Sunday, May 6, 2018

நாகரீகத்திற்கு அா்த்தம் இல்லை - பகுதி 3

       "என்ன மிஸ்டர்... கண் மண் கூட தெரியாமல் என்ன ஞாபகம்??? அந்தப் பெண் தன் நெற்றியை அழுத்தமாக தேய்த்து கொண்டபடி கோபமாக கத்தினாள்....
      
        "ஐயோ" வெரி சாரி..." பதறியபடி கூறினான் பிரகாஷ்....

        "இப்படியெல்லாம், சாரி..  சொல்லிட்டா இடிச்சது சரியாயிடுமா???" அவள் கோபம் தணியாமல் ஆத்திரத்துடன்  சத்தமாக வினவினாள்.

         "மன்னித்து விடுங்கள்... ஏதோ நினைவுடன் நடந்து வந்து கொண்டிருந்தேன். தெரியாமல் மோதி விட்டேன்.. சாரி..." அவன் தடுமாறினான்...

        "இனி ரோட்டில் நடந்து செல்லும் போதெல்லாம் இப்படி 'ஏதோ', நினைவுடன் செல்லாதீர்கள்.. அது ஆபத்து.. " அவள் கிண்டலாக கூறியதும் அவளுடன் வந்திருந்த அவள் தோழிகள், 'கிளுக்', என்று சிரித்தார்கள்...

    அவன் அவமானத்தால் சிவந்த தன் முகத்தை கைகுட்டையால் துடைத்து கொண்டு சுதாரித்து கொண்டு நிமிர்ந்து பார்பதற்குள் அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்று விட்டாரகள்.  அவர்கள், நாகரீகம்.. என்ற பெயரில் செய்து கொண்டிருந்த அலங்கோலம் அவன் மனதை கொதிப்படைய செய்தது...

    கடற்கரை காற்று ஜில்லென்று வீசி வேலை செய்த களைப்பையெல்லாம் போக்க, மாலை நேரத்து இனிமையை ரசித்தபடி மணலில் அமர்ந்திருந்தான்.

கடலலை குழந்தைகள் சோம்பலில்லாமல்  வந்து வந்து கரையிலிருக்கும் மனிதர்களின் நாகரீகத்தை விமர்சித்து பின்னாலேயே ஓடி வரும் தன் சகாக்களிடம் சொல்லி கிண்டலடித்தபடி  குதூகலிப்பும் கும்மாளமுமாக சத்தமிட்டபடி மறுபடியும் தன் அன்னையின் மடி தேடி ஓடின.

இந்த இயற்கை, அதன் வனப்புகள்,  அதன் இயல்பான தன்மைகள், இவற்றை ரசிக்கும் மனப்பான்மை, அதிர்ந்து யேசாமல் அமைதி காக்கும்  சுபாவங்கள்,  தனக்கு ஏற்படும் சஞ்சலங்கள் எதையும் வெளிக்காட்டாமல், யாருடனும் அதிகம் பேசி யார் மனதையும் புண்படுத்தாத பாங்கு,  போன்ற குணங்கள் தன் தாயிடமிருந்துதான் தனக்கும் வந்திருப்பதாக  அவனுக்கு தோன்றியது...

இவனின் ஒதுங்கி இருக்கும் சுபாவத்தை, தானுண்டு தன் வேலையுண்டு என நினைத்து பழகும் மனப்பாங்கை ஏளனம் செய்து, இவன் நாகரீகமற்றவன், உலகம் தெரியாதவன் என்பது போல் இவனை எத்தனை நாட்கள் தந்தையும், கூடப் பிறந்தவர்களும், ஒதுக்கி வைத்து கேலி பேசி  உறவாடியிருக்கிறார்கள். படிப்பு முடிந்ததும் வேலை கிடைக்காத சந்தர்ப்பங்கள் வேறு இவனை இன்னமும் அந்நியன் ஆக்கி இருக்கின்றன....

