Friday, March 14, 2014

தோழியின் சாதுர்யம்



ந்தி சாயும் முன்பே,
அந்தப்புரம் ஏகிவிடலாமென,
அந்தரங்க தோழியின், அதி
அற்புத யோஜனையில்,
புரம் விட்டு விலகி, அவள்
கரம்  பிடித்து  குலாவி,
தனித்துச்சென்று  வர,
தந்தையின் அனுமதி பெற்று,
புரவி ஏறி விரைந்து, விழிகண்ட
புதுப்புனலில்  நீராடி,
பச்சைப் பைங்கிளிகளாய் சுதி பாடி,
பழந்துகில்களை  களைந்து,
பட்டாடை தனை உடுத்தி,
பரவசித்து, வரும்வழியில்,
கற்த்தூண்  மண்டபமும்,
கண்கவர் சோலையழகும் கண்டு,
“இங்கு சற்று இளைப்பாறலாமா? “என
இன்பமுடன் வினவிய சேடிக்கு,
இமை அசைவால் இசைவு தர,அங்கிருந்த
தடாகக்கரை ஒரம் அமர்ந்து,
தலை கேசம் தனை உலர்த்தி,
தளர்வாய்  பின்னலிட்டு,
தலை கொள்ளா பூச்சூட்டி, என்னை
தழுவிக்கொண்ட தோழி!”என்
கண்ணான தலைவியே! தற்சமயம்,” தங்கள் மனம்
கவர்ந்த கள்வர் இங்கிருந்தால்,
என்னவளின் இணையற்ற அழகிற்க்கு,
என்ன விலை தருவதென்று,?
விளங்காமல், விக்கித்து,
வியந்திருப்பார்!” என்றவுடன்,
வெட்கிச் சிவந்த , என்
வதனத்தை  தொட்டணைத்து,
வருடியவள்,” ராஜகுமாரி! இந்த
மகிழ்வான நேரத்தில், தங்கள்
மனம் கவர்ந்த,மிக பிடித்தமான,
கண் கட்டி விளையாட்டை,
களிப்புடன் ஆடலாமா? என
விளம்ப , விரும்பி தலையசைக்குமுன்,
விசையாய் என் விழி கட்டி,
“உங்கள் ஆசைகள் நிறைவேறும்
உன்னதமான நேரமிது!...
தங்கள் தவிப்பகன்று, தனிமை மறையும்
தருணமிது!..”. என செவி ஓரம்
புதிரிட்டவள், என்னறிவில் சிறிது
புலப்படும் முன்னே!, என்னை
புறந்தள்ளி, என் புஜம் பற்றி,
புழுதி பறக்க சுற்றிச்சுழல விட்டு,
புள்ளி மானாய் துள்ளி மறைந்தாள்.

           குரல் வந்த திசை  நோக்கி, கை
விரல் நீட்டி தட்டு தடுமாறி,
பயனித்த  பாதையில்,
பாதம் வருடியது,  அப்பரந்த
சோலையின், வளமையான
செடிகளும், கொடிகளும்.
“ பூம் பாவை! எங்கிருக்கிறாயாடி?..”
பதட்டத்துடன்  குரல்  எழும்பி,
பரிதவித்து வந்தொலித்த மறுநொடி,
“பூம்பாவையை தேடும் பூங்கோதையே!.. இந்த
புது மலரின் வருகைக்கும்,
வருகை தரும் இனிய உறவுக்குமாய்,
வந்து காத்திருக்கும், இந்த
மன்னனையும்,  சற்று
மனம் கனிந்து திரும்பி பார்!”…
காற்றுடன் குரல் காதில் கலக்க,
கண்மூடிய திரைச்சீலையை,
கணநேரத்தில் கைப்பிரிக்க,
கண்எதிரே நின்ற கட்டிளம்
காதலனை கண்டதும், கன்னம் சிவக்க, மனம்
களிப்புற்றாலும், கலக்கமான குரலில்,
“நீங்கள் எங்கணமிங்கே?..
நீங்கள்  இவ்விடம் வந்தது,
பூம்பாவை அறியுமுன் நீவிர்
 புறப்பட்டு செல்வீராக!”..என
சொல்லி முடிக்கும் முன்
எள்ளி நகையாடினான்,, அந்த
எதிர் நாட்டு மன்னனவன்…
அருகில் வந்து கரம் பற்றி
அழைத்துச்சென்று மலர் மேடையில்
அமர வைத்தவன் , “தேவி! உனைக்காண
இந்நந்தவனத்து வண்டுகளுடன் ,ஒருவண்டாக
இந்நேரம் நான் சுற்றியதை  உன்
இனிய தோழியும் அறிவாள்! உன்
பூந்தோட்ட புறப்பாடு,உன் தோழி
பூம்பாவையின் ஏற்பாடு!
சந்தேகமெனின் உன் தோழியை
சடுதியில் அழைத்துவரவா?...”
பரிகாச பேச்சுக்களை,அவன் பலவாறு
பகிர்ந்து கொண்டிருந்தாலும், தோழியின்
சாதூா்யத்தை எண்ணி மனம் மட்டற்ற
சந்தோஸமடைந்திருந்தது….
“வரட்டும் ! அவள் !,கள்ளி, பேசிக்கொள்கிறேன்!”
வாய்க்குள் கறுவிக்கொண்டாலும்,தற்சமயம்
வந்து விடாமலிருக்க, மனம் கணநேரமும்
விடாது வேண்டிக்கொண்டிருந்தது!……….

2 comments:

  1. இந்தக்கவிதை சகோதரர் திரு .வெங்கட் நாகராஜ் அவர்களின்
    ஓவியக்கவிதைக்காக எழுதினேன். ஆனால் இது மிகவும் நெடிதாக இருப்பதாக, எனக்கு கணணியில் எழுத உதவும் என் உதவியாளர்கள், (என் மகனும், மகளும்) கருத்து ௯றியதால், வேறொன்றை எழுதி ஓவியக்கவிதைக்கு அனுப்பி வைத்தேன். அதை அவர் பதிவில் வெளியிட்ட சகோதரர் திரு .வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு இப்போதும் நான் நன்றி ௯றி கொள்கிறேன். என் முதல் கவிதையை தற்சமயம் என் பதிவாக பகிர்கிறேன். குற்றம் குறை இருப்பின் பாராட்டாக ஏற்றுக்கொள்கிறேன் .

    நன்றி!... வணக்கம்!....

    அன்புடன் , கமலா ஹரிஹரன்....

    ReplyDelete
  2. வணக்கம் தனபாலன் ஐயா,

    தங்களின் வருகைக்கும் பகிர்வுக்கும் கவிதையை ரசித்தமைக்கும் மனமார்ந்த நன்றிகள்...

    ReplyDelete