Wednesday, August 14, 2019

மன மாற்றம்.

விசாலி உறுதியாக சொல்லி விட்டாள். நாளையிலிருந்து ஒருவர் மாற்றி ஒருவராக வீடு சுத்தம் செய்ய வேண்டுமென்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென உறுதியாய் சொல்லி விட்டாள். நானும் ஒரு வ (வீ) ம்பில் சரியென சம்மதம் தந்து விட்டேன்.

வம்பென்றால் அது  இதுதான்....
"பூ... இது என்ன பொல்லாத வேலையா? வீடு பெருக்கி, துடைத்து பாத்திரங்களை சுத்தம் செய்வது இதெல்லாம் ஒரு கடுமையான வேலையா? இதற்கு இத்தனை பில்டப்பா உனக்கு? என்னமோ நீ ஒருத்திதான் இதை நித்ய கர்மாவாக செய்கிற மாதிரியும், நாங்கெல்லாம் ஏதோ உன் செயலுக்கு ஏதோ அபகீர்த்தி பண்ற மாதிரியும் என்ன ஒரு அலட்டல் உனக்கு..! இது பொல்லாத வேலையா? இதை சாக்கிட்டு எத்தனை நாள் எங்களுக்கு பண்ண வேண்டிய (காலை வக்கணையாய், வாய்க்கு ருசியாய் பண்ற டிபனை)  வேலைகளை ஒத்தி வைச்சோ, இல்லை நிராகரித்தோ, இருந்திருக்கிறாய் ! இதுதான் வம்புக்கு முதல் படிகளும், அதற்கு ஏற்றிச்சென்ற மேற்படி படிகளும்.

 வீட்டு வேலைகளுக்கு  உபகாரத்துக்கென்று  ஒரு ஆள் கூட வைத்துக் கொள்ளாமல், திருமணமாகி பதினைந்து வருடங்களாக, பள்ளிக்குச் செல்லும் இரு குழந்தைகளையும், வாய்க்கு ருசியாக குக்கரில் சாதம் என்ற வஸ்துவை கூட சமைக்கத் தெரியாமல், அதட்டி உருட்டி (அன்பாகத்தான்)   "வெளியில் சென்று வேலை பார்த்து குடும்பத்தை நிமிர்த்துவது மட்டுந்தான் என் வேலை"  என்ற கண்டிப்போடும், "மற்றபடி குடும்பத்தை நீதான் பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டுமென்று" (ஐஸ்) வைத்து ஒப்பேற்றி வரும் என்னையும், சமாளித்து வாழ்ந்து வருபவள் விசாலாட்சி என்ற என்னருமை மனைவி விசாலி.

திடீரென ஒரு நாள் அவளுடைய இயலாமையை சுட்டிக் காட்டி அவள் அக்கம்பக்கம் தோழிகள் உபதேசங்கள் செய்ததையும்,( அதை அவளே அவள் வாயால் சொன்ன வாக்குமூலங்கள்தான்.! இல்லையென்றால் எனக்கு எப்படி தெரியும்?) ஒரு துணையாளை வைத்துக்கொள்ள சிபாரிசு செய்ததையும் சொல்ல ஆரம்பித்து விட்டாள்.

 சில வீட்டு தோழிகள் இந்த மாதிரி துணையாளை வைத்துக் கொள்வது விட நம் துணைவனையே அவ் வேலைகளுக்கு "பக்கபலமாக" வைத்துக் கொண்டால், பணத்துக்கு பணமும் மிச்சம்.. நம்முடைய சுமைகளும் குறைந்து கூன் விழும் முதுகை நிமிர்த்தி காப்பாற்றலாம் என திருவாய் மொழிந்தருள , அதுவும் அன்றைய கூட்டத்தில் பலத்த கைதட்டல்களுக்கு நடுவே  "பரிந்துரை பேச்சாக" வந்ததாம். (இதுவும் அவள் சொல்லித்தான் எனக்கு தெரிந்தது. இதைச் சொல்வதில் தன்  கணவர் உஷாராகி விட்டால் என்ன செய்வது என்ற பயமில்லாமல், வெகுளி மனப்பான்மையில் அதையும் மறைக்காமல் சொன்ன இவளை இந்த விஷயத்தில்  பாராட்டியே ஆக வேண்டும்.)

ஆக இந்த விஷயங்கள் பொழுது போகாத ஒரு நேரம், பொழுதை போக்க வைத்த பேச்சுகளாக மாறி எங்களுக்குள் அலசபட்டதின் காரணமாக ஒரு துணையாளை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தது.

அந்த துணையாளைப்பற்றி ஒரு மாதகாலம்  விசாலியால்  கூறப்பட்ட புகழுரைகள்  நாளடைவில் "பெளர்ணமி தினத்திற்கு பின்வரும் நாட்களாய்" ஆகிப்போனதின் காரணம், அந்த துணையாளின் கவனகுறைவுகளும், அவர் எடுத்த சம்பளம் பிடித்தமில்லாத விடுமுறைகளுந்தான்.

அதன்பின் பக்கத்து வீட்டு தோழிகளின் துணையாளர்கள் ஷிப்டு முறையில் வந்து தோற்றுப் போயினர். அதன் காரணமும், "உன்னுடைய அதீதமான சுத்த கெடுபிடிகள்தான்" என" பழகிய வட்டாரங்கள்" எச்சரித்துப் பேசியதில் சற்று எரிச்சலாகி போனாள் விசாலி. . அந்த எரிச்சல்கள் என் மீது அடிக்கடி "அர்ச்சுனன் அம்பாக" பாய மேற்கூறிய வம்புக்கு  அது விதைகளாகின.

வருடக்கணக்காக ஒரே வேலைகளை கடமையாக செய்தும் அசராத விசாலி, ஆறுமாதம் பணி விலக்கி  பணி மாற்றி உழைத்ததில் கொடி மாதிரி இருந்தவள் கொஞ்சம் வளர்ந்த "கொடிக் காயாய்" ஆனதில், அக்கம்பக்கம் விசாரிப்புகள் பலமாகி அவளிடம் இதுவரை இல்லாத பிணிகள் தஞ்சமாக வந்து அடைக்கலம் தேடியதோடு, தனக்கு  "பேர்கிடைத்த சந்தோஷத்திலே," மருத்துவரை சந்திக்க மனம் குளிர பயணித்தன.

இப்படியாக நாட்கள் நகர்ந்து பார்த்து தோல்வியுற்றதில், அந்த ஒரு "வம்பு நாள்" எனக்கு சோதனையாக அமைந்தது. அதுதான் விசாலி என்னிடம் நாம் இருவருமாக ஒருநாள விட்டு ஒருநாள் வேலைகளை பங்காக்கிக் கொள்ள வேண்டுமென " ஒப்பந்த தாள்" இல்லாமலே, முடிவாக்கிய நாள்.

மறுநாள் காலை சீக்கிரம் எழுந்து என் கடமைகளை  துடைப்பத்தின் துணையுடன் கைப்பிடித்தேன். பெருக்கி,  துடைத்து, அவள் சமையல், டிபனை முடித்துப் போட்ட பாத்திரங்களையும்., அதற்கு முன்பே எனக்காக காத்திருந்த பாத்திரங்களையும் கழுவி முடித்து நிமிரும் போது, மணி ஒன்பதை காட்டியது.

இடையிடையே விசாலியின் "கரெக்ஷன் குரல்" வேறு இரண்டு மூன்று முறை நான்   செய்த வேலையை "இம்போஸிஷன்"  செய்ய வைத்தது.  பழக்கமில்லாத வேலையை செய்ததில் என் முதுகும் அறையிலிருந்த பீரோ கண்ணாடியை பார்த்து தாண்டிய போதெல்லாம் ஒன்பதை நினைவூட்டியது.

என் மகன்கள் பள்ளிக்கு கிளம்பும் அத்தனை அவசரத்திலும், என்னை நமுட்டு சிரிப்புடன் பார்த்து கடப்பதாக தோன்றியது. அப்போதெல்லாம் வேர்த்து விறுவிறுத்த  முகத்தை சிரிப்பால் துடைத்தபடி "அப்பா எப்படி? சுறுசுறுப்பாக வேலைகளை முடிக்கிறேனா ? " என்று "பரீட்சை முடிவு" எதுவும் எதிர்பார்க்காத "பிரி. கே. ஜி குழந்தை" மாதிரி கேட்டாலும், "நீங்களும் இப்படி மாட்டும் நாள் வெகு தூரத்தில் இல்லையடா" என மனதுக்குள் (ஒரு சந்தோஷத்துடன்) சொல்லிக் கொண்டேன். ஆக ஒன்பதரைக்குள் நான் அவசரமாக ரெடியாகி ஆபீஸ் கிளம்பும் போது, விசாலி அன்றைய வேலைகளை முடித்து விட்ட "திருப்தியோடு" எனக்கு  விடை கொடுத்தாள்.

ஒரு மாதம் வரை இப்படி ஒடியது. அவள்  முறை வரும் போது, என் வேலையாக காய்கள் நறுக்குவது, குக்கர் எப்படி ஒழுங்காக வைப்பது, தோசை, இட்லி வார்ப்பது என சின்ன சின்ன வேலைகளும் கொஞ்ச கொஞ்சமாக என் வசமாகிப் போனதில் நான் இப்போது பாதி "குடும்ப பொறுப்பாளானாக" பதிவி உயர்வு பெற்றேன்.

இத்தனை நாள் விசாலி அவளே செய்து வந்த வேலைகளின் கடினங்கள் புரிய ஆரம்பித்தன. பாவம். .! எனக்காகத்தானே அவள் "எள்ளத்தைனை" வேலைகளை கூட என்னிடம் தராது அவளே பார்த்து, பார்த்து செய்திருக்கிறாள் என்ற பச்சாதாபம் மனதுள் பொங்கிய பிரவாகமாக  ஆர்பரித்தெழுந்தது. ஆனால் வீட்டின் வேலைகளுக்கிடையே அலுவலகத்து கெடுபடிகளும் சேர்ந்து என்னைக் கொஞ்சம் களைப்படைய வைத்ததென்னவோ உண்மை. அடிக்கடி இப்படி  களைப்படையும் காரணத்தை மருத்துவரிடம் சென்று விசாரிக்கும்  எண்ணமும் எனக்கு அடிக்கடி எற்பட்டது.  இருந்தாலும் "பச்சாதாப அலைகளின்" விளைவாய் விசாலியிடம் ஒன்றும் காண்பிக்காது நான் இருந்ததில் மாதங்கள் கடந்து குழந்தைகளில் பெரியவன் கல்லூரியில் காலடி எடுத்து வைத்து விட்டான்.

"என்னங்க மணி எட்டு.. இப்படி தூங்கறீங்க? இன்னைக்கு சன்டே குழந்தைகளுடன் எங்கேயாவது போயிட்டு வரலாமா?" சியாமளா அசந்து தூங்கிய கணவனை எழுப்பினாள். 

எழுந்து நீண்ட சோம்பலொன்றை விட்டபடி மீண்டும் படுத்தான் தியாகு.  "ஆமாம் எங்கே போறது? தீபாவளி வேறு நெருங்கியாச்சு... அந்தச் செலவெல்லாம் இருக்கு. நீ என்னவோ இன்னைக்கு வீடெல்லாம் க்ளீன் பண்ணுன்னு  வேறு சொல்லிகிட்டிருந்தே! அது தவிர இப்படி எங்கே போனாலும் காசு செலவுதான்... என்றான் முணுமுணுப்பாக. 

"அதெல்லாம் இருக்கட்டும்! அடுத்தவாரந்தானே பண்டிகை. அதுக்குள்ளே வீடு சுத்தம் செஞ்சிட்டு போச்சு! இன்னொன்னு ! பக்கத்து வீட்டுக்கு  இப்பத்தான் புதுசா வந்திருக்கிற உதவியாளரை இங்கேயும் நம்ப வீட்டுக்கும் வந்து வேலைக்கு ஒத்துக்க ஏற்பாடு பண்ணிடலாமா ? ..." 

நீயா? அனாவசியமா பணம் செலவழிக்க உனக்குப் பிடிக்காதே. ! செலவை மிச்சபடுத்தனும்தானே,யார் சொல்லியும் கேக்காம  நீயும் நானும் இந்த வேலையெல்லாம் செய்றோம். இன்னைக்கு எனக்குன்னு ஒரு வேலை வேறே இருக்கு.. அது சரி.! உனக்குள்ளே எப்படி இந்த தீடீர் மாற்றம்?" என்றான் தியாகு சற்று கேலியாக. 

ஆமாம்..நான் கொஞ்சம் ஆரம்பத்திலிருந்தே சிக்கனந்தான்... அதனாலே நம்ப வீட்டு வேலையே நாமளே பண்ணிட்டா அந்த பணம் வேறு எதுக்காவது பயன்படுமேன்னு யோசிப்பேன். ஒரு விதத்துல அதுவும்  கஞ்சதனந்தான்னு இப்ப உணர்ந்திட்டேன். 

எப்போதும் போல நீங்க எழுதுற கதையெல்லாம் வெளியிடுற பத்திரிக்கைக்கு அனுப்பி வைக்க நம்ப வீட்டு கதையையே கிண்டலும், கேலியுமாக பேர் மாத்தி கொஞ்சம் கருவும் மாத்தி எழுதி  ஒரு கதையை உருவாக்கி வைச்சதை நேற்று யதேச்சையா  நான் படிச்சுட்டேன். முடிவா நீங்க அதிலே ஏதாவது காமெடிங்கிற பேர்லே விபரீதமா சொல்லி கதையை சோகமயமா  மாத்துறதுக்குள்ளே உண்மையிலேயே நான் என் முடிவை மாத்திகிடனும்னு தோணிச்சு. இனி  சிக்கனமாக இருக்க வேண்டியதுதான்.  ஆனா அநாவசியமா கஞ்சத்தனம் பார்க்க கூடாதுன்னு முடிவு எடுத்திட்டேன். இந்த வாரம் நான் அவங்ககிட்ட பேசி வீட்டு வேலைகளுக்கு உதவியா  ஏற்பாடு செய்துடுறேன். இனி உங்களுக்கு, மட்டுமில்லை எனக்கும் கொஞ்சம் வேலை பளு குறையும். எழுந்திருங்க....! குழந்தைகளையும் ரெடி பண்றேன்... இன்னைக்கு நாமெல்லாம்  எங்கேயாவது ஜாலியா போயிட்டு, அப்படியே வெளியிலேயே சாப்பிட்டு வரலாம்.! " என்றபடி எழுந்த தன் மனைவியை ஒரு அதிசயத்தைப் பார்ப்பது போல் பார்த்தான் தியாகு . 

சிக்கனமாக இருக்க வேண்டுமென வார்த்தைக்கு வார்த்தை உபதேசித்து, தன்னையும் வருத்திக் கொண்டு, என்னையும் வேலைகள் வாங்கி, பணத்தை எண்ணி எண்ணி செலவு செய்த  தன் மனைவி தான் எழுதியதை பார்த்ததும் திருந்தி விட்டாள் என்பது ஆச்சரியப்பட வைத்தது.

அறைக்கு வெளியில் சென்றவள் மறுபடி உள்ளே வந்து, "நீங்க எனக்கு நல்லபடியா வேணும். கதையிலே உங்க உடம்பு படுத்துற மாதிரி இருக்கிறதை திருத்தி எழுதிடுங்க.. கதை முடிவுலே ஏதாவது அசுபமா மட்டும்  எழுதிராதீங்க. அதை என்னாலே தாங்கவே முடியாது... என் சிக்கன எண்ணத்தாலே நீங்க எவ்வளவு சொல்லியும் கூட மாட ஒத்தாசைக்கு ஆள் வைத்துக் கொள்ளாது இருக்கும் என் போக்கையும் பொறுத்துக் கொண்டு, நீங்க ஒருநாளைப்போல  ஆபீஸும் போய்கிட்டு, வீட்டிலேயும் தினமும்  எனக்கு உதவிகிட்டும்  வர்றீங்க. ஆனா, உங்க அசெளகரியத்தை நான் ஒருநாளும் புரிஞ்சுக்காமே இருந்திட்டேன்.  உங்களுக்கு, உங்க உடம்புக்கு கதையிலே வருகிற மாதிரி ஏதாவது பிரச்சனையென்றால், என்னாலே......என்னாலே.. ." என்றபடி  பேச முடியாமல் கண்ணீர் வழிய உணர்ச்சி வசபட்டவளை, "என்மீது உனக்கு இவ்வளவு பாசமா? என்று மனதுள் கொஞ்சமில்லாமல் நிறையவே பெருமைபட்டவனாய் எழுந்தவன்  பிரியமுடன் அவளின் கைப்பற்றி கட்டிலில் தன்னருகே  அமர்த்திக் கொண்டான் தியாகு. 
                             நிறைந்தது. 

அனைவருக்கும் 
சுதந்திரதினதி
நல்வாழ்த்துகள்.🙏.













     🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
                              நன்றி கூகிள்..