உள்ளத்தில் ஒன்றை நினைத்துக் கொண்டு உதட்டளவில் மற்றொன்றை பேசுவதுதான் நாகரீகமா? இல்லை..  நாளொன்றுக்கு பகட்டும், ஜொலிப்புமாக உடையணிந்து, கை குலுக்கி,  நுனி நாவில் ஆங்கிலம் பேசி மனதுக்குள் ஆயிரம் வன்மங்களுடன் அனைவரிடம் பழகுவதுதான் நாகரீகமா? தன் எதிர்பார்ப்புகளை மற்றவரிடம திணித்து, "இப்படி இல்லையேல் இந்த சமூகத்தில் உனக்கு மதிப்பில்லை... ஏன் நானே உன்னை  ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்" என மற்றவரை நிர்பந்தித்து அறிவுரை என்ற பெயரில் அசிங்கப் படுத்துவதுதான் நாகரீகமா? இதில் எது தன்னிடம் இல்லையென  இவர்கள் தன்னை அலட்சியபடுத்தினர். புரியவில்லை.. அவனுக்கு..

அந்த சமயங்களில் அம்மாவின் ஆறுதல் வார்த்தைகள் மட்டும் துணையாக வரவில்லையென்றால், இவன் இன்று ஒரு முழுமனிதனாக உருவாகியே இருக்க இயலாது. கடலலை குழந்தைகள் கடலன்னை தேடி ஓடிய விதம் கண்டு இவனுக்கும் அம்மாவின் நினைவு வந்தது...

         "அண்ணனுக்கும் நம் உறவில் பார்த்து வைத்திருக்கும் பெண்ணைை மணம் முடித்ததும், உனக்கும் ஒரு நல்ல இடத்துலே பார்த்து மணமுடித்து விட்டால், எனக்கு கவலையில்லாமல் இருக்கும்.. எத்தனை நாட்கள் இப்படி வெளியில் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொள்வாய்? சுதா படிப்பு முடிந்துதான் திருமண பேச்சை எடுக்க வேண்டும் என பிடிவாதம் செய்கிறாள். பார்க்கலாம்... எது நடக்கிறதென்று... என்று அவனுடன் இருந்த ஒரு வாரத்தின் ஒரு நாளில் சொல்லி வருந்திய அன்புத் தாயின் சொற்கள் நினைவுக்கு வந்தது. அம்மாதான் எத்தனை பாசமுடன் மூவரின் வாழ்வையும் பற்றி ஒரே மாதிரி  யோசிக்கிறாள் ...

ஒரிரு நாளாவது விடுமுறை எடுத்துக் கொண்டு ஊருக்கு சென்று வரவேண்டும். அம்மா கையால் சாப்பிட்டு அவளின் அன்பான பேச்சுகளை கேட்டு வர வேண்டும்... என்ற சிந்தனையில் மனம் மகிழ்ந்து கொண்டிருந்தவனின் காலை, மணலில் நடந்து சென்ற யாரோ... சரக்கென்று மிதிக்கவும், காலை சடாரென்று இழுத்தபடி... "யார்??" என்றபடி தலை உயர்த்தி பார்த்தவன் திகைத்துப் போனான்!!!

         "ஐயோ!!! தெரியாமல் மிதித்து விட்டேன் சாரி.." என்று பதறியது, அன்று அவனுடன் வாதடிய அந்த பெண்....

         "இனிமையான உங்கள் சிந்தனையை கலைத்து விட்டேன் போலிருக்கிறது.." அவள், மறுபடியும் ஆரம்பிக்க அவன் அன்று பட்ட அவமானத்தின் வலி நினைவுக்கு வர, "சிந்தனை கலைத்தது மட்டுமில்லை.... காலையும் நன்றாக மிதித்து விட்டீர்கள்" என்றான் சற்று எரிச்சலாக...

         "சாரி, சாரி... கவனிக்காமல்..." என்று அவள் இழுத்தாள்...."

         "இப்படியெல்லாம் சாரி, சொல்லிட்டா, மிதிச்ச வலி சரியாயிடுமா?? " என்று அவன் குத்தலாக திருப்பி கேட்டதும், அவள் வாய் விட்டு கலகலவெனறு சிரித்தாள்...

         "நன்றாக  பேசுகிறீர்களே.. உங்களை பார்த்தவுடன் அன்று பேசியது நினைவுக்கு வர உங்கள் தனிமையை பேசிப்போக்கலாம் என்று வந்தேன் கால் தடுமாறி உங்கள் கோபத்திற்கு ஆளாகிவிட்டேன்.. வந்தது தப்பென்றால் வந்த வழியே திரும்பி போய் விடுகிறேன்.." அவள் பொய்யாக கோபப்பட்டாள்....

        "அதெல்லாம் ஒன்றுமில்லை; சும்மா விளையாட்டாக சொன்னேன்..." பிரகாஷ் தன் இயல்பின்படி அவசரமாக தடுத்ததும், அவள் சிரித்துக்கொண்டே அவனருகில் அமர்ந்துகொண்டாள்..

            "உங்கள் பெயர்?''

        "ரேணுகா.. பி.ஏ. பைனல் இயர் படிக்கிறேன்...."

        "அழகான பெயர்! நான் பிரகாஷ்.. நானும் பி.ஏ.தான்.. ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறேன்..."

        "அப்படியா! உங்கள் பெயரும் அழகாகத்தான் இருக்கிறது... ஏன் நீங்களுந்தான்..." அவள் ஒயிலுடன் சிரித்தாள்....

        ''அன்று நடந்ததையெல்லாம் மறந்து விடுங்கள்.. இன்றிலிருந்து நாம் நண்பர்கள்.." என்றபடி அவள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அவன் கைகளை பிடித்து குலுக்கினாள்....

          அவன் திகைத்துப் போனான்.. ''இதுதான் இக்கால நாகரீகமோ!"

 அவன் சாமளித்துக்கொண்டு... "உங்கள் வீடு எங்கேயிருக்கிறது? உங்களுடன் உங்கள் பெற்றோர்.." என்று தயக்கத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தபடி இழுத்தான்..

        "ம்.. எங்கள் வீடு மாமபலத்தில் இருக்கிறது.. நான்வீட்டிற்கு ஒரே பெண். அதுவும் என்அப்பா அம்மாவுக்கு செல்ல பெண். என் விருப்பத்திற்கு மாறாக எதுவுமே சொல்ல மாட்டார்கள். சுருங்க கூறினால் எங்கள் வீட்டில் நான்தான் ராணி. நான் வைத்ததுதான் சட்டம்.." மடமடவென்ற அவள் பேச்சில் கொஞ்சம் ஆணவம் மிகையாக இருப்பதாக அவனுக்கு தோன்றியது...

         "அப்படியா! நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். உங்களை பார்த்தால் எனக்கு கொஞ்சம் பொறாமையாக ௬ட இருக்கிறது.." என்றான் பிரகாஷ்.

        "இனி நீங்கள் என்னை 'நீ' என்றே அழைக்கலாம். கூடவே 'கள்' போட வேண்டிய அவசியமில்ல, எனக்கு நோ அப்ஜக்ஸன்" சிரித்த அவள் தோளை குலுக்கியபடி கூறிவிட்டு, "நான் வரட்டுமா, நாம் மறுபடியும் இனி இந்த இடத்திலேயே சந்திக்கலாம்" என்றபடி எழுந்தாள்.

         "அவனும் ஒப்புக்கு சிரித்தபடி எழுந்து அவளுக்கு விடை தந்தான். அவர்கள் நட்பு கூடிய விரைவில் நாளொரு இடமும், பொழுதொரு பேச்சுமாக, நாட்கள், வாரங்கள் மாதங்களை, துணைக்கழைத்து கொண்டு வளர்ந்தது....

ஒவ்வொரு சந்திப்பின் போதும் அவளது பேச்சில் மிடுக்கும், ஆணவமும்  மிகையாக தெரிந்தாலும்,  அவனின் சிந்தனைகளை செவிமடுத்து, அடிக்கடி தட்டிககொடுப்பது போல் பாராட்டவும், அவள் கொஞ்சமேனும் சளைக்கவில்லை.
தொடரும்...

இதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்.
பகுதி: 12

10 comments:

  1. ஆதரவற்றவர்களின் வாழ்க்கையில் இப்படியொரு பெண் நுழைந்தால் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.

    இவர்கள் காதல் திருமணத்தில் முடிய எமது அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      /ஆதரவற்றவர்களின் வாழ்க்கையில் இப்படியொரு பெண் நுழைந்தால் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.

      இவர்கள் காதல் திருமணத்தில் முடிய எமது அட்வான்ஸ் வாழ்த்துகள்./

      ஆம். புது உறவுகள் கண்டிப்பாக மகிழ்ச்சியை தரும். ஆனால் அது முழுமையான மகிழ்ச்சியாய் இருந்தால் நல்லது.

      தங்கள் வாழ்த்துக்கள் பலிக்கட்டும்.

      தொடர்ந்து வந்து கருத்திடுவதற்கு மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. உண்மையில் நான் கதையின் முடிவையும் படித்து விட்டேன். இரண்டு நாட்களுக்கு முன் நீங்கள் கவனிக்காமல் பப்ளிஷ் செய்திருந்தீர்கள்! எனவே முடிவும் தெரியும். கமெண்ட் எழுதி போடவருவதற்குள் போஸ்ட் காணாமல் போனது!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      ஆகா.. தவறை உணர்வதற்குள் இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதா? அட ராமா.. சகோதரர் ஸ்ரீ ராம் படித்தறிந்த கதையின் முடிவை எப்படியாவது அவர் நினைவிலிருந்து அகற்றி மறக்கச் செய்து விடு.. நான் நாளை கதையின் முடிவை வெளியிடும் போது அவருக்கு முடிவு புதிதாகவே இருக்கட்டும். ஆண்டவனே செய்வாயா? ஹா. ஹா ஹா. ஹா. ஹா.

      செல்லில் சரி பார்த்துக் கொண்டிருந்த போது, எனக்கெதிராக விரல்கள் செய்த சதி இது.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். முடிவின் கருத்துக்களை முடிவில் வெளியிடுங்கள். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. அமைதியாக ஓடி கொண்டு இருந்த நதியில் ஒரு குறிக்கீடு போல ரேணுகா வரவு.

    அமைதியும், ஆணவமும் ஒன்று சேருமா?
    பார்ப்போம். காத்து இருக்கிறேன் அடுத்த பதிவுக்கு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      /அமைதியாக ஓடி கொண்டு இருந்த நதியில் ஒரு குறிக்கீடு போல ரேணுகா வரவு/

      ஆம் உண்மை.. அமைதி சூழலில் புயல் உருவானால் கஸ்டந்தான்.

      அமைதியும் ஆணவமும் ஒன்று சேருமா?
      நாளை வரும் முடிவை காண காத்திருக்கிறேன் கூறி கதையை தொடர்வதற்கு என் மகிழ்வுடன் கூடிய நன்றிகள் சகோதரி...

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. நேற்று முன் தினம் என்று நினைக்கிறேன். பப்ளிஷ் செய்து டைட்டில் இல்லாமல் லிங்க் வரவே இல்லை....இப்போது பார்த்தால் 4ம் வந்துள்ளது. எப்போது 3 வந்தது என்று தெரியாமல் போச்சு. இதோ இப்போது ரெண்டு பகுதியும் வாசிக்கிறேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ

      உண்மைதான்.. எனது செல்லில் கதையை சிறு சிறு திருத்தங்கள் செய்து கொண்டிருந்த போது தவறுதலாக கைபட்டு பதிவு வெளியாகி விட்டது அதை சரி செய்து விட்டு, மறுநாள் மாலை வெளியிட்டேன்.
      இப்போதும் வந்த இரண்டு பகுதியையும் சேர்த்து படித்ததற்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. இதோ அடுத்த பகுதியும் பார்க்கிறேன்...முடிவு ஓரளவு கணிக்க முடிகிறது பார்க்கிறேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      இரண்டையும் சேர்த்து வாசித்துப் பார்த்து கருத்துக்கள் தந்தமைக்கும் தொடர்ந்து வந்து கதையை படித்து எனக்கு ஊக்கமளித்தமைக்கும் மிகவும் நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete