திருடனுக்கும் விளங்கின. அவனுடன் கூடிக் களிக்கும் நாளை நினைத்தபடி, வரும் நாட்களை அவனை நினைத்து அவனுடனான பக்தி மார்க்கத்தில் பிணைத்திருந்து, அவன் அழைக்கும் வரை அவன் சொல்படி அவரவர் கடமையை ஆற்றி இருக்க வேண்டி, பக்தி உணர்வுகளில் முழ்கியபடி அக்கானகத்தை விட்டு தத்தம் இல்லம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர். 

இக்கதையின் மூலம் ஆன்ம பக்தியை விளக்கிய ஸ்ரீ கிருஷ்ணரின் சேவடிகளை நினைத்தபடி நாமும் அவன் ஒருநாள் வந்து நம்மை கடைத்தேற்றி அழைத்துச் செல்வான் என நம்பிக்கை கொண்டு, அவனிட்ட கட்டளைப்படி வாழவும்  அவனருள் பூரணமாக கிடைக்க வேண்டுமென அவன் பாதங்களை பற்றி பிரார்த்தித்துக் கொள்கிறேன். . . ...

சற்றே நெடிய கதையாயினும், இக்கதையை அன்புடன் படிக்கும் உங்கள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏. 

Friday, August 28, 2020

காக்கும் கடவுள்..

 ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா.

இது எங்கள் அப்பார்ட்மெண்ட்டில்  வசிக்கும் அனைவரிடமும்  பணம் வசூலித்து  சென்ற வருடம் கொண்டாடிய பிள்ளையார் சதுர்த்திவிழா.  பிள்ளையார் சதுர்த்தி முடிந்த ஒரு வாரத்தில்,  ஒரு ஞாயறன்று, (அன்றுதான் அனைவரது வீட்டிலும் எல்லோரும் அலுவலகம், பள்ளிகள் இல்லாமல் வீட்டிலிருப்பார்கள்.) காலை பூஜையுடன் ஆரம்பித்து, அன்று மாலை நடைபெற்ற சிலை கரைப்பு வரை அனைவருக்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடுநடுவில் நடத்தி, (பெரியவர்களுக்கு என்று  சில நிகழ்ச்சிகள். . சின்னவர்களுக்கு என்று தனியாக ) மிக  சின்ன குழந்தைகளுக்கு பாட்டு, டான்ஸ்  ஸ்லோகம் சொல்வது, என பங்கேற்க வைத்து  இறுதியில் ஓவியம், கலர் வரைபவர்களுக்கென்று ஊக்கமளித்து, இறுதியில்  அனைவருக்கும் பரிசு தந்து ஒரே உற்சாகமாக அன்றைய நாளை கொண்டாடினோம்.  


இதில் எங்கள் வீட்டு சின்னக் குழந்தைகள் உட்பட பல குழந்தைகள் தங்கள் ஓவிய திறமையை காட்டிய  சில படங்கள்.. உங்கள் பார்வைக்காக..! 








இத்தனையிருந்தும் அன்று மதிய உணவு இல்லாமலா?  மதிய உணவாக இதெல்லாம்.. . இன்னும் சில அயிட்டங்கள் தட்டில் இடமில்லாததால்,( வயிற்றிலும்)  வாங்கிக் கொள்ளவில்லை. . 



அனைவரும்  சாப்பிட்டான பின்  இந்த ஓவிய போட்டிகள்.. . பெரிய குழந்தைகள் பருப்பு வகைகளை வைத்து அலங்கரித்து பிள்ளையாரை  அழகாக வரைந்தனர்


இது சென்ற தடவையே பகிர வேண்டுமென படங்கள் எடுத்து வைத்திருந்தேன். வழக்கப்படி எழுத இயலாமல், இந்த வருடம் ஸ்ரீ விநாயகர் ஆக்ஞையால், எழுத முடிகிறது. எல்லாம் அவன் செயல்.. அவனன்றி ஒர் அணுவும் அசையாது அல்லவா. ..!

இந்த தடவை இந்த மாதிரி கொண்டாட்டம் இந்த தொற்றினால் இல்லாமல் போய் விட்டது.  அவரவர்கள் வீட்டில் சத்தமின்றி பிள்ளையார் போய் அமர்ந்து தனக்கு தேவையான பூஜைகளைப் பெற்றுக் கொண்டு  அமைதியாக சந்தோஷப்பட்டுக் கொண்டார். 

எங்கள் வீட்டிலும் தனியாக பிள்ளையார் சிலை வாங்கவில்லை. வீட்டில், பூஜையறையில், என் மாமியார் காலத்திலிருந்து இருந்து வரும் கற்சிலை விநாயகர்தான்  இந்த தடவை நாங்கள் செய்த பூஜைகளை மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார். 

இவர்தான் அது... 


இந்த தடவை இவரை சிறப்பான பூஜைக்காக வரவேற்க காலை வாசலில் போட்ட இளசும்  பழசுமான கோலம். 


நாங்கள் செய்த பூஜைகளை ஏற்றபடி இன்முகத்துடன் அமர்ந்திருக்கும் அவர். 


அவருக்காக தயாராகி கொண்டிருந்த  அவருக்கு மிகவும் பிடித்தமான, நமக்கும் மிகவும் பிடித்தமான பிரசாதம். 

 
பஞ்ச பூதங்களும் இணைந்து பூரணத்துவம் பெற்று அழகான அகிலமாய்  உருவானதைப்போல வெல்லம், தேங்காய், இருவகை பருப்புகள். ஏலக்காய் ஆகிய ஐந்தினால் இணைந்து திரண்ட வெல்லப்பூரணம்... .  


அண்டமெல்லாவற்றையும் தன் வயிறேனும் பேழைக்குள் அடக்கியபடி, அவைகளுக்கு தீங்கெதுவும்  வராமல் காத்து ரட்சிக்கும் உண்மையை வெளிப்படுத்தும் உருவகத்துடன், விநாயகரின் அரும்பெரும் கருணையை காட்டும் விதமாய் பூரணத்தை தன்னுள்ளே அடக்கியபடி காட்சியளிக்கும் கொழுக்கட்டைகள். 


வீட்டில் சின்ன குழந்தைகள் இருப்பதால் அவர்கள் பசி பொறுக்க மாட்டார்கள் என்பதால், என்னால் இயன்ற வரை கூடவே கொஞ்சம் நைவேத்தியமாக, புளியிட்ட அவல். உளுந்து வடை, கொண்டைக்கடலை சுண்டல், மகாநேவேத்தியம், பருப்பு என செய்தேன். கூடவே சாம்பார் வைக்க நினைத்து, மணியாகி விடவே, அதை மதியத்திற்கு ஒத்தி வைத்து விட்டு அவசரத்திற்கு குலதெய்வ சிற்றுண்டியும் நைவேத்தியத்தில் அன்று இடம் பிடித்தது. பிள்ளையார். "இன்று பார்த்து ரவை உப்புமாவா என வியப்படையாமல்  ஒரு வித்தியாசமாக இருக்கிறதே. .! " என மலர்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். 


ன்னும் அவருக்கு புளியோதரை, தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், எள்ளோதரை, சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், ஆமைவடை என்னும் பருப்பு வடை, நான் செய்துள்ள தேங்காய் பூரண கொழுக்கட்டையுடன், காரக் கொழுக்கட்டை எள்ளு இனிப்பு கொழுக்கட்டை, லட்டு. பாயாசம், போன்ற இனிப்புகள் எல்லாம் செய்து அவரை உண்ண வைக்க எனக்கு ஆசைதான். "முன்பு இந்த மாதிரி நிறைய வகைகள் செய்து கொண்டிருந்தேன். இப்போது இயலவில்லை.... எனவே இதையெல்லாம் மானசீகமாக உனக்கு நைவேத்தியத்தில் இணைத்து அர்ப்பணிக்கிறேன்." என நான் மானசீகமாக அவரிடம் பேசியதை அவரும் ஆமோதித்த மாதிரி தலையாட்டி நான் செய்து வைத்த சிற்றுண்டிகளை சுவைக்க ஆரம்பித்தார். 

இவ்விதமாக இந்த தடவை ஸ்ரீ விநாயகப் பெருமானின் அருளினால் விநாயக சதுர்த்தி வைபவம் நல்லபடியாக நடைப்பெற்றது. ஒவ்வொன்றிக்கும் ஒரு தூண்டுகோலை தந்து நம்மை ஊக்குவிப்பவன் இறைவன். விநாயக சதுர்த்திக்கு முன்பே சென்ற வருட பழையதை எழுதி பின் இந்த வருடம் வீட்டில் கொண்டாடிய  விநாயக சதுர்த்தி பதிவையும் இணைக்க வேண்டுமென ஆரம்பித்து எழுத நேரமில்லாமல் பாதியில் எழுதி  வைத்திருந்த என்னை சகோதரர் நெல்லைத் தமிழன் வடிவில் விநாயகர் வந்து இன்று என்னை முழுவதுமாக  எழுத வைத்தார். "பிள்ளையார் பதிவை எழுதவில்லையா?" என்று கேட்டு நான்  எழுதி முடிக்க ஊக்கப்படுத்திய  விநாயகருக்கும், சகோதரர் நெல்லைத் தமிழருக்கும் என் மனம் நிறைந்த  நன்றிகள்.🙏 . 🙏. 

சற்றே பெரிய பதிவாகி போன இதைப்படித்து கருத்திடும் அன்பான சகோதர சகோதரிகளுக்கும், என் பணிவான நன்றிகள். 🙏. 🙏. 

ஸ்ரீ விநாயகப்பெருமானின் அருள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைக்க அவர் பாதம் பற்றி பிரார்த்தித்துக் கொள்கிறேன்.. அண்ணனும்,தம்பியுமாக அகில உலகங்களையும், உலகில் வாழ் அத்தனை உயிர்களையும் காத்து ரட்சிக்கட்டும்.