Sunday, September 29, 2019

கோஸ் பிட்லே...

இந்த சமையல் பதிவு  ஏற்கனவே "எங்கள் பிளாக்" கில் இடம் பெற்று எனக்கு பெருமையையும், மனத் திருப்தியையும் அதிகப்படியாக பெற்றுத் தந்தது. அப்போது அதற்கு (பதிவுக்கு) இடம் தந்த எங்கள் ப்ளாக் ஆசிரியர்  சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கு மிக்க நன்றி. 

தற்சமயம்  இன்னமும் எதையும் சரிவர எழுதி முடிக்கப் படாமலிருந்த எனது  டிராப்ட் பகுதியைை ஆராய்ந்து கொண்டிருந்த போது இந்த  "கோஸ்" பிட்லே," உனது வலைத்தளத்திலும் ஒரு ஓரத்தில் நானும் இடம் பெறட்டுமா பாஸ் ?" என்று ஆசையுடன் கேட்கவும், மீண்டும் படித்து "பேஷ்.. பேஷ்" என அனைவரும்  "கோஸை" பாராட்டுவீர்கள் என்ற அசைக்க முடியாத  நம்பிக்கையில், "சரி"! என சம்மதித்து நானும் இடம் தந்து விட்டேன்.  "மீண்டுமா? என "கோஸை" ஏதும் சொல்லி  "ஏசாமல்" படிப்பதற்கும், பதிவதற்கும் (தங்களின் அன்பான கருத்துக்களை) என் மனமார்ந்த நன்றிகள். 

கோஸ் பிட்லே.... 

நறுக்கிய கோஸ்.... 


நல்ல கோஸ் வாங்கி பொடிதாக நறுக்கி வைத்துக் கொ‌ள்ளு‌ங்க‌ள். ( நான் ஏன் நல்ல என்ற வார்த்தையை உபயோகித்தேன் என்றால் நான் வீட்டிலிருந்த வாங்கி நான்கு நாட்கள் ஆகி விட்ட நிலையில் இருந்ததை அவசரத்திற்கு பயன்படுத்தினேன். நீங்கள் ப்ரெஸ்ஸாக வாங்கி கொள்ளவும்.)  

குளித்து முடித்து சமர்த்தாக
அமர்ந்திருக்கும்  கோஸ்....

  

நறுக்கியதை நன்றாக அலம்பி விட்டு ஒரு வாணலியில் கொஞ்சம் சமையல் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து அதில் கடுகு உளுத்தம் பருப்பு போட்டு, தாளித்த பின் அலம்பிய கோஸைப் போட்டு கொஞ்சம் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளவும். 

தண்ணீரிலிருந்து நீச்சலடித்து தப்பிக்கத்தெரியாமல் மூழ்கியிருக்கும் பருப்புகள்....

 

ஒரு கப் துவரம்பருப்பு, பாதி கய் கடலைப் பருப்பு எடுத்துக் கொண்டு அலம்பி விட்டு கோஸ் நறுக்கும் நேரத்தில் ஊற வைத்துக் கொண்டால், செளகரியமாக இருக்கும். அவ்வாறு  ஊறிய பருப்பை குக்கரில் சாதத்துடன் வைத்து  வேக வைத்துக் கொண்டு விடவும் .

கலரில் நான் எப்படி? சும்மா தகதகவென மின்னுகிறேனா? தானே பெருமிதபட்டுக் கொள்ளும் புளிக்கரைசல்....

                                           
ஒரு பெரிய எலுமிச்சை அளவு புளியை  
எடுத்து ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.. கோஸ் நன்கு வெந்ததும் அதனுடன் இந்த கரைசலை சேர்க்க வேண்டும். 

நான் மட்டும் இங்கே, என்னுடன் சேரப் போகும் கூட்டணிகள் எங்கே? என அமரத்தலாய் கேட்கும் கோஸ்....


புளி கரைசலை வெந்த கோஸுடன் சேர்த்து கொஞ்சம் உப்பு போட்டு, ( முதலில கோஸ் வேகும் போது அதற்கு தகுந்த உப்பு மட்டுந்தான் போட்டோம்)  கொஞ்ச நேரம் கொதிக்க விடவும்.

நாங்கள் மூவரும் சேர்ந்திருந்தாலும், தனிகட்சியா? "என்னவோ ஒன்னும் புரியலை போ" அலுத்துக் கொள்ளும் வெந்தயம் தக்காளி கறிவேப்பிலை...



ஒரு தக்காளியை சுத்தப்படுத்தி அதன் காம்பு பகுதியை நீக்கி விட்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். (இந்த காம்பு பகுதியில் ஏராளமான பாக்டீரியா இருக்கிறது எனவே அதை நீக்கி விடுவது நல்லது. ) கறிவேப்பிலை மூன்று ஆர்க்குகள் அலம்பி வைத்துக் கொண்டு ஒரு ஸ்பூன் வெந்தயத்தை வெறும் வாணலியில் சற்று சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். இந்த மூன்றையும் ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

தனியாக அரைபட்டாலும்  நாங்கதான் முதலாக்கும்.... 

   

புளிக் கரைசலுடன்  சேர்ந்து கொதித்துக் கொண்டிருக்கும் கோஸ் கலவையில் இந்த அரைத்த விழுதை சேர்க்கவும். 

வறுக்க ஆஜராகியும் வட்டமேஜை மாநாட்டில் கலந்து பேசிக் கொண்டிருக்கும் பொருட்கள்....

         

துவரம் பருப்பு, கடலைப்பருப்பு,  உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு  என தலா ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். கொத்தமல்லிவிரை நாலு ஸ்பூன், வத்தல் பத்து ( இது காரத்தைப் பொறுத்து அவரவர் விருப்பம்) என்று எடுத்துக் கொண்டு ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் இந்த பொருட்களை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அட, தட்டில் இடமில்லையென்றால், என்னை மறந்து விடுவீர்களா என்ன? நான் இல்லாமலா? என கோபமாய் எட்டிப்
பார்க்கும் தேங்காய்....



அந்த தேங்காய் மூடியில் பாதி துருவி,  அரைக்க வறுத்த மசாலா பொருட்களை ஆறுவதற்காக ஒரு தட்டில் கொட்டிய பின்  அதே வாணலியில் அதையும் லேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.

நாங்கள் வாசமாக இருந்தாலும் அடுத்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். கூடிப் பேசி விவாதம் எழுப்பலாமென்றால், வட்ட மேஜையை காணவில்லையே? பெரும் சோகத்தில் விழுது....


புளி கலவையுடன் சேர்ந்து  கொதித்து  வெந்தயம் வாசம்  வந்ததும் வறுத்து வைத்திருக்கும் ஆறிய மசாலா  பொருட்களையும்,  தேங்காயையும் மிக்ஸியில் போட்டு ஒரளவு நைசாக அரைத்துக் கொண்டு  அந்த, விழுதையும் கலந்து கொதிக்க விடவும். 

கடைசியில் நானும் இதில் சேர்ந்தாச்சு. இப்ப திருப்தியா என்ற கடைந்த பருப்பு.....



பத்து நிமிடங்கள் கொதி வந்ததும்  வெந்த பருப்புகளையும் நன்கு மசித்து  அதனுடன்கலந்து கொதித்து சேர்ந்து வரும் போது 
  அடுப்பை அணைத்து விடவும்.  

ஆயிரம் இன்னல் பட்டு பெருங்காயத்துடன் உங்களுக்காக நான் தயார்...



கடைசியில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் கடுகு உ.. ப தாளித்துக் கொண்டு அதனுடன் பெருங்காயத்தை போட்டு பொரித்து சேர்த்தால் பிட்லே வாசனையாக தயாராகி இருக்கும். 


நாங்கதான் ஒன்னு சேர்ந்துட்டோமே இப்ப நீங்க சாப்பிட தயாரா? ? கோஸ் பிட்லே....

         
சாதத்தில் நெய் விட்டு இந்த கோஸ் பிட்லே கலந்து சாப்பிட  சுவையாக இருக்கும்.    தோசை சப்பாத்திக்கும்  தொட்டுக் கொள்ளலாம். 


Monday, September 23, 2019

பாட்டி சொல்லை தட்டாதே..

அந்த காலத்தில் கூட்டுக் குடும்பம்  என்பது ஒவ்வொரு வீட்டிலும் தப்பாமல்  இருந்தது. குடும்பமென்றால்  மூத்தவர்கள், அனுபவ அறிவு நிரம்பியவர்கள் என்று ஒரு நான்கு பேராவது அதில் இருந்தனர். அவர்கள் குடும்பத்தின் பொறுப்புகளைை சிரமேற் கொண்டு வீட்டிலிருக்கும் அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக இருந்து, வீட்டின்  அனைத்து   சுப நிகழ்ச்சிகளையும், பிறர் மெச்சும்படிக்கு சாஸ்திர சம்பிரதாயங்களின்படி நடத்தி குடும்பத்தினர்களை பெருமையுடன் கூடிய மகிழ்வு கொள்ளும்படி செய்வதோடு மட்டுமின்றி, 🙏

 ஒரு அவசர ஆத்திரத்திற்கு அவர்கள்தான் அந்த குடும்பத்து உறுப்பினர்களுக்கு நாடி பார்த்து சுகப்படுத்தும் வைத்தியராக, 🙏

விஷக்கடிகளுக்கு மந்திரிந்து வீபூதியிட்டு, விஷக் கடிகளை இறக்கி  நல்லபடியாக அதை குணப்படுத்துபவர்களாக, 🙏

ஏதேனும் சொத்து சம்பந்தபட்டதோ, இல்லை குடும்பத்தில் ஏற்படும் பிணக்குகளோ அதை சாமர்த்தியமாக பேசி தீர்த்து வைக்கும் சட்ட ஆலோசகராக, 🙏

ஒரு கோவில் குளத்திற்கு செல்ல ,பரிந்துரைத்தோ, இல்லை தாங்களும் முன்னின்று அழைத்துச் சென்று தெய்வீகமான  சிந்தனைகளைை வலியுறுத்தி, வளர்ப்பவர்களாக,🙏

 நல்லது கெட்டதுக்கு ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லும் ஜோசியராக, இத்தனைக்கும் மேலாக அந்த வீட்டு குடும்பத்தினரால், மரியாதையாக நடத்தப்படும் அத்தனையும் தெரிந்த பெரியவர்களாக மதிக்கப்பட்டு வந்தார்கள். 🙏

நாளடைவில், நாகரீகமும், சுயநலங்களும், பெருக பெருக, தனித்தனி வாழ்க்கை, அதில் வரும் சின்னச்சின்ன இன்பங்களுக்கு  மனிதர்கள் அடிமையாகி, கூட்டுக் குடும்பங்கள் நெரிசல்களில் சிக்கிய வாகனங்களாக உருமாறி நசுங்கிப் போய் விட்டது. 

பெரிய  விருஷமாக ஆலமரங்களாய் கிளை விட்டபடி சேர்ந்து பரவி கிடந்த கூட்டுக் குடும்பங்கள்  மலிந்து நாளடைவில் அவை வளைந்து, நெளிந்து இயற்கையாகவே எந்தவொரு புயலுக்கும் சவால் விட்டபடி காலுன்றி இருக்கும் நாணல் புற்களாக சமாளித்து வந்த போதிலும், அந்த சமாளிப்புகளையும், புதுப்புனலாக வந்த  நாகரீக மோகங்களும், சுயநல தாகங்களும் கூடவே இணைந்து கைகோர்த்தபடி கொண்டாடி, சிதறடித்து விட்டன. 

இந்த இடைவெளியில் பெரியவர்களின் அறிவுரைகள் அவசியமில்லாததாக ஆகிப்போயின. ஏட்டுப் படிப்பறிவு மட்டும் பெற்று, சிறப்பாக வாழ்ந்த அவர்களின் வாழ்க்கைக் கல்விகள், அனுபவ பாடங்கள் நம் சுதந்திரத்தை பாதிப்பதாக நினைத்த தவறான முடிவுகளில், நாம் தனியாக ஒதுங்க, அவர்களின் ஆலோசனைகள் என்ற ஒரு "பாடப்பகுதியை" நாம்  எந்த கல்வி நிலையங்களிலும் பெறாமலே பட்டம் வாங்கி, பணம் நிறைத்தும் பயனற்று வாழ்கிறோம். ஆனால் அவர்களின் வாழ்க்கைப் பாடங்களை முறையாக பின் பற்றியிருந்தால், இன்று எத்தனையோ நன்மைகள் இனியதாக நம்மை தொடர்ந்திருக்கும். 

வாட்சப்பில் சுற்றுலாவாக வந்து என்னை கவர்ந்த இந்த வரிகள் "இனியேனும் இவற்றை பின்பற்றுங்கள்" என்பதாக வந்திருக்கும் வாசகங்கள் இவையனைத்தும், இனியேனும்  நம் சந்ததிகளுக்கு எப்போதும்  பிடித்திருந்தால் சரிதான்!!

இதோ அந்த வாசகங்கள்.
பாட்டி அடிக்கடி சொல்லுவாள்... 

நீரால் கோலம் போடாதே
நெற்றியைக் காலியாய் விடாதே
குச்சியைக் கொளுத்தி வீசாதே
இரவில் ஊசியை எடுக்காதே

கால் மேல் காலைப் போடாதே
காலையில் அதிகம் தூங்காதே
தொடையில் தாளம் போடாதே
தரையில் வெறுமனே கிடக்காதே

மலஜலம் அடக்கி வைக்காதே
நகத்தை நீட்டி வளர்க்காதே
ஆலயம் செல்லத் தவறாதே
அதிகமாகப் பேசாதே

எண்ணெய் தேய்க்க மறக்காதே
சந்தியில் நீயும் உண்ணாதே
விரிப்பைச் சுருட்ட மறக்காதே
பகலில் படுத்து உறங்காதே

குளிக்கும் முன்பு புசிக்காதே
ஈரம் சொட்ட நிற்காதே
நாமம் சொல்ல மறக்காதே
நல்ல குடியைக் கெடுக்காதே

தீய வார்த்தை பேசாதே
நின்று தண்ணீர் குடிக்காதே
எதையும் காலால் தட்டாதே
எச்சில் பத்தை மறக்காதே

எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே
எந்தன் குடியில் மூத்தோரே
எல்லாம் கேட்டு வாழ்ந்தோரே
என்றும் வளமாய்த் தீர்வோரே

என்ன அழகான வரிகள்! இதை முதலில் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே! 

சொல்லலாம். அதற்கு முன் இவைகளை அழகாய் சொல்லும் திறனை நமக்கும், ஆசையாய் கேட்கும் அவகாசத்தை அவர்களுக்கும், உருவாக்கித் தரும் கால நேரங்களை இறைவனிடம் நாம் கண்டிப்பாக கேட்டுப் பெற வேண்டும் .. 🙏